Sunday 31 October 2010

தமிழ்

புதுப் பயனர் உதவி | தமிழ்த் தட்டச்சு உதவி | Tamil font help | ஆலமரத்தடி | ஒத்தாசை | தமிழ் அகரமுதலி | தமிழ் விக்கி செய்திகள்
விக்கி மாரத்தான் | நவம்பர் 14, 2010 - சென்னை விக்கியர் சந்திப்பு | கட்டுரைகள் பதிவேற்றும் பணி
தமிழ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.


மெய்யெழுத்துக்களில் ஒன்றான ழகரம் தரும் ஒலி தமிழிலும் மலையாளத்திலும், மாண்டரீன் சீனம் உட்பட்ட சில மங்கோலிய மொழிகளில் மட்டும் காணப்படுகிறது
தமிழ் (தமிழ்)
நாடுகள்: இந்தியா, இலங்கை மற்றும் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலும் மேலும் பல நாடுகளில் புலம் பெயர்ந்தவர்களும்.
பிரதேசங்கள்: ஆசியா மற்றும் உலகெங்கணும் ஆங்காங்கே பேசப்படுகின்றது.
பேசுபவர்கள்: 77 மில்லியன் (1999-ல்)
நிலை: 18 (1996-ல்)[4]
மொழிக் குடும்பம்: திராவிட மொழிக் குடும்பம்
தென்பகுதி
தமிழ்-கன்னடம்
தமிழ்-குடகு
தமிழ்-மலையாளம்
தமிழ்
அரச ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: இந்தியா, இலங்கை மற்றும் சிங்கப்பூர்
Regulated by: தமிழகத்திலும், இலங்கையிலும் உள்ள பல்வேறு அமைப்புகள் மற்றும் அவற்றின் அரசுகள்
மொழிக்கான குறீடுகள்
ISO 639-1 ta
ISO 639-2 tam
SIL TCV
இவற்றையும் பார்க்கவும்: பகுப்பு:மொழிகள்
தமிழ் தமிழர்களின் தாய்மொழி. தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முக்கிய மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். தென்னிந்தியாவில் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும், சிங்கப்பூரிலும் அதிக அளவில் பேசப்படும் இம்மொழி, துபாய், மலேசியா, தென்னாபிரிக்கா, மொரீசியஸ், பிஜி, ரீயுனியன், டிரினிடாட் போன்ற பல நாடுகளிலும் சிறிய அளவில் பேசப்படுகிறது. 1996-ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி 50 இலட்சம் (85 மில்லியன்) மக்களால் பேசப்பட்டு, ஒரு மொழியை, தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட மொழிகளின் பட்டியலில், தமிழ், பதினெட்டாவது இடத்தில் உள்ளது.[1]

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒருசில செம்மொழிகளில் ஒன்றாகும்.[2] திராவிடமொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளீல் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் [3] மேலும் கவனமாகப் பழைய அமைப்புகளைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடைகூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலை உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசை ஆத்திசூடி 1000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றியது. திருக்குறள் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் இயற்றியது.
பொருளடக்கம் [மறை]
1 வரலாறு
2 மொழிக்குடும்பம்
3 சொற்பிறப்பு
4 தமிழ் பேசப்படும் இடங்கள்
4.1 ஆட்சி மொழி அங்கீகாரம்
4.2 இந்தியாவில் செம்மொழி அங்கீகாரம்
5 பேச்சுத்தமிழ் - உரைநடைத்தமிழ் வேறுபாடுகள்
5.1 வட்டார மொழி வழக்குகள்
6 எழுத்துமுறை
6.1 தமிழ் எழுத்துக்கள்
6.2 கிரந்த எழுத்துக்கள்
7 தமிழ் ஒலிப்புமுறை
7.1 உயிர் எழுத்துக்கள்
7.2 மெய் எழுத்துக்கள்
7.3 சிறப்பு எழுத்து - ஆய்த எழுத்து
7.4 ஒலிப்பியல்
7.4.1 குறுக்கம்
7.5 எண் குறிகள்
7.6 எண் ஒலிப்பு
8 இலக்கணம்
9 சொல் வளம்
9.1 கலைச்சொற்கள்
10 தமிழ்த் தாய் வாழ்த்து
11 தமிழ்ப் பற்று
12 தமிழ் மொழி ஆய்வு மற்றும் வளர்ச்சி அமைப்புகள்
13 மேலும் காண்க
14 உசாத்துணைகள்
14.1 பழங்காலக் குறிப்புகள்
14.2 தற்காலக் குறிப்புகள்
15 வெளி இணைப்புகள்
15.1 பொது
15.2 தமிழ் மொழி கற்றுக்கொள்ள உதவும் ஆதாரங்கள்
[தொகு]வரலாறு

முதன்மைக் கட்டுரை: தமிழ் மொழி வரலாறு
தமிழ் இந்திய மொழிகளில் மிக நீண்ட இலக்கிய இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கி.மு 300-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவைகளாகும் (மகாதேவன், 2003).[4] இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 1,00,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 55,000 க்கும் அதிகமானவை தமிழில் உள்ளன. பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் படியெடுப்பதன் (பிரதிபண்ணுவது) மூலம்) அல்லது வாய்மொழி மூலம் வழிவழியாக பாதுகாக்கப்பட்டுவந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட் சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கும், கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கிமு 200 அளவில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியை கிமு 500 அளவுக்கு முன் தள்ளியுள்ளன.[5] பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க காப்பியம், கி.பி 200 - 300 காலப்பகுதியைச் சேர்ந்த சிலப்பதிகாரம் ஆகும்.


பதினைந்தாம் நூற்றாண்டிலோ பதினாறாம் நூற்றாண்டிலோ எழுதப்பட்ட கிறித்தவ சமய வழிபாட்டு ஓலைச் சுவடிகள்

தமிழறிஞர்களும் மொழியலாளர்களும் தமிழ் இலக்கியத்தினதும் தமிழ் மொழியினதும் வரலாற்றை ஐந்து காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர். இவை:
சங்க காலம் (கிமு 300 - கிபி 300)
சங்கம் மருவிய காலம் (கிபி 300 - கிபி 700)
பக்தி இலக்கிய காலம் (கிபி 700 - கிபி 1200)
மத்திய காலம் (கிபி 1200 - கிபி 1800)
இக்காலம் (கிபி 1800 - இன்று வரை)
பக்தி இலக்கிய காலத்திலும், மத்திய காலத்திலும் பெருமளவு வடமொழிச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டன. பிற்காலத்தில் பரிதிமாற் கலைஞர், மறைமலை அடிகள் முதலான தூய்மைவாதிகள் இவை தமிழிலிருந்து நீக்கப்பட உழைத்தனர். இவ்வியக்கம் தனித்தமிழ் இயக்கம் என அழைக்கப்பட்டது. இதன் விளைவாக முறையான ஆவணங்களிலும், மேடைப் பேச்சுகளிலும், அறிவியல் எழுத்துக்களிலும் வடமொழிக் கலப்பில்லாத தமிழ் பயன்பட வழியேற்பட்டது. கி.பி 800 க்கும் 1000 இடைப்பட காலப்பகுதியில், மலையாளம் ஒரு தனி மொழியாக உருவானதாக நம்பப்படுகின்றது.
[தொகு]மொழிக்குடும்பம்

தமிழ் தமிழ் மொழிகள்|தமிழ் மொழிக் குடும்ப]]த்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும். இக் குடும்பத்தில், இருளா, Kaikadi, பேட்டா குறும்பா, Sholaga மற்றும் Yerukula என்னும் மொழிகள் அடங்கும். தமிழ் மொழிக் குடும்பம், தமிழ்-மலையாளம் மொழிகளின் ஒரு துணைக் குடும்பமாகும். தமிழ்-மலையாளம் மொழிகள், தமிழ்-குடகு மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும், தமிழ்-குடகு மொழிக் குடும்பம், தமிழ்-கன்னடம் மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும் உள்ளன. தமிழ்-கன்னடம் மொழிக் குடும்பம், திராவிட மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவுகளுள் ஒன்றான தென் திராவிட மொழிக் குடும்பத்தின் உட் பிரிவுகளுள் ஒன்றாகும்.

தமிழ் நாட்டை எல்லையாகக் கொண்டுள்ள, கேரள மாநில மக்களால் பேசப்படும் மலையாளம், சொற்கள், வசன அமைப்பு ஆகிய அம்சங்களில் தமிழை நெருக்கமாக ஒத்துள்ள ஒரு மொழியாகும். ஏறத்தாழ ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழும், மலையாளமும் ஒரே மொழியின் இரு வட்டார வழக்குகளாகவே இருந்து வந்தன. இரு பகுதியினருமே இம் மொழியினைத் தமிழ் எனவே வழங்கிவந்துள்ளனர். மலையாளத்துக்கும், தமிழுக்கும் இடையிலான வேறுபாடுகள் சில, வரலாற்றுக்கு முந்திய காலம் தொட்டே கிழக்குத் தமிழ் வழக்கிற்கும், மேற்குத் தமிழ் வழக்கிற்குமிடையே பிரிவு ஏற்படத் தொடங்கியதைக் காட்டுவதாக அமைகின்ற போதும், தெளிவாக இரண்டு தனி மொழிகளாகப் பிரிந்தது 13 ஆம் 14 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியிலேயே ஆகும்.
[தொகு]சொற்பிறப்பு

தமிழ் என்னும் சொல்லின் மூலம் பற்றிப் பலவிதமான கருத்துக்கள் உள்ளன. தமிழ் என்ற சொல் த்ரவிட என்னும் சமஸ்கிருதச் சொல்லின் திரிபு எனச் சிலரும், தமிழ் என்பதே த்ரவிட என்னும் சமஸ்கிருதச் சொல்லின் மூலம் என வேறு சிலரும் கூறுகின்றனர். இவ்வாதம் இன்னும் முடிவின்றித் தொடர்ந்தே வருகிறது. இவை தவிர இச் சொல்லுக்கு வேறு மூலங்களைக் காண முயல்பவர்களும் உள்ளனர். தமிழ் என்னும் சொல்லுக்குத் த்ரவிட என்பதே மூலம் என்ற கருத்தை முன் வைத்தவர்களுள் கால்டுவெல் முக்கியமானவர். இவர் த்ரவிட என்பது திரமிட என்றாகி அது பின்னர் த்ரமிள ஆகத் திரிந்து பின்னர் தமிள, தமிழ் என்று ஆனது என்கிறார். தமிழ் என்னும் திராவிடச் சொல்லே மூலச் சொல் என்பவர்கள், மேலே குறிப்பிடப்பட்டதற்கு எதிர்ப்பக்கமாக, "தமிழ் - தமிள - த்ரமிள - த்ரமிட - த்ரவிட ஆகியது என்பர்.
சௌத்துவருத்து என்பவர் தமிழ் என்பதன் ஆறு தம்-மிழ் என்று பிரித்துக் காட்டி "தனது மொழி" என்று பொருள்படும் என்று தெரிவிக்கிறார்.[6] காமெல் சுவெலிபில் என்ற செக்கு மொழியியலாளர் தம்-இழ் என்பது "தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி" என்ற பொருள் தரவல்லது என்கிறார். மாறாக, tamiz < tam-iz < *tav-iz < *tak-iz என்ற கிளவியாக்கம் நடந்திருக்கலாமென்றும், அதனால் இது "சரியான (தகுந்த) (பேச்சு) முறை" என்ற பொருளிலிலிருந்து துவங்கியிருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.[7]
[தொகு]தமிழ் பேசப்படும் இடங்கள்

இதையும் பார்க்க: புவியில் தமிழ் மக்களின் பரம்பல் அட்டவணை

தமிழியல்
தமிழ்
மலையாளத் தமிழியல்
ஆங்கிலத் தமிழியல்
சிங்களத் தமிழியல்
சமசுகிருத தமிழியல்
கன்னடத் தமிழியல்
தெலுங்குத் தமிழியல்
துளு தமிழியல்
வங்காளத் தமிழியல்
மராத்திய தமிழியல்
இந்தித் தமிழியல்
பர்மியத் தமிழியல்
சீனத் தமிழியல்
அரபுத் தமிழியல்
மலாய் தமிழியல்
உருசியத் தமிழியல்
ஜப்பானியத் தமிழியல்
கொரியத் தமிழியல்
ஜெர்மன் தமிழியல்
பிரெஞ்சுத் தமிழியல்
டச்சுத் தமிழியல்
போத்துக்கீசத் தமிழியல்
சுவீடிஸ் தமிழியல்
பாளித் தமிழியல்
பிராகிருதத் தமிழியல்
பிராமித் தமிழியல்
பாரசீகத் தமிழியல்
உருதுத் தமிழியல்


தொகு
தமிழ், தென் இந்திய மாநிலமான தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும். தமிழ் மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும், குறிப்பாக, இந்திய மாநிலங்களான கர்நாடகம், கேரளம் மற்றும் மகாராட்டிரத்திலும், இலங்கையில் கொழும்பு மற்றும் மத்திய மலை நாட்டுப் பகுதிகளிலும் வழங்கி வருகின்றது.

தமிழ் மக்கள், 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், ஒப்பந்தக் கூலிகளாகவும், கீழ்நிலை அரசப் பணியாளர்களாகவும், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பிரித்தானியப் பேரரசின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர். அவ்வாறு அவர்கள் சென்ற இடங்களில் தமிழ் பேசும் சமுதாயங்கள் உருவாகின. இவர்களின் வழிவந்தவர்கள் இன்று சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ் போன்ற நாடுகளில் குறிப்பிடத்தக்க குடித்தொகை கொண்டவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள். தென்னாப்பிரிக்கா, குயானா, பிஜி, சுரினாம் மற்றும் ட்ரினிடாட்டும் டொபாகோவும் போன்ற நாடுகளிலும் பலர் பூர்வீகத் தமிழராக இருந்தும், அந் நாடுகளில் தமிழ் மொழியை அவர்கள் பேசுவதில்லை.

மிக அண்மைக்காலங்களில், பெரும்பாலும் இலங்கையின் இன முரண்பாடுகள் காரணமாக அகதிகளாக அங்கிருந்து இடம் பெயர்ந்தவர்களும், ஓரளவு பொருளாதாரக் காரணங்களுக்காக இடம் பெயர்ந்தவர்களுமாக, பல தமிழர்கள் ஆஸ்திரேலியா, கனடா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள். தற்போது இவர்களில் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தமிழ் மொழியை ஒரு உயிர்ப்புள்ள மொழியாக வழங்கி வந்த போதிலும், இளைய தலைமுறையினர் பலர் தமிழ் மொழியைப் பயன்படுத்த இயலாதவர்களாகவும், ஆர்வமற்றவர்களாகவும் வளர்ந்து வருவதை கவனிக்க முடிகின்றது.
[தொகு]ஆட்சி மொழி அங்கீகாரம்
தமிழ் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாகும். அத்துடன் இந்திய அரசியலமைப்பின் கீழ் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 மொழிகளுள் ஒன்றாகவும் உள்ளது. இலங்கையில் மூன்று ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று. இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்திலும் அந்தமான் நிக்கோபார் தீவுகள், பாண்டிச்சேரி ஆகிய ஒன்றியப் பகுதிகளிலும் தமிழ் அரச அலுவல் மொழியாக இருக்கிறது. சிங்கப்பூர் நாட்டிலும் தேசிய மொழிகளுள் ஒன்றாகத் தமிழ் இடம் பெற்றுள்ளது. தென்னாபிரிக்காவிலும் தமிழுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் உள்ளது. மலேசியாவிலும் முதல் நான்கு முகமை மொழிகளில் தமிழும் இடம்பெற்றுள்ளது. மலேசியாவில் தொடக்க இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. நாடு முழுவதும் 523 தமிழ்த் தொடக்கப்பள்ளிகள் அரசுப் பள்ளிகளாக இயங்குகின்றன.
[தொகு]இந்தியாவில் செம்மொழி அங்கீகாரம்
இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் உள்ள பல தமிழ் அமைப்புக்களினதும், அறிஞர்களினதும் நீண்ட கால முயற்சிகளைத் தொடர்ந்து [8] இந்திய அரசினால் தமிழ் ஒரு செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அங்கீகாரம் பெற்றுள்ள முதல் இந்திய மொழி தமிழாகும். இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளினதும் கூட்டுக் கூட்டமொன்றின்போது, 2004 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் நாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களால் இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டது.[9]
[தொகு]பேச்சுத்தமிழ் - உரைநடைத்தமிழ் வேறுபாடுகள்

முதன்மைக் கட்டுரைகள்: பேச்சுத் தமிழ், உரைநடைத் தமிழ்


18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, செந்தமிழ் நடையில் எழுதப்பட்ட விவிலிய நூலின் முகப்பு
தமிழ், அதன் பல் வேறுபட்ட வட்டார வழக்குகளுக்கு மேலதிகமாக, இலக்கியங்களில் பயன்படும் முறையான செந்தமிழுக்கும், கொடுந்தமிழ் என வழங்கப்படும் பேச்சுத் தமிழுக்கும் இடையே தெளிவான இருவடிவத் தன்மை (diglossia) காணப்படுகின்றது. இங்கே கொடுந்தமிழ் என்பது அனைத்து வட்டாரப் பேச்சுத் தமிழ் வழக்குகளையும் பொதுவாகக் குறிக்கும் ஒரு சொற் பயன்பாடு ஆகும். இந்த இருவடிவத் தன்மை பண்டைக் காலம் முதலே தமிழில் இருந்து வருவதை, கோயில் கல்வெட்டுக்களிற் காணப்படும் தமிழ், சமகால இலக்கியத் தமிழினின்றும் குறிப்பிடத் தக்க அளவு வேறுபட்டுக் காணப்படுவதினின்றும் அறிந்துகொள்ள முடியும். இவ்வாறு, செந்தமிழ் எந்த வட்டார மொழி வழக்கையும் சாராது இருப்பதனால், எழுத்துத் தமிழ், தமிழ் வழங்கும் பல்வேறு பகுதிகளிலும், ஒன்றாகவே இருப்பதைக் காணலாம்.

தமிழ்
செந்தமிழ்
கொடுந்தமிழ்
முத்தமிழ்
தமிழிசை
நாடகத் தமிழ்
இயற்றமிழ்/இயல்தமிழ்
தனித்தமிழ்
நற்றமிழ்
ஆட்சித் தமிழ்
சட்டத் தமிழ்
அறிவியல் தமிழ்
மருத்துவத் தமிழ்
செம்மொழித் தமிழ்
தமிழ் வட்டார மொழி வழக்குகள்
கொங்குத் தமிழ்
யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்
மட்டக்களப்பு பேச்சுத் தமிழ்
வன்னித்தமிழ்
மலேசியத் தமிழ்
முஸ்லிம்கள் தமிழ்
சென்னைத் தமிழ்
திருநெல்வேலித் தமிழ்
தஞ்சாவூர்த் தமிழ்
மதுரைத் தமிழ்
ஈழத் தமிழ்
தமிங்கிலம்
மணிப்பிரவாளம்
மலையாளம்

தொகு

தற்காலத்தில், எழுதுவதற்கும், மேடைப் பேச்சுக்கும் செந்தமிழே பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, செந்தமிழ், பாட நூல்களுக்குரிய மொழியாகவும், பெருமளவுக்கு இலக்கிய மொழியாகவும், மேடைப் பேச்சுகளுக்கும், விவாதங்களுக்கும் உரிய மொழியாகவும் விளங்கிவருகிறது. அண்மைக் காலங்களில், மரபு வழியில், செந்தமிழுக்குரிய துறைகளாக இருந்து வந்த பகுதிகளிலும் கொடுந்தமிழ்ப் பயன்பாடு அதிகரித்து வருவதைக் காணமுடிகின்றது. பெரும்பாலான தற்காலத் திரைப்படங்கள், மேடை நாடகம் மற்றும் தொலைக் காட்சி, வானொலி முதலியவற்றில் இடம்பெறும் மக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் பலவற்றிலும் கொடுந்தமிழ் பயன்படுத்தப்படுவதைக் காணலாம். பல அரசியல் வாதிகளும், மக்களுக்கு நெருக்கமாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் நோக்கில் தங்கள் மேடைப் பேச்சுக்களிலும் கொடுந்தமிழைப் பயன்படுத்தி வருகின்றனர்.

செந்தமிழுக்கான இலக்கண விதிகள் இறைவனால் உருவாக்கப் பட்டதாக நம்பப்படுவதால், செந்தமிழே சரியான மொழியாகக் கருதப்பட்டது. இதனால், பேச்சுத் தமிழ் வழக்குகளுக்குச் சிறப்புக் கிடைக்கவில்லை. (எடுத்துக்காட்டு, காங்கேயர் (Kankeyar), 1840). பல ஐரோப்பிய மொழிகளில் காணப்படுவதற்கு மாறாக, தமிழில், அதன் வரலாற்றின் பெரும் பகுதியிலும், ஒரு பொதுவான பேச்சுமொழி இருந்ததில்லை. தற்காலத்தில் அதிகரித்த கொடுந்தமிழ்ப் பயன்பாடு, அதிகாரபூர்வமற்ற முறையில் பொதுப் பேச்சுத் தமிழ் வழக்குகள் தோன்றுவதற்குக் காரணமாகவுள்ளது. இந்தியாவில் பொதுக் கொடுந்தமிழ், 'படித்த, பிராமணரல்லாதவர்'களின் பேச்சுவழக்கை அடிப்படையாகக் கொண்டுள்ளது (Schiffman, 1998). எனினும் குறிப்பிடத் தக்க அளவுக்கு, தஞ்சாவூர் மற்றும் மதுரைப் பேச்சு வழக்குகளில் செல்வாக்கு உள்ளது. இலங்கையில், அதிக மக்கள் தொகையைக் கொண்ட யாழ்ப்பாணப் பேச்சு வழக்கையே பெரும்பாலான வெளியார் இலங்கைத் தமிழ்ப் பேச்சு வழக்காக இனங்கண்டு கொள்கின்றனர். [5]
[தொகு]வட்டார மொழி வழக்குகள்
முதன்மைக் கட்டுரை: தமிழ் வட்டார மொழி வழக்குகள்
தமிழில் வட்டாரமொழி வழக்குகள், பெரும்பாலும் சொற்களை ஒலிப்பதிலேயே மாறுபடுகின்றன. மற்றும் பல வேறு பழைய செந்தமிழ்ச்சொற்களினின்றும் பிறந்தவையாகும். எடுத்துக்காட்டாக, "இங்கே" என்ற சொல், தஞ்சாவூர் பகுதிகளில் "இங்க" என்றும், யாழ்ப்பாணம் (இலங்கை) பகுதிகளில் "இங்கை" என்றும் வழங்கப்படுகின்றது. ஆயினும் திருநெல்வேலி பகுதிகளில் "இங்கனெ" என்றும், இராமநாதபுரம் பகுதிகளில் "இங்குட்டு"/"இங்கிட்டு" என்றும் வழங்கும் சொற்கள் "இங்கே" என்ற சொல்லில் கிளைத்தவை அல்லாமல் வேறு செந்தமிழ்ச்சொற்களினின்றும் பிறந்தவையாகும். இங்கனெ என்பது "இங்கணே" அல்லது "இங்கனே" என்பதன் மாற்றமும் "இங்குட்டு"/"இங்கிட்டு" என்பது "இங்கட்டு" என்னும் செம்மொழிச்சொல்லின் மாற்றமும் ஆகும். "கண்" என்னும் சொல்லின் பொருள் இடம் ஆகும். சான்றாகச் சென்னைத் தமிழகராதி: "Place, site; இடம். ஈர்ங்கண்மா ஞாலம் (குறள், 1058)". கட்டு என்னும் சொல்லும் கண் என்பதோடு து-விகுதி சேர்ந்து வழங்கும் சொல்லாகும். கொங்குநாட்டார் இன்றும் "அக்கட்டாலே போய் உட்கார்" என்று சொல்வதைக் கேட்கலாம். "இங்கன்" அல்லது "ஈங்கன்" என்பதும் பழைய இலக்கியங்களில் காண்பவை (சென்னைப்பல்கலைக் கழகத் தமிழகராதி காண்க). இது ஒரே சொல்லே பலவாறு சிதைந்ததாகக் கருதும் கோட்பாட்டைத் திருத்த உதவும்; மேலும் வட்டாரவழக்குகள் பழைய இலக்கியச்சொற்கள் உண்மையிலேயே பேச்சில் வழங்கியதற்கு நல்ல சான்றாகவும் இருப்பதைக் காட்டும்.

பெரும்பாலான வட்டார மொழி வழக்குகளின் சொல் அகராதியில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை என்றாலும், சில வழக்குகள் பெரிதும் மாறுபடுகின்றன. இலங்கையில் பேசப்படும் தமிழின் பல சொற்கள்,தமிழகத்தில் அன்றாட வழக்கில் பயன்படுத்தப் படுவதில்லை. "பாலக்காடு ஐயர்" தமிழில் பல மலையாள சொற்கள் கலந்திருக்கும். சில இடங்களில் மலையாள வாக்கிய அமைப்பும் கானப்படும். இறுதியாக, ஹெப்பர் மற்றும் மாண்டையம் வட்டாரங்களில் பதினோறாம் நூற்றாண்டில் புலம் பெயர்ந்த வைணவ கோட்பாட்டைப் பின்பற்றும் தமிழர்களால் பேசப்படும் தமிழில் வைணவ பரிபாஷையின் எச்சம் காணப்படுகிறது. வைணவ பரிபாஷை என்பது ஒன்பது மற்றும் பத்தாம் நூற்றாண்டுகளில் உருவான வைணவ சமய மரபுகள் மற்றும் பண்புகளை உள்ளடக்கிய மொழி வழக்காகும்.

தமிழ் மொழி வழக்குகள் வட்டார அடிப்படையில் மட்டுமல்லாது சாதி அடிப்படையிலும் வேறுபடும். பல சாதிகளுக்கென தனியான பேச்சு வழக்குகள் இருந்து வந்தன. தற்போது சாதி மறுப்பு இயக்கங்களின் விளைவாக இவ்வேறுபாடுகள் மறைந்து வந்தாலும், ஒருவரின் பேச்சு வழக்கை வைத்து அவரின் சாதியை சில சமயங்களில் கணிக்க முடிகிறது.

எத்னொலோக் Ethnologue என்ற உலக மொழிகள் பற்றிய பதிப்பு நிறுவணம், தமிழில் 22 வட்டார வழக்குகள் இருப்பதாக தெரிவிக்கிறது. அவையாவன ஆதி திராவிடர், ஐயர், ஐயங்கார், அரவா, பருகண்டி, கசுவா, கொங்கர், கொரவா, கொர்சி, மதராஸி, பரிகலா, பாட்டு பாஷை, இலங்கை தமிழ், மலேயா தமிழ், பர்மா தமிழ், தெனாப்பிரிக்கா தமிழ், திகாலு, அரிஜன், சங்கேதி, கெப்பார், மதுரை, திருநெல்வேலி. கொங்கு மற்றும் குமரி ஆவன வேறிரு தெரிந்த வட்டார வழக்குகள்.

புவியியல் தொடர்பான வட்டார வழக்குகள் ஒருபுறமிருக்க, சமுதாய அடைப்படையிலும் பல்வேறு மட்டங்களில் தமிழ் மொழிப் பயன்பாட்டில் வேறுபாடுகளை கவனிக்கலாம். புதிய வழக்காக, தொலைக் காட்சி முதலான தொடர்புச் சாதனங்களும் இன்று பெருமளவுக்கு ஆங்கிலம் கலந்த தமிழைத் தமிழ் மக்கள் மத்தியில் புழக்கத்துக்கு விட்டுள்ளன. மேனாட்டுக் கல்வி மற்றும் அறிவியல் வளர்ச்சி தொடர்பில் புதிய சொல்லாக்கம், கலைச்சொல்லாக்கம் முதலிய அம்சங்களில் ஒருங்கிணைவு அற்ற முயற்சிகள் வேறுபட்ட மொழி வழக்குகளை உருவாக்கியுள்ளன. முக்கியமாக, இலக்கியம் மற்றும் அது போன்ற பண்பாட்டு மற்றும் மரபுவழிப் பயன்பாடுகளுக்கு அப்பால், கல்வி, அறிவியல், நிர்வாகம் மற்றும் இன்னோரன்ன நவீன துறைகளிலும் தமிழ் பயன்படுத்தப்பட்டுவரும் தமிழ்நாடு, இலங்கை போன்ற நாடுகளில் உருவாக்கப்படும் ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்கள், ஒரு பகுதியினர் பயன்படுத்தும் தமிழை இன்னொரு பகுதித் தமிழர் புரிந்து கொள்ளமுடியாத அளவுக்கு வேறுபாடுள்ள மொழி வழக்குகள் உருவாகக் காரணமாக உள்ளன.
[தொகு]எழுத்துமுறை



எழுத்துரு மாற்ற வரலாறு
தமிழ் எழுத்து முறைமை ஒலிப்பியல் அடிப்படையிலானது; குறுக்கம், அளபெடை, மற்றும் புணர்ச்சி நெறிகளுக்கு உட்பட்டே எழுத்துக்கள் ஒலிக்கப்படுகின்றன. தற்போதைய தமிழ் எழுத்துமுறை தமிழ் பிராமியில் இருந்து தோன்றியது ஆகும். தமிழ் பிராமி காலப்போக்கில் வட்டெழுத்தாக உருமாறியது. ஆறாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் "வட்டெழுத்து" முறை உருவானது. ஓலைச்சுவடிகளிலும், கல்லிலும் செதுக்குவதற்கேற்ப இருந்தது.
வட்டெழுத்தில் சமஸ்கிருத ஒலிகள் குறிக்கப்பட முடியாது என்பதால் சமஸ்கிருத ஒலிகளை எழுதும் பொருட்டு சில கிரந்த எழுத்துமுறை கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தினர். இவ்வெழுத்துக்களைப் பயன்படுத்துவதற்கு மாறாக தொல்காப்பியம் கூறியபடி அச்சொற்களைத் தமிழ்படுத்த வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
பின்னர், வீரமாமுனிவரின் அறிவுரைப்படி இரட்டைக் கொம்பு போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டன. 1977 எம். ஜி. இராமச்சந்திரன் ஆட்சியில் அச்சில் ஏற்றுவதை எளிமைப்படுத்தும் வகையில் பெரியாரால் பரிந்துரைக்கப்பட்ட ஆகார மற்றும் ஐகார உயிர்மெய் எழுத்துக்களில் சீர்திருத்தம் செய்யப்பட்டது. எனினும் பெரியாரது உகர சீர்திருத்தம் செயல்படுத்தப்படவில்லை.
[தொகு]தமிழ் எழுத்துக்கள்


. க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்
அ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன
ஆ கா ஙா சா ஞா டா ணா தா நா பா மா யா ரா லா வா ழா ளா றா னா
இ கி ஙி சி ஞி டி ணி தி நி பி மி யி ரி லி வி ழி ளி றி னி
ஈ கீ ஙீ சீ ஞீ டீ ணீ தீ நீ பீ மீ யீ ரீ லீ வீ ழீ ளீ றீ னீ
உ கு ஙு சு ஞு டு ணு து நு பு மு யு ரு லு வு ழு ளு று னு
ஊ கூ ஙூ சூ ஞூ டூ ணூ தூ நூ பூ மூ யூ ரூ லூ வூ ழூ ளூ றூ னூ
எ கெ ஙெ செ ஞெ டெ ணெ தெ நெ பெ மெ யெ ரெ லெ வெ ழெ ளெ றெ னெ
ஏ கே ஙே சே ஞே டே ணே தே நே பே மே யே ரே லே வே ழே ளே றே னே
ஐ கை ஙை சை ஞை டை ணை தை நை பை மை யை ரை லை வை ழை ளை றை னை
ஒ கொ ஙொ சொ ஞொ டொ ணொ தொ நொ பொ மொ யொ ரொ லொ வொ ழொ ளொ றொ னொ
ஓ கோ ஙோ சோ ஞோ டோ ணோ தோ நோ போ மோ யோ ரோ லோ வோ ழோ ளோ றோ னோ
ஒள கௌ ஙௌ சௌ ஞௌ டௌ ணௌ தௌ நை பௌ மௌ யௌ ரௌ லௌ வௌ ழௌ ளௌ றௌ னௌ

[தொகு]கிரந்த எழுத்துக்கள்
கிரந்த எழுத்துக்கள் தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ் நாட்டில் சமஸ்கிருத மொழியை எழுதப் பயன்பட்ட வரி வடிவங்களாகும். தற்காலத்தில் தேவநாகரி எழுத்துக்கள் பிரபலமடைந்ததால் கிரந்த எழுத்துக்களின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது. தமிழில் மணப்பிரவாள எழுத்து நடை செல்வாக்கு செலுத்திய பொழுது கிரந்த எழுத்துக்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டது. இன்று, மணிப்பிரவாள எழுத்து நடை மறைந்தாலும், 'ஜ', 'ஷ', 'ஸ', 'ஹ' ,'க்ஷ' போன்ற கிரந்த எழுத்துக்கள் ஆங்கில மற்றும் அறிவியல் சொற்களையும், வடமொழிச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் குறிக்க பயன்படுத்தப்படுகின்றன.
ஜ ja, ஜா jaa, ஜி ji, ஜீ jii, ஜு ju, ஜூ joo, ஜெ je, ஜே jae, ஜை jai, ஜொ jo, ஜோ joa, ஜௌ jow, ஜ் j
ஷ sha, ஷா shaa, ஷி shi, ஷீ shii, ஷு shu, ஷூ shoo, ஷெ she, ஷே shae, ஷை shai, ஷொ sho, ஷோ shoa, ஷௌ show/shou, ஷ் sh
ஸ Sa, ஸா Saa, ஸி Si, ஸீ Sii, ஸு Su, ஸூ Soo, ஸெ Se, ஸே Sae, ஸை Sai, ஸொ So, ஸோ Soa, ஸௌ Sow, ஸ் S
ஹ ha, ஹா haa, ஹி hi, ஹீ hii, ஹு hu, ஹூ hoo, ஹெ he, ஹே hae, ஹை hai, ஹொ ho, ஹோ hoa, ஹௌ how, ஹ் h
க்ஷ ksha, க்ஷா kshaa, க்ஷி kshi, க்ஷீ kshii, க்ஷு kshu, க்ஷூ kshoo, க்ஷெ kshe, க்ஷே kshae, க்ஷை kshai, க்ஷொ ksho, க்ஷோ kshoa, க்ஷௌ kshow, க்ஷ் ksh
[தொகு]தமிழ் ஒலிப்புமுறை

முதன்மைக் கட்டுரை: தமிழ் ஒலிப்புமுறை

தமிழில் 12 உயிரெழுத்துகளும், 18 மெய்யெழுத்துகளும் உள்ளன. ஒவ்வொரு உயிரெழுத்தும் 18 மெய்யெழுத்துகளோடும் சேர்வதால் 216 உயிர்மெய்யெழுத்துகள் பிறக்கின்றன. இவற்றோடு ஆய்த எழுத்தும் சேர்த்து தமிழ் எழுத்துகள் மொத்தம் 247 ஆகும்.
தமிழில் ஒரு நா சுழற்றி (தகவல்)
நா சுழற்றி வாக்கியம்: "ஏழை கிழவன் வாழைப்பழத்தோல்மேல் சருசருக்கி வழுவழுக்கி கீழே விழுந்தான்."
கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும்.

[தொகு]உயிர் எழுத்துக்கள்
உயிரெழுத்துக்களில் குறுகிய ஓசையுடைய எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ ஆகிய எழுத்துகள் குற்றெழுத்துக்கள்(குறில்) எனவும், நீண்ட ஓசையுடைய எழுத்துக்களான ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ ஆகிய எழுத்துக்கள் நெட்டெழுத்துக்கள்(நெடில்) எனவும் வழங்கப்படும்.

குறிலெழுத்துக்கள் ஒவ்வொன்றையும் ஒரு மாத்திரை நேரத்திலும், நெட்டெழுத்துக்கள் ஒவ்வொன்றையும் இரண்டு மாத்திரை நேரத்திலும் ஒலிக்க வேண்டும்.
குறில் நெடில்
முன் நடு பின் முன் நடு பின்
அண்மை i u iː uː
இ உ ஈ ஊ
இடை e o eː oː
எ ஒ ஏ ஓ
திறந்த a (ai) aː (aw)
அ ஐ ஆ ஒள
[தொகு]மெய் எழுத்துக்கள்
மெய்யெழுத்துக்களில் வன்மையான ஓசையுடைய எழுத்துக்கள் வல்லினம் என்றும், மென்மையான ஓசையுடைய எழுத்துக்கள் மெல்லினம் என்றும், இவை இரண்டிற்கும் இடைப்பட்ட ஓசையுடைய எழுத்துக்கள் இடையினம் என்றும் வழங்கப்படும்.
வல்லினம் : க் ச் ட் த் ப் ற்
மெல்லினம்: ங் ஞ் ண் ந் ம் ன்
இடையினம்: ய் ர் ல் வ் ழ் ள்
மெய்யெழுத்துக்கள் ஒவ்வொன்றும் அரை மாத்திரை நேரத்தில் ஒலிக்கப்படும்
கீழேயுள்ள அட்டவணையில் தமிழ் மெய்யெழுத்துக்கள், அனைத்துலக ஒலிப்பெழுத்துக்களுடனும், ஒலிப்பு வகைகளுடனும் தரப்பட்டுள்ளன.
இதழ் பல் நுனியண்ணம் வளைநா இடையண்ணம் கடையண்ணம்
வெடிப்பு p (b) t̪ (d̪) ʈ (ɖ) tʃ (dʒ) k (g)
ப த ட ச க
மூக்கு m n̪ ṉ ɳ ɲ ŋ
ம ந ன ண ஞ ங
உருட்டு ɾ̪ r
ர ற
மருங்கு l̪ ɭ
ல ள
உயிர்ப்போலி ʋ ɻ j
வ ழ ய
[தொகு]சிறப்பு எழுத்து - ஆய்த எழுத்து


ஆய்த எழுத்து


ஒரு கேடயம்
ஃ - ஆய்த எழுத்து தமிழில் உள்ள ஒரு சிறப்பு எழுத்து ஆகும். ஆய்த எழுத்தைத் தனியே பயன்படுத்துவது அரிது. பழந்தமிழில் பரவலாக ஆய்த எழுத்து பயன்படுத்தப்பட்டாலும், தற்காலத்தில் ஆய்த எழுத்தின் பயன்பாடு அரிதே. சில நேரங்களில் பகரத்துடன் சேர்த்து (ஃப) ஆங்கில எழுத்தான f-ஐக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. ஆய்த எழுத்தை அஃகேனம் என்றும் அழைப்பர்.
[தொகு]ஒலிப்பியல்
பெரும்பாலான இந்திய மொழிகளைப் போலன்றி தமிழில் மூச்சைக்கொண்டு ஒலிக்கும் (aspirated) மெய்யெழுத்துக்கள் கிடையாது. பேச்சில் வழங்கி வரினும், தமிழ் எழுத்து மிடற்றொலிகளையும் (voiced sounds) பிற ஒலிகளையும் வேறுபடுத்துவதில்லை. மிடற்றொலிகளும் அவற்றின் இனமான பிற ஒலிகளும் தமிழில் வகையொலிகள் (allophones) அல்ல. தமிழர் பொதுவாக இவ்வேறுபாட்டை உணர்ந்திருக்கின்றனர். மேலும், தொல்காப்பியத்தில் ஒரு எழுத்தை எப்பொழுது மிடற்றிலிருந்து ஒலிக்க வேண்டும் என்பது பற்றிய வரைமுறை விளக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, "த" எனும் மெய்யொலி சொல்லின் முதலில் வரும்பொழுது மிடற்றொலியாகவும், பிற இடங்களில் ஒற்றிரட்டித்தோ, வேறோரு வல்லெழுத்தால் தொடரப்பட்டோ, அல்லது மிடறு நீங்கியோ ஒலிக்கும்.

சொல்லின் முதலில் சகரம் எவ்வாறு ஒலிக்கப்பட வேண்டும் என்ற நெறியைத் தவிர பிற நெறிமுறைகள் செந்தமிழில் பொதுவாகப் பின்பற்றப்படுகின்றன. கொடுந்தமிழ் அல்லது வழக்குத்தமிழில் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஏற்ப ஒலிப்புமுறை வேறுபடுகிறது. தென்வட்டார வழக்குகளிலும் இலங்கை வழக்குகளிலும் இம்முறை பெரும்பாலும், ஆனால் முழுமையாகவல்லாமல், பின்பற்றப்படுகிறது. வடபகுதி வட்டார வழக்குகளில் ஒலிப்பெயர்வு ஏற்பட்டு ஒலிப்புநெறிகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவை தவிர, சமஸ்கிருதம் மற்றும் பிற வடமொழிகளிலிருந்து பெறப்பட்ட சொற்கள் தமிழில் பெரிதும் உள்ளபடியே பயன்படுத்தப்படுகின்றன.

தமிழ் எழுத்தில் ஏன் மிடற்றொலி மற்றும் பிறவொலி வேறுபாடுகள் இல்லையென்ற கேள்விக்கு ஒலிப்பியலாளர்கள் நடுவே ஒருமித்த கருத்து இல்லை. ஒரு சாரார் தமிழ் மொழியில் கூட்டுமெய்களும் மிடற்றினின்றொலிக்கும் வல்லெழுத்துக்களோ அடிப்படையில் இருந்ததில்லையென்றும் சொற்புணர்ச்சி மற்றும் குறுக்கத்தினால் மட்டுமே இவ்வொலிகள் ஏற்படுகின்றன என்று குறிப்பிடுகின்றனர். அதனால், இந்திய ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் மற்றும் பிற திராவிட மொழிகளைப் போலன்றி தமிழில் இவ்வொலிகளுக்கென தனியெழுத்துக்கள் தேவைப்படவில்லை என்று கருதுகின்றனர். இக்கருத்திலிருந்து மாறுபட்டு மிடற்றொலிகள் அவற்றையொத்த பிற ஒலிகளின் வகையொலிகளாகவே தமிழில் இருந்துள்ளன என்றும் அதனாலேயே அவற்றிற்கென தனியாக எழுத்துக்குறிகள் இல்லையெனவும் ஒரு கருத்தை சிலர் முன்வைக்கின்றனர்.
தொடர்புடைய கட்டுரைகள்: யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்
[தொகு]குறுக்கம்
குறுக்கம் என்பது சில ஒலிப்பியல் கூறுகள் சில குறிப்பிட்ட ஒலிகளையடுத்து வரும்பொழுது தத்தம் இயல்பான ஒலி அளவுகளிலிருந்து குறைந்து ஒலித்தலைக் குறிக்கும். அவை பின்வருவன.
குற்றியலுகரம் - உயிர் உ
குற்றியலிகரம் - உயிர் இ
ஐகாரக் குறுக்கம் - கூட்டுயிர் (diphthong} ஐ
ஔகாரக் குறுக்கம் - கூட்டுயிர் ஔ
ஆய்தக் குறுக்கம் - சிறப்பெழுத்துஃ (ஆய்தம்)
மகாரக் குறுக்கம் - மெய் ம்
[தொகு]எண் குறிகள்
தற்காலத்தில் தமிழில் பெரும்பாலும் அனைத்துலக எண் குறியீடுகளே பயன்பாட்டில் உள்ளனவாயினும் சில பத்தாண்டுகளுக்கு முன்வரை தனியான எண் குறியீடுகள் பயன்பட்டுவந்தன. ஒன்று தொடக்கம் ஒன்பது வரையான எண்களுக்கு மட்டுமன்றி, பத்து, நூறு, ஆயிரம் ஆகியவற்றுக்கும் தனிக் குறியீடுகள் இருந்தன.
0 1 2 3 4 5 6 7 8 9 10 100 1000
௦ ௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௱ ௲
[தொகு]எண் ஒலிப்பு
ஒன்றிற்குக் கீழான அளவுள்ள எண்களும் அதற்குரிய ஒலிப்புச் சொற்களும் கீழுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
எண் அளவு சொல்
1/320 320 ல் ஒரு பங்கு முந்திரி
1/160 160 ல் ஒரு பங்கு அரைக்காணி
3/320 320 ல் மூன்று பங்கு அரைக்காணி முந்திரி
1/80 80 ல் ஒரு பங்கு காணி
1/64 64 ல் ஒரு பங்கு கால் வீசம்
1/40 40 ல் ஒரு பங்கு அரைமா
1/32 32 ல் ஒரு பங்கு அரை வீசம்
3/80 80 ல் மூன்று பங்கு முக்காணி
3/64 64 ல் மூன்று பங்கு முக்கால் வீசம்
1/20 20 ஒரு பங்கு ஒருமா
1/16 16 ல் ஒரு பங்கு மாகாணி (வீசம்)
1/10 10 ல் ஒரு பங்கு இருமா
1/8 8 ல் ஒரு பங்கு அரைக்கால்
3/20 20 ல் மூன்று பங்கு மூன்றுமா
3/16 16 ல் மூன்று பங்கு மூன்று வீசம்
1/5 ஐந்தில் ஒரு பங்கு நாலுமா
1/4 நான்கில் ஒரு பங்கு கால்
1/2 இரண்டில் ஒரு பங்கு அரை
3/4 நான்கில் மூன்று பங்கு முக்கால்
1 ஒன்று ஒன்று

எண் ஒலிப்பு ஒன்றிலிருந்து பிரமகற்பம் எனும் முக்கோடி வரை இருக்கும் அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.
எண் ஒலிப்புச் சொல்
1 ஒன்று (ஏகம்)
10 பத்து (தசம்)
100 நூறு (சதம்)
1000 ஆயிரம்(சகசிரம்)
10,000 பதினாயிரம்(ஆயுதம்)
1,00,000 நூறாயிரம்(லட்சம் - நியுதம்)
10,00,000 பத்து நூறாயிரம்(பிரயுதம்)
1,00,00,000 கோடி
10,00,00,000 அற்புதம்
1,00,00,00,000 நிகற்புதம்
10,00,00,00,000 கும்பம்
1,00,00,00,00,000 கணம்
10,00,00,00,00,000 கற்பம்
1,00,00,00,00,00,000 நிகற்பம்
10,00,00,00,00,00,000 பதுமம்
1,00,00,00,00,00,00,000 சங்கம்
10,00,00,00,00,00,00,000 வெள்ளம்(சமுத்திரம்)
1,00,00,00,00,00,00,00,000 அந்நியம்
10,00,00,00,00,00,00,00,000 மத்தியம்(அர்த்தம்)
1,00,00,00,00,00,00,00,00,000 பரார்த்தம்
10,00,00,00,00,00,00,00,00,000 பூரியம்
1,00,00,00,00,00,00,00,00,00,000 பிரமகற்பம் (கோடிக்கோடி-முக்கோடி)
[தொகு]இலக்கணம்

முதன்மைக் கட்டுரை: தமிழ் இலக்கணம்
இலக்கண அடிப்படையில் தமிழ் ஒரு ஒட்டுநிலை மொழியாகும். தமிழில், பெயர் வகை, எண், வேற்றுமை, காலம், போன்றவற்றை விளக்கச் சொற்களுடன் பின்னொட்டுக்கள் சேர்க்கப்படுகின்றன. தமிழின் பொதுவான கருவி மொழியியல் (metalinguistic) சொற்களும் கலைச் சொற்களும் தமிழாகவே உள்ளன.
தமிழ் இலக்கணம் பெருவாரியாக தொல்காப்பியத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. தற்கால தமிழ் இலக்கணம் பெரும்பாலும் நன்னூலைத் தழுவியமைந்துள்ளது. பதிமூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நன்னூலில் தொல்காப்பிய நெறிமுறைகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
தமிழ்ச் சொற்கள் வேர்ச் சொற்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றுக்கு ஒன்று அல்லது பல ஒட்டுக்களைச் சேர்ப்பதன் மூலம் புதிய சொற்கள் உருவாக்கப்படுகின்றன. இம் மொழியில் பெரும்பாலான ஒட்டுக்கள் பின்னொட்டுக்களாகும். பின்னொட்டுக்கள் சொற்களின் இலக்கண வகையில் மாற்றங்களை உண்டாக்குகின்றன அல்லது அவற்றில் பொருளை மாற்றுகின்றன. இவை சொற்களுக்கு இடம், எண், பால், காலம் போன்றவற்றை உணர்த்தும் பொருள்களையும் கொடுக்கின்றன. இவ்வாறு சொற்களுக்கு ஒட்டுக்களைச் சேர்ப்பதில் எவ்வித எண்ணிக்கைக் கட்டுப்பாடும் கிடையாது. இதனால் தமிழில் பல ஒட்டுக்களைக் கொண்ட நீளமான சொற்கள் இருப்பதைக் காணலாம்.
தமிழில் பெயர்ச் சொற்கள் இரண்டு திணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை உயர்திணை, அஃறிணை என்பவை. உயர்திணை கடவுளர், மனிதர் என்பவர்களைக் குறிக்கும் சொற்களை உள்ளடக்குகின்றன. ஏனைய உயிரினங்களையும், பொருட்களையும் குறிக்கும் சொற்கள் அஃறிணைக்குள் அடங்குகின்றன. உயர்திணை ஆண்பால், பெண்பால், பலர்பால் என மூன்று பால்களாகவும், அஃறிணை ஒன்றன்பால், பலவின் பால் என இரண்டு பால்களாகவும் வகுக்கப்பட்டுள்ளன. உயர்திணையுள் அடங்கும் ஆண்பால், பெண்பால் என்பன ஒருமைப் பொருளைச் சுட்டுகின்றன. பலர்பால் பன்மைப் பொருளைச் சுட்டுவது மட்டுமன்றி மதிப்புக் கொடுப்பதற்காக ஒருமையாகவும் பயன்படுவதுண்டு.
தமிழில் வேற்றுமைகள் எட்டுவகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை முதலாம் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை எனப் பெயரிடப்பட்டு உள்ளன. இப் பகுப்பு சமஸ்கிருத இலக்கண அடிப்படையிலானது என்றும் இதனால் செயற்கையானது என்றும் தற்கால மொழியியலாளர் சிலர் கூறுகின்றனர்.
[தொகு]சொல் வளம்

பார்க்கவும்: விக்சனரியில் உள்ள தமிழ் சொற்களின் பட்டியல் மற்றும் தமிழ் மொழியிலிருந்து உருவான சொற்களின் பட்டியல்
தமிழ் சொல் வளம் நிறைந்த மொழி. நவீனத் தமிழ்மொழி பழந்தமிழ் மொழியில் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான சொற்களை இன்னும் பயன்படுத்துகின்றது. இதனால் சற்று பயிற்சியுடன் பழந்தமிழ் இலக்கியங்களை ஒரு தமிழர் படித்து அறிய முடியும். திருக்குறள் போன்ற சிறந்த பழந்தமிழ் படைப்புகள் தமிழர்களால் சிறப்பாக கற்கப்படுவதற்கு இத்தொடர்ச்சியான சொற்பயன்பாடு உதவுகின்றது.

சமஸ்கிருத சொற்கள் தொல்காப்பியர் காலம் முதலே தமிழ் மொழியில் உள்வாங்கப்பட்டு தகுந்த பல தளங்களில் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. சமயம் சார்பான சமஸ்கிருத சொற்பயன்பாடுகள் தமிழில் அதிகம் காணப்படுகின்றன. சமஸ்கிருத உச்சரிப்புக்களைத் தமிழில் உள்வாங்குவதற்கு கிரந்த எழுத்துக்கள் பயன்படுகின்றன.

தமிழின் நீண்ட வரலாற்றில் பல பிறமொழிச்சொற்கள் தமிழில் கலந்து, தமிழ்படுத்தப்பட்டு தமிழை வளமாக்கியுள்ளன. பாரசிக, அரபு போன்ற செம்மொழிகளில் இருந்தும், பிற திராவிட மொழிகளில் இருந்தும், போர்த்துகீசிய, டச்சு, பிரேஞ்சு போன்ற காலனித்துவ மொழிகளில் இருந்தும், இந்தி, சிங்களம், மலாய் போன்ற தமிழருடன் தொடர்புடைய பிற இனங்களின் மொழிகளில் இருந்த்தும், ஆங்கில மொழியில் இருந்தும் தமிழ் மொழிக்கு பல சொற்கள் வந்தடைந்துள்ளன.

பிறமொழிச் சொற்கள் மட்டுப்படுத்தப்பட்டில் இருப்பது தமிழ் மொழியின் தொடர்ச்சிக்கும் தனித்துவத்துக்கும் அவசியம். ஆகையால் பிற மொழிச்சொற்களுக்கு இணையான தமிழ் மொழியின் அடிச்சொற்களில் இருந்து உருவாக்கப்படும் சொற்களை பயன்படுத்துவதே நன்று என்பது பல எளிய தமிழ் ஆதரவாளர்களின் கருத்து. இக்காலத்தில் குறிப்பாக ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் அடிச்சொற்களில் இருந்து உருவாக்கப்பட்ட சொற்கள் பயன்படுத்தப்படவேண்டும் என்பது பல தமிழ் ஆர்வலர்களின் வேண்டுகோளாக அமைகின்றது.
[தொகு]கலைச்சொற்கள்
தமிழ் மொழியில் அறிவியலை படைக்க கலைச்சொல்லாக்கம் முக்கியம். இது தமிழ் மொழியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஒரு செயல்பாடுதான். இக்காலத்தில் தமிழக இலங்கை அரசுகளின் பல்கலைக்கழகங்கள் ஊடாகவும் தமிழ்த் தன்னார்வலர்களாலும் இப்பணி தொடர்கின்றது.
[தொகு]தமிழ்த் தாய் வாழ்த்து

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமென திகழ்பரத கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற,
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன்னிருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாள முந்துளுவும்
உன்னுதரத்தே யுதித்தே யொன்றுபல வாயிடினும்
ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!
-மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை
[தொகு]தமிழ்ப் பற்று

மொழியே உயிர், முதலாவது.
முடிவாவது அதுவே.
முடியாது-
அதை விடவா
சமர் முரசே அறை தமிழா
விழியே மொழி
ஒரு போதிலும்
மிதிகாலிடல் சகியோம்
- முருகையன்
சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல்
சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்
பாடையிலே படுத்தூரைச் சுற்றும்போதும்
பைந்தமிழில் அழும் ஓசை கேட்கவேண்டும்
ஓடையிலே என்சாம்பல் ஓடும்போதும்
ஒண்தமிழே சலசலத்து ஓடவேண்டும்
- சச்சிதானந்தம்
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்
பாமரராய், விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சி சொலப் பான்மைகெட்டு
நாமமது தமிழெரென கொண்டு டிங்கு வாழ்ந்திடல் நன்றோ- சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.
- பாரதியார்
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத் தமிழ்
எங்கள் உயிருக்கு நேர்
- பாரதிதாசன்

சீரிளமைச் செம்மொழியேயென் காதலியே
சகமெங்கணு முனைப்போ லொருத்தி
பேரழகாய் உள்ளாளோ இலவேயிலை
பல்லழகும் உனில்கண்டேன் நீவாழியவே!
- கலைமகன் பைரூஸ்
எனக்கும் தமிழ்தான் மூச்சு
ஆனால் அதைப் பிறர்மேல் விட மாட்டேன்
- ஞானக்கூத்தன்
நினைத்திடும் மனத்தே நிற்பதும் தமிழே
நீளுநம் மூச்சிலும் தமிழே
முனைத்தபோர் முனையின் முன்னணி மறவர்
முகத்தொளிர் வீரமும் தமிழே
- கலைவாணன்
[தொகு]தமிழ் மொழி ஆய்வு மற்றும் வளர்ச்சி அமைப்புகள்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
செம்மொழித் தமிழ் உயராய்வு மையம்
அறிவியல் தமிழ் மன்றம்
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்)
தமிழ் இணையப் பல்கலைக்கழகம்
[தொகு]மேலும் காண்க

தமிழ்ப் பெயர்
தமிழ்ப் பிராமி
ஐரோப்பிய மொழிகளில் வழங்கும் தமிழ்ச் சொற்கள்
தமிழ் அகராதி
மதுரைத் திட்டம்
நூலகம் திட்டம்
சென்னை நூலகம்
ஆங்கிலம்
ஆங்கில இலக்கணம்
பிரெஞ்சு
பிரெஞ்சு இலக்கணம்
பழஞ்சொல் (சங்க காலம்)
தமிழில் பிழைகள் தவிர்ப்போம்! (நூல்)
தமிழ் இலக்கணம் (நூல்)
[தொகு]உசாத்துணைகள்

↑ எத்னோலாக்கின் 1996 ம் ஆண்டு அறிக்கை [1] கடைசியாக அணுகப்பட்ட திகதி: பெப்ரவரி 20, 2007.
↑ தொல்காப்பியம் கி.மு. 300 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது என்றதில் இருந்து இந்தக் கூற்றை நிறுவலாம்.
↑ கமில் சுவெலெபில், "Dravidian languages." Britannica Concise Encyclopedia. 2007. Encyclopædia Britannica Online. 7 Sept. 2007"("Relative stability of root vowels seems to have been the rule" "A tendency toward structural and systemic balance and stability is characteristic of the Dravidian group")[2]]
↑ ஐராவதம் மகாதேவன். (2003). Early Tamil Epigraphy from the Earliest Times to the Sixth Century A.D. கேம்பிறிஜ்: ஹார்வேர்ட் பல்கலைக்கழக பதிப்பகம்.
↑ அகழ்வாராய்ச்சி பற்றி இந்து நாளிதளின் பெப்ரவரி 02, 2005 செய்திக் குறிப்பு: "`Rudimentary Tamil-Brahmi script' unearthed at Adichanallur" [3]
↑ Southworth, Franklin C. (1998), "On the Origin of the word tamiz", International Journal of Dravidial Linguistics 27 (1): 129-132
↑ Zvelebil, Kamil V. (1992), Companion Studies to the history of Tamil literature, Leiden: E.J. Brill at pp. x-xvi.
↑ பர்க்லேயிலுள்ள கலிபோர்னியாப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவரான ஜார்ஜ் எல் ஹார்ட் 2004 ஆண்டில் வெளியிட்ட அறிக்கையை இங்கே காண்க.
↑ குடியரசுத் தலைவரின் பேச்சின்-கூற்று 41 யும், இந்திய அமைச்சரவையின் முறையான அங்கீகாரம் தொடர்பான பிபிசி செய்தியையும் காண்க.
[தொகு]பழங்காலக் குறிப்புகள்
பவநந்தி முனிவர், நன்னூல் மூலமும் விருத்தியுரையும் , (ஏ. தாமோதரன் ed., 1999), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
பவநந்தி முனிவர், நன்னூல் மூலமும் கூழாங்கைத்தம்பிரான் உரையும் (ஏ. தாமோதரன் ed., 1980). Wiesbaden, Franz Steiner Verlag.
தண்டியாசிரியர், தண்டியாசிரியர் இயற்றிய தண்டியலங்காரம்: சுப்பிரமணிய தேசிகர் உரையுடன். (கு. முத்துராசன் ed., 1994). தர்மபுரி, வசந்த செல்வி பதிப்பகம்.
தொல்காப்பியர், தொல்காப்பியம் இளம்பூரணர் உரையுடன் (1967 மறு அச்சு). சென்னை, TTSS.
[தொகு]தற்காலக் குறிப்புகள்
காங்கேயர். (1840). உரிச்சொல் நிகண்டுரை. புதுவை: குவேரன்மா அச்சுக்கூடம்.
ஐராவதம் மகாதேவன். (2003). Early Tamil Epigraphy from the Earliest Times to the Sixth Century A.D. கேம்பிறிஜ்: ஹார்வேர்ட் பல்கலைக்கழக பதிப்பகம்.
ரி. நடராசன். (1977). The language of Sangam literature and Tolkappiyam. மதுரை: Madurai Publishing House.
ஜி. யு. போப். (1862). First catechism of Tamil grammar: Ilakkana vinavitai - mutarputtakam. மதுரை: Public Instruction Press.
ஜி. யு. போப். (1868). A Tamil hand-book, or, Full introduction to the common dialect of that language. (3rd ed.). சென்னை: Higginbotham & Co.
வி. எஸ். இராசம். (1992). A Reference Grammar of Classical Tamil Poetry. Philadelphia: The American Philosophical Society.
ஹரால்டு எஃப் ஷிஃப்மன். (1998). "Standardization or restandardization: The case for 'Standard' Spoken Tamil". Language in Society 27, 359–385. [6]
ஹரால்டு எஃப் ஷிஃப்மன். (1999). A Reference Grammar of Spoken Tamil. கேம்பிறிஜ்: கேம்பிறிஜ் பல்கலைக்கழக பதிப்பகம். [7]
ரோன் ஆசர் & இ. அண்ணாமலை. (2002). Colloquial Tamil: The Complete Course for Beginners. Routledge.
[தொகு]வெளி இணைப்புகள்


விக்கி நூல்கள் , பின்வரும் தலைப்பைக் குறித்த மேலதிகத் தகவல்களைக் கொண்டுள்ளது:
Tamil
விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன: தமிழ்
[தொகு]பொது
எத்னோலாக்கின் அறிக்கை
ஆம்னிக்லாட் தரவு
ரோஸெட்டா திட்டத் தொகுப்பு
மொழி அருங்காட்சியகத்திலுள்ள உரை
யுசிஎல்ஏ தரவு
வரலாறு மற்றும் பண்புகள் பற்றிய விமர்சனம்
தமிழ் கருத்துக்களம்
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்
தமிழ் மொழி மற்றும் இலக்கியம்
தமிழ் இசை
திருத்தமிழ்
தமிழியல் ஆய்வுக் களம்
முனைவர்.தமிழப்பன் எழுதிய "தமிழுக்கு நேர்ந்த அவமானங்கள்"கட்டுரை
முனைவர் இரா.குணசீலன் எழுதிய "தமிழ் - உயர் தனிச் செம்மொழி!"கட்டுரை
[தொகு]தமிழ் மொழி கற்றுக்கொள்ள உதவும் ஆதாரங்கள்
தமிழ் கற்க வாங்க
யூபென் பாடப் பக்கம் - பென்சில்வேனியா பல்கலைக்கழக இணையவழித் தமிழ்ப்பாடத்தரவுகள்
தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கிய மின் தொகுப்பும் பல பாடங்களும் உள்ளன
தமிழ் இணைய நூலகம் தமிழ் இணைய நூலகம்
தமிழ் சூழலில் தமிழ் கற்றல்
"தமிழ் பாடநூல்"
ஆங்கிலம் மூலம் தமிழ் படித்தல்
மழலைகள்.காம் தமிழ் கற்கும் பகுதி
தமிழில பேசலாம் வாங்க
ஐஐடிஎஸ் - இந்தியவியல் மற்றும் தமிழ்க் கல்விக் கழகம், கோலோன் பல்கலைக்கழகம், ஜெர்மனி
கலிஃபோர்னியாப் பல்கலைக்கழகம், பெர்க்ளி
ரெக்சஸ் பல்கலைக்கழகம்
http://www.tamil-online.info/
பகுப்புகள்: தமிழ் | திராவிட மொழிகள் | தமிழியல் | முதற்பக்கக் கட்டுரைகள்
New featuresபுகுபதிகை/பயனர் கணக்கு தொடக்கம்
கட்டுரை
உரையாடல்
வாசிக்கவும்
தொகு
வரலாற்றைக் காட்டவும்

முதற் பக்கம்
சமுதாய வலைவாசல்
நடப்பு நிகழ்வுகள்
அண்மைய மாற்றங்கள்
ஏதாவது ஒரு கட்டுரை
உதவி
நன்கொடைகள்
Embassy
கருவிப் பெட்டி
இப் பக்கத்தை இணைத்தவை
தொடர்பான மாற்றங்கள்
சிறப்புப் பக்கங்கள்
அச்சுக்குகந்த பதிப்பு
நிலையான இணைப்பு
இக்கட்டுரையை மேற்கோள் காட்டு
ஏனைய மொழிகள்

1 comment:

  1. மிகவும் நன்று, நன்றி

    ReplyDelete