Thursday 29 April 2010

வீரம் விளைந்த குடும்பத்தில் சோகம்: வறுமையில் வாடும் கட்டபொம்மன் வாரிசு


கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க, ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள் மத்தியில், வித்தியாசமாக தெரிந்தது ஒரு முகம். 'சினிமாவில் வரும் கதாநாயகனை விவரிக்க நினைக்கிறார்களோ' என, நினைக்க வேண்டாம். சமீபமாக பார்த்த போது, காதுகளையும், பாதி முகத்தையும் மறைக்கும் கம்பீர மீசை. சரித்திரத்தை நினைவு கூறச் செய்யும் முண்டாசு.



வீரப்பரம்பரையை சேர்ந்தவர் என்பதை யூகித்து பேசத் துவங்கும் வேளையில், தொலைக்காட்சியில் ஏதேச்சையாக பார்த்த 'வானம் பொழிகிறது; பூமி விளைகிறது உனக்கேன் கொடுக்க வேண்டும் கிஸ்தி' என்ற வீர வசனத்தை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.காட்சி முடிந்தவுடன் கண்களில் இருந்து எட்டிப் பார்த்த கண்ணீரைத் துடைத்து, பூமியை நனைய விடாமல் தடுத்தார். சற்று நிதானித்த அவரின் முகத் தில் சோகம்; இருந்தும் வீரம் குறையவில்லை. நாம் சுதாரித்து விவரம் கேட்டபோது தான் தெரிந்தது, வீரபாண்டிய கட்டபொம்மனின் 5வது தலைமுறை என்று.தனியிடத்தில் அமர்ந்து, இவர் குடும்ப வீர வரலாற்றை விவரிக்க துவங்கினார். வீமராசா (எ) ஜெகவீரபாண்டிய சுப்ரமணிய கட்டபொம்ம துரை (70) என்பது தான் இவரது பெயர். கட்டபொம்மன் என்று உச்சரித்தாலே, இவரை மவுனம் தொற்றிக் கொள்கிறது. இயல்பு நிலைக்கு வந்தவர் தற்போதைய நிலையை விவரிக்கத் துவங்கினார்.



அவர் உதிர்த்தது: காலம் செல்லச் செல்ல, எங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலைக்கு தள்ளப்பட்டது. எங்களின் சோகம் அறிந்த 'தினமலர்' நிறுவனர் ராமசுப்பையர் அவர்கள் தினமலர் பத்திரிகையில் செய்தி வெளியிடச் செய்து, பண உதவியும் அளித்தது, மறக்க முடியாதது. 'தினமலர்' நாளிதழில் வெளிவந்த பின் தான், எங்களின் கஷ்ட ஜீவனம் பொதுமக்களுக்கு தெரிய துவங்கியது.கடந்த '67ம் ஆண்டு அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் பதவி வகித்த, தற்போதைய முதல்வர் கருணாநிதி, எங்கள் குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு மாதம் 50 ரூபாய் வழங்கத் துவங்கினார். 71ம் ஆண்டு ஜனவரி மாதம் மேலும் 5 பேருக்கு உதவித்தொகை கிடைக்கத் துவங்கியது. '97ம் ஆண்டு எனக்கும், வ.உ.சிதம்பரனார் பேரன், பாரதியார் பேரனுக்கும், தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியில், மூப்பனார் பேரவை சார்பில் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.



'எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்' என மாநில அரசை தொடர்ந்து வலியுறுத்தியதால், பாஞ்சாலங்குறிஞ்சியில் எங்கள் உறவினர்கள் 202 பேருக்கு வீடு, 3 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. விவசாயம் மேற்கொள்ள நிலம் ஏற்றதாக இல்லாததால், பலர் வீடுகளை விற்று விட்டனர். எங்களின் வீடும் சிறிது, சிறிதாக பெயர்ந்து பாழடைந்து வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது.எங்களின் நிலை அறிந்த, பாஞ்சாலங்குறிஞ்சியில் வசித்து, யுத்த காலத்தில் மலேசியா சென்ற குடும்பத்தினரில் தற்போது வசிக்கும் பூபதி பிரம்மநாயக்கர் என்பவர், கை கொடுத்து வருகிறார். தமிழக அரசு வழங்கி வரும் ஆயிரம் ரூபாயில் 'தொண்டை'யை நனைத்து வருகிறோம். மகன், மருமகனுக்கும் போதிய வருவாய் இல்லாததால், நடுத்தெருவுக்கு வந்து விடுவோமோ? என்ற அச்சம் ஏற்படுகிறது.சுதந்திர வேட்கைக்கு வித்திட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் குடும்பம், நிர்கதியாக விடப்பட்டுள்ளது, மாநில அரசுக்கு தெரிந்தும், உதவிகளை அதிகரிக்க முன்வரவில்லை.



ஆண்டுதோறும் நடக்கும் சுதந்திர தின விழாவின் போது, சால்வை போர்த்தும் 'முதல் மரியாதை' மட்டுமே எங்களுக்கு கிடைக்கிறது.தியாகிகளுக்கு தரப்படும் பென்ஷனை போன்று எங்களுக்கும் தர வேண்டும். கட்டபொம்மன் புகழை அறிந்து கொள்ளும் வகையில், சென்னையில் கட்டபொம்மனுக்கு சிலை வைக்க வேண்டும்.இவ்வாறு, குரல் 'கம்ம' கூறி முடித்தார் வீமராசா. ஈரம் உள்ள இதயங்கள் இருக்கத் தான் செய்கிறது என்று நிரூபிக்க நினைத்தால், 97519-13832 என்ற எண்ணில், இவரை தொடர்பு கொள்ளுங்களேன்...!

Wednesday 28 April 2010

அழகரின் வரலாறும்: அழகர்கோவிலின் சிறப்பம்சமும்




ஒரு காலத்தில் இந்த உலகில் இறப்பு என்பதே இல்லாமல் இருந்தது. ஏனெனில் யாரும் தவறு செய்வதே கிடையாது. இருந்தும் ஒருவன் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்வதற்காக துரத்தி வரும் போது அங்கு வந்த தர்மதேவன் அவனை ஒரே அடியில் வீழ்த்தினார். இந்த விஷயத்தை கேள்விப் பட்ட சிவன், உலகில் தர்ம,நியாயம் அழிந்து விடக்கூடாது.



அதை பாதுகாப்பது உன் பொறுப்பு. எனவே அதற்குரிய உருவத்தை உனக்கு தருகிறேன் என கூறி தர்மதேவனுக்கு, பற்கள் வெளியே தெரியும் படி ஒரு கொடூரமான உருவத்தை வழங்கி விட்டார். இதைக்கண்ட உயிர்கள் நாம் தப்பு செய்தால் தர்மதேவன் அழித்து விடுவான் என்று பயம் கொண்டன. நல்லது செய்யப்போய் நமது உருவம் இப்படி ஆகி விட்டதே என கவலை கொண்டான் தர்மதேவன். சரி! நமது உருவம் தான் இப்படி ஆகி விட்டது. நாம் தினமும் எழுந்தவுடன் விழிக்கும் முகமாகவது மிகவும் அழகாக இருக்க வேண்டும் என இந்த அழகர்கோவில் மலையில் தவம் இருந்தான். இவனது தவத்திற்கு மகிழ்ந்த அழகின் தெய்வமான விஷ்ணு, இவனுக்கு காட்சி கொடுத்து ''வேண்டியதை கேள்'' என்று கூறினார். அதற்கு தர்மதேவன், நான் இந்த மலையில் தவம் செய்த போது காட்சி கொடுத்தீர்கள். எனவே நீங்கள் நிரந்தரமாக இங்கேயே எழுந்தருளவேண்டும். அத்துடன் தினமும் ஒரு முறையாவது உங்களுக்கு பூஜை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும் என்றான்.



தர்மதேவனின் வேண்டுகோளின் படி மகாவிஷ்ணு சுந்தரராஜப்பெருமாளாக இந்த மலையில் எழுந்தருளினார். சுந்தரம் என்றால் 'அழகு'. எனவே அழகர் என்ற பெயரே நிலைத்து விட்டது. அத்துடன் தர்மதேவனுக்கு காட்சி கொடுத்த மலை அழகர் மலை என்றானது. இன்றும் கூட அழகர்கோவிலில் அர்த்தஜாம பூஜையை தர்மதேவனே செய்வதாக ஐதீகம்.



தல சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஸ்ரீரங்கம் முதலிடத்தையும், காஞ்சிபுரம் அடுத்த இடத்தையும் மூன்றாவது இடத்தை அழகர்கோவிலும் பெற்றுள்ளன. இத்தலத்தை பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ் வார், திருமங்கையாழ்வார், ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர். பீஷ்மரும், பஞ்சபாண்டவர்களும் இத்தல பெருமாளை தரிசித்து பலனடைந்துள்ளனர்.



கள்ளழகர் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது : அழகர்கோவில் மூலவர் பரமசாமி. ஸ்ரீதேவி,பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். மகாவிஷ்ணுவின் திருக்கோலங்களிலேயே அழகர்கோவிலில் உள்ள சுந்தரராஜப்பெருமாள் தான் பெயருக் கேற்றாற் போல் மிகவும் அழகாக இருப்பார். தர்மதேவனுக்கு காட்சி தர பெருமாள் வந்ததால் வைகுண்டத்தில் பெருமாளை காணாமல் மகாலட்சுமி பெருமாளைத்தேடி இங்கு வந்துவிட்டாள். மகாவிஷ்ணுவை விட மிக அழகான லட்சுமியைக்கண்ட தர்மதேவன், மகாலட்சுமியும் பெருமாளுக்கு அருகில் இங்கேயே தங்க வேண்டும் என அடம் பிடித்தார். இவனது வேண்டுகோளின் படி மகாலட்சுமி பெருமாளை கைப்பிடித்து அவருக்கு அருகில் கல்யாண சுந்தரவல்லி எனும் திருநாமத்துடன் இங்கு வீற்றிருக்கிறாள். இப்படி அழகான இருவரது திருமணக்கோலம் அனைவர் மனதையும் திருடிக்கொண்டது. மக்கள் மனதை கொள்ளை கொண்டதால் அழகர் 'கள்ளழகர்' ஆனார். இதனாலேயே இந்த பெருமாளை நம்மாழ்வார், 'வஞ்சக்கள்வன் மாமாயன்' என்கிறார்.



தேனூர் மண்டபத்தில் நடந்த விழா : மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் கொடுப்பதற்காக அழகர் கோயிலிலிருந்து மதுரைக்கு வரும் அழகர், தேனூர் மண்டபத்தில் சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள் காட்சி தரும் சித்திரை திருவிழா ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தது. அதே போல் மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்பு வரை மாசிமாதம் பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வந்தது. இப்படி சைவத்திற்கு தனிவிழா, வைணவத்திற்கு தனி விழா என மதுரையில் கொண்டாடப்பட்டு வந்ததை திருமலை நாயக்கர் இரண்டு விழாவையும் ஒன்றாக்கி சைவ, வைணவ ஒற்றுமை திருவிழாவாக ஆக்கி விட்டார்.



வைகை தோன்றியது எப்படி : மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண விருந்து சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. தங்கள் வீட்டு விருந்தைப் பற்றி பெருமையுடன் சிவனிடம் பெண் வீட்டார் பேசினர். ''தங்களுடன் வந்துள்ள அனைவரும் உடனடியாக சாப்பிடச் சொல்லுங்கள். இங்கே உணவுவகை கொட்டிக் கிடக்கிறது. சாப்பிடாமல் இருந்தால் வீணாக அல்லவா போய் விடும்?'' என்றனர். சிவன் அவர்களிடம், ''இப்போது யாருமே பசியில்லை என்கிறார்கள். இதோ, எனது கணங்களில் ஒருவனான இந்த குண்டோதரனுக்கு முதலில் விருந்து வையுங்கள். மற்றவர்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம்,'' என்றார்.



விருந்தை மருந்தைப் போல ஒரே வாயில் போட்டு மென்று விட்டான் குண்டோதரன். பெண் வீட்டார் திகைத்தனர்.''மற்றவர்களை எப்படி சமாளிக்கப் போகிறோம். இந்த குண்டோதரன் இப்போது தின்றது போதாதென்று இன்னும் கேட்கிறானே,'' என வெட்கி நின்ற அவர்கள் அந்த இறைவனையே சரணடைந்தனர். திருமண வீட்டில் பெருமை பேசக்கூடாது என்பது இதனால் தான். அரண்மனைவாசிகளாயினும் அகந்தை கூடாது என்பது இச்சம்பவம் தரும் தத்துவம். சிவன் அன்னபூரணியை அழைத்தார். அவள் கொடுத்த உணவை சாப்பிட்டு விட்டு ஆறு, குளம், குட்டை, வாய்க்கால், ஏரி இவைகளில் உள்ள தண்ணீர் எல்லாம் குடித்து முடித்தான் குண்டோதரன்.அப்படியும் தாகம் தீராததால் ஈசனிடம் வந்து முறையிட்டான்.



ஈசன் தன் சடை முடியிலிருந்த கங்கையிடம், '' மதுரை நகருக்கு உடனே தண்ணீர் தேவைப்படுகிறது. உடனே அங்கு பாய்ந்தோடு,'' என கட்டளையிட்டார். குண்டோதரனிடம், '' நீர் வரும் திசைநோக்கி கை வை. அந்த நீரை குடித்து உன் தாகத்தை தீர்த்து கொள்,'' என்றார். இதுவே 'வைகை' ஆனது. கங்கை பாய்ந்ததால் வைகையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. எனவே அது புண்ணிய நதியாக மாறியது. இப்படி கங்கையையும் வைகையையும் இணைக்கும் திட்டத்தை சிவன் அன்றே உருவாக்கி வைத்திருக்கிறார். இந்த நதி காற்றை விட வேகமாக வந்ததால் 'வேகவதி' எனப்பட்டது.வைகையை பாழடித்து விட்ட நாம், அழகரையே வாய்க்கால் கட்டி இறக்கி விட்டிருக்கும் நாம், அவரிடம் பாவங்களுக்கெல்லாம் மன்னிப்பு கேட்டு, மழை பொழிய வேண்டுவோம்.



அழகர்கோவிலின் சிறப்பம்சம் :கருப்பண்ணசுவாமி: இத்தலத்தில் காவல் தெய்வமாக விளங்கும் கருப்பண்ணசுவாமி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம்.பதினெட்டாம்படியான் என்று பக்தர்கள் மிகவும் பயபக்தியோடு அழைக்கப்படுகிறார்.இவரை கும்பிட்டால் நினைத்த காரி யங்கள் கைகூடும்.



கோட்டை: விவசாயிகள் விளைச்சல் அறுவடைக்கு முன்பு தங்கள் நிலத்தில் குறிப்பிட்ட இடத்தில் கோட்டை கட்டி அதில் இருக்கும் தானியங்களை அழகருக்கு காணிக்கையாக செலுத்துவார்கள்.



அழகர் கோயில் தோசை: காணிக்கையாகக் கிடைக்கும் தானியங்களை அரைத்து மாவாக்கி அதில் கோயில் சார்பாக தோசை சுட்டு பிரசாதமாகத் தரப்படுகிறது. இது பழநி பஞ்சாமிர்தம், திருப்பதி லட்டு போன்று மிகவும் புகழும், சிறப்பும் உடையது.



நூபுர கங்கை : சிலம்பாறு - ராக்காயி அம்மன் கோயில் அம்மன் கால் சிலம்பிலிருந்து மலைக்குகைக்குள் இருந்து வற்றாத ஜீவ நதியாக வந்து கொண்டிருக்கிறது
* மூலவர் மானிட பிரதிஷ்டை இல்லை. தெய்வ பிரதிஷ்டை.
* பெருமாள் சப்தரி ஷிகள் சப்த கன்னிகள் பிரம்மா விக்னேஷ்வர் ஆகியோரால் ஆராதிக்கப்படுகிறார்.
* 6 ஆழ்வார்களாலும் பாடல் பெற்ற முக்கிய திவ்ய தேசம்
* சக்கரத்தாழ்வார் சப்த கன்னிகளால் ஆராதிக்கப்படுகின்றார்.
* மற்ற தலங்களில் நின்ற கோலத்தில் மட்டுமே காட்சி தரும் ஆண்டாள் உற்சவராக உட்கார்ந்திருக்கிறார்.



மண்டூக முனிவருக்கு விமோசனம் தந்த விழா : முன்னொரு காலத்தில் மகாவிஷ்ணு இந்த உலகை அளக்க தனது திருவடியை தூக்கினார். அப்போது பிரம்மன், திருமாலின் தூக்கிய திருவடியை கழுவி பூஜை செய்தார். அப்படி கழுவிய போது திருமாலின் கால்சிலம்பு(நூபுரம்) அசைந்து அதிலிருந்து நீர்த்துளி பூமியிலுள்ள அழகர்மலை மீது விழுந்தது. கங்கையை விட புண்ணியமான இந்த தீர்த்தமே, நூபுர கங்கை என்ற பெயரில் இன்னும் அழகர் கோவில் மலையில் வந்து கொண்டிருக்கிறது. இந்த தீர்த்தத்தில் அமர்ந்து தான் சுபதஸ் என்ற முனிவர் அமர்ந்து பெருமாளை நினைத்து தியானம் செய்து கொண்டிருந் தார். அப்போது அவரைக்காண கோபக்கார முனிவரான துர்வாசர் அங்கு வந்தார். பெருமாளின் நினைப்பிலேயே இருந்த சுபதஸ் முனிவர், துர்வாசரை சரியாக உபசரிக்கவில்லை. இதனால் கோபமடைந்து துர்வாசர், ''மண்டூக பவ'' அதாவது, மண்டூகமான நீ மண்டூகமாகவே (தவளை) போ என சாபமிட்டார். இந்த சாபத்தினால் பதறிய சுபதஸ் முனிவர், துர்வாசரே, பெருமாளின் நினைப்பில் இருந்ததினால் உங்களை சரியாக உபசரிக்க முடியவில்லை, எனவே எனக்கு சாபவிமோசனம் தந்தருள வேண்டும் என வேண்டினார்.அதற்கு துர்வாசர், வேதவதி என்கிற வைகை ஆற்றில் தவம் செய். அப்போது அழகர்கோவிலிலிருந்து வரும் பெருமாளால் உனக்கு சாபவிமோசனம் கிடைக்கும் என கூறி செல்கிறார். சித்திரை திருவிழாவிற்காக அழகர்கோவிலிலிருந்து கிளம்பும் பெருமாள்,மதுரை தல்லாகுளத்தில் ஆண்டாள் தொடுத்த மாலையை சூட்டிக்கொண்டு குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குகிறார்.அழகர்கோவிலில் இருந்து பல்லக்கில் கிளம்பும் அழகர் பின் குதிரை வாகனம், சேஷவாகனம் என மாறுகிறார். சித்ராபவுர்ணமிக்கு மறுநாள், தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு காட்சி தந்து சாபவிமோசனம் தருகிறார். இதன் பின் ராமராயர் மண்டகப்படியில் தசாவதாரம் எடுக்கிறார்

Wednesday 21 April 2010

கூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்

கூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்

நமக்கு எழும் சந்தேகங்களை இனி இணையதளத்தில் உள்ள
தேடுபொறியில் சென்று தேட வேண்டாம் கூகுள்டாக் மட்டும்
நம்மிடம் இருந்தால் போதும் உங்கள் சந்தேகங்களை சரியாக
சில நொடிகளில் தேடி விடையை கொடுக்கிறது. அடுத்து
எந்த பழங்களில் எவ்வளவு கலோரி உள்ளது என்று எந்த
இணையதளத்துக்கும் செல்லாமல் கூகுள் டாக் மூலம் சில
நொடியில் கண்டுபிடிக்கலாம் கொஞ்சம் வித்தியாசமாகத்தான்
இருக்கிறது. கூகுள் டாக்-ல் உள்ள இந்த பிரமிக்க வைக்கும்
அதிசயங்களைப் பற்றி தான் இனி பார்க்கப்போகிறோம்.


படம் 1

படம் 2

படம் 3

படம் 4
உங்களிடம் கூகுள் டாக்-ன் எந்த பதிப்பு இருந்தாலும் இதைப்
பயன்படுத்தலாம். முதலில் தேடுதல் பற்றிப்பார்ப்போம் நம்
ஜீடாக்-ல் படம் 1-ல் காட்டியபடி ” ADD ” என்ற பட்டனை
அழுத்தி sbot@bot.im என்ற முகவரியை படம் 2-ல்
காட்டியபடி கொடுக்கவும் அடுத்து Next என்ற பட்னை அழுத்தி
அதன் பின் வரும் Finish என்ற பட்டனை அழுத்தி வெளியே
வரவும். எல்லாம் கொடுத்து முடித்த பின் படம் 3 -ல்
காட்டியபடி sbot@bot.im என்பதை தேர்வு செய்து உங்கள்
கேள்விகளை கேட்கலாம் உதாரணமாக நாம் g winmani என்ற
வார்த்தையை கொடுத்துள்ளோம் அதற்கான தேடுதல் முடிவு
படம் 4-ல் காட்டப்பட்டுள்ளது. இதே போல் உங்கள் தேடுதல்
வார்த்தையை கொடுக்கலாம். தேடுதல் முடிவுகள் கூகுள்-ல்
இருந்து மட்டுமல்ல யாகூ, பிங் போன்ற தேடுபொறிகளிலும்
இருந்தும் முடிவுகளைப் பெறலாம். நாம் தேடுதல் கொடுக்கும்
வார்த்தக்கு முன் g ஒரு இடைவெளிவிட்டு தேடுதல் வார்த்தையை
கொடுக்கலாம் உதாரணமாக g winmani என்று கொடுக்கலாம்.
இதில் g என்பது கூகுள் தேடுதலை குறிக்கும். இதேபோல்
y winmani என்றும் கொடுக்கலாம் இதில் y என்பது யாகூவை
குறிக்கும். இதே போல் b winmani என்றும் கொடுக்கலாம்.
இதில் b என்பது பிங் தேடுபொறியை குறிக்கும்.தேடுதல் முடிவும்
மிகச்சரியாகத்தான் இருக்கிறது. அடுத்து பழங்களில் உள்ள
கலோரி அளவை கூகுள் டாக் மூலம் கண்டுபிடிக்கலாம்.
இதற்கும் படம் 1-ல் காட்டியபடி ” ADD ” என்ற பட்டனை
அழுத்தி calories@lifemojo.com என்ற முகவரியை
கொடுத்து Next -அழுத்தி Finish செய்யவும்.


படம் 5

படம் 6
அடுத்து படம் 5-ல் உள்ளது போல் வந்துவிடும் இதை அழுத்தி
படம் 6 -ல் உள்ளது போல் எந்த பழத்தின் கலோரியை
தெரிந்துகொள்ளவேண்டுமோ அந்த பழத்தின் பெயரை
கொடுக்கவும் உதாரணமாக நாம் mango என்று கொடுத்துள்ளோம்
1. உள்நாட்டில் இருந்து கொண்டு நம் தாய் மண்ணின்
பெருமை அறிந்து கொள்பவரைவிட வெளிநாட்டில்
இருப்பவருக்குத் தான் நம் மண்ணின் பெருமை புரியும்.

2. மக்கள் பணத்தை சுரண்டும் அரசியல்வாதியின் குற்றம்
நிரூபிக்கப்பட்டாலும் படாவிட்டாலும் அடுத்தப் பிறவியில்
கழுதையாக பிறந்து பொதியை சுமப்பான்

3. கோபம் வரும் நேரங்களில் அமைதியாக இருங்கள், யார் என்ன
கூறினாலும் கோபப்படாதீர்கள். ஆயிரம் வார்த்தை பேசுவதை விட
ஒரு மவுனம் பல பதிலை கொடுக்கும்

4.கல்வி அறிவு பெற்ற மற்றும் பெறாத சில முட்டாள்களிடம் நாம்
எவ்வளவு நேரம் பேசினாலும் அது நிழலுக்கு இறைத்த நீராகத்தான்
போகும். இவர்களிடம் நாம் மவுனமாய் இருப்பதே சிறந்தது

5. பசிக்கும் ஏழைக்கு உணவு கொடுக்க முடியவில்லை என்றால்,
நாட்டில் தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்து என்ன செய்ய ?

கேள்வி பதில்

1.அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஆங்கிலச்சொல் எது ?
2.இந்தியாவின் மிக உயரிய வீர விருது எது ?
3.காப்பர் நாடு எது ?
4.பாலைவனங்களில் காணப்படும் செடி வகை யாது ?
5.ஆபரணங்களில் தங்கத்தை விட விலை உயர்ந்தது எது ?
6.உலகிலேயே சில்க் அதிகமாக ஏற்றுமதி ஆகும் நாடு எது ?
7.இந்தியாவில் தொலைபேசி தயாரிப்பில் புகழ் பெற்ற நகரம் எது?
8.ஆமைகளை பிடிப்பதற்கு பயன்படும் மீன் எது ?
9.கங்காரு குட்டி பிறந்ததும் அதன் நீளம் என்ன ?
10.பாலைத் தயிராக்கும் பாக்டீரியா எது ?
பதில்கள் :
1. தி ( The),2.பரம்வீர் சக்ரா, 3.ஷாம்பியா,
4.காக்டஸ்,5.பிளாட்டினம்,6.சீனா,7.பெங்களுர்
8.ஸக்கர் மீன்கள், 9. 2.5 செ.மீ, 10.லாக்டோ பாஸிலஸ்

1.எகிப்தியர்களின் முதன்மை கடவுள் யார் ?
2.இசைக்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் வேதம் எது ?
3.ஒளி செல்லும் வேகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி யார்?
4.ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் மலர் எது ?
5.மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுத பயிற்ச்சி
அளிக்கும் நாடு எது ?
6.சதுரங்க அட்டையில் மொத்தம் எத்தனை சதுரம் உள்ளன?
7. பண்டைய ஆரியர்களின் மொழி யாது ?
8. ஏழு குன்றுகளின் நகரம் என்று அழைக்கப்படுவது எது ?
9.சூரிய மண்டலத்தை கடந்து சென்ற ஒரே செயற்கைக்கோள் எது?
10. தமிழ்நாட்டின் விலங்கு எது ?
பதில்கள்:
1.சூரியன்,2.சாம வேதம், 3.ரோமர்,
4.கார்டஸ்,5. ஜப்பான்,6.64 சதுரம்,7.சமஸ்கிருதம்
8.ரோம், 9.பயோனியர் 10, 10.வரையாடு

1.உலகின் சர்க்கரை கிண்ணம் எது ?
2.சைக்கிளை கண்டுபிடித்தவர் யார் ?
3.பட்டுப்புழுக்களின் உணவு எது ?
4.பாரதியார் சமாதி எங்குள்ளது ?
5.பாலிஸ் என்றால் என்ன ?
6.இந்தியாவில் மிளகுக்கு புகழ் பெற்ற இடம் எது ?
7.சீஸ்மொகிராப் கருவி எதை அளக்க பயன்படுகிறது ?
8.பூனை எத்தனை மாதங்களில் கூட்டி ஈனும் ?
9.சிறுவாணி அணை எங்குள்ளது ?
10.காமராஜரின் அரசியல் குரு யார் ?
பதில்கள்:
1.கியூபா,2.மெக்மில்லன், 3.முசுக்கொட்டை,
4.பாண்டிச்சேரி,5. நகர அரசு,6.கேரளா,7.நிலநடுக்கம்
8.மூன்று மாதங்களில், 9.கோயம்புத்தூர்,10.சத்திய மூர்த்தி

1. மிக நீண்டகாலம் உயிர்வாழும் பிராணி எது ?
2. மக்மகான் எல்லைக்கோடு எந்த நாடுகளைப் பிரிக்கிறது ?
3. ஒரு காசுக்குகூட நோட்டு அச்சடித்து வெளியீடும் அரசு எது ?
4. இந்தியாவின் முதல் வைசிராய் யார் ?
5. தீபநகரம் என்றழைக்கப்படும் நகரம் எது ?
6. இந்திய இருப்புப்பாதையின் மொத்த நீளம் எது ?
7. இந்தியா முதன்முதலில் அனுவெடிப்பு சோதனை நடத்திய
இடம் எது ?
8. முந்திரி உற்பத்தியில் உலகிலேயே முதலிடம் வகிக்கும்
நாடு எது?
9. ஸ்பெயின் நாட்டின் தேசிய விளையாட்டு எது ?
10. பட்டாம் பூச்சிகளின் சரணாலயம் எது ?
பதில்கள்:
1. திமிங்கலாம்,2.இந்தியா - சீனா, 3.ஹாங்காங்,
4.கானிங் பிரபு,5. மைசூர்,6.60 ஆயிரம் கி.மீ
7.ராஜஸ்தான்,8. இந்தியா, 9.காளைச்சண்டை,10.மெக்சிகோ

1. நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு எது ?
2. சைக்கிள் உற்பத்தியில் சிறந்து விளங்கும் முதல் நாடு ?
3. பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரல் யார் ?
4. ராடர் கருவியை கண்டுபிடித்தவர் யார் ?
5. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முதல் ஜனாதிபதி யார் ?
6. புனித வெள்ளி அன்று கொலை செய்யப்பட்ட அமெரிக்க
ஜனாதிபதி யார் ?
7. எகிப்தின் வெள்ளைத் தங்கம் எது ?
8. நீந்தத் தெரியாத மிருகம் எது ?
9.1980 ஆம் ஆண்டு அர்ஜூனாவிருது பெற்ற கிரிக்கெட்வீரர் யார்?
10. திரவத்தங்கம் என்று அழைக்கப்படுவது எது ?
பதில்கள்:
1.நார்வே,2.சீனா, 3.முகம்மது அலி ஜின்னா,
4.ஆர்.வாட்சன்வாட்,5. ஜார்ஜ் வாஷிங்டன்,6.ஆப்ரகாம் லிங்கன்
7.பருத்தி,8.ஒட்டகம், 9.கபில்தேவ்,10.பெட்ரோலியம்

Tuesday 20 April 2010

இந்தியாவிற்குள் நுழைய பிரபாகரனின் தாய்க்கு அனுமதி மறுப்பு

இந்தியாவிற்குள் நுழைய பிரபாகரனின் தாய்க்கு அனுமதி மறுப்பு
ஏப்ரல் 18,2010,00:00 IST


சென்னை : சிகிச்சைக்காக சென்னை விமான நிலையம் வந்த விடுதலைப் புலி இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயாரை, இந்தியாவிற்குள் நுழைய அனுமதியில்லை எனக்கூறி குடியுரிமை அதிகாரிகள் சென்னையில் இறங்க அனுமதி மறுத்தனர். வேறு வழியின்றி வந்த விமானத்திலேயே அவர் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். விமான நிலையத்தில், வைகோ போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.



விடுதலைப் புலி இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாய் பார்வதி(80). இவர், பக்கவாத நோய் சிகிச் சைக்காக, சென்னையில் சிகிச்சை பெற முடிவு செய்தார். இதற்காக நேற்று முன்தினம் இரவு 10.45 மணிக்கு பார்வதி, அவருக்கு உதவியாக விஜயலட்சுமி என்பவரும், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தனர். விமான நிலையத்தில் இருவரிடமும் குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது பார்வதி, இந்தியாவில் நுழைய அனுமதி இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் உள்ளே நுழையக் கூடாது என குடியுரிமை அதிகாரிகள் கூறினர். அவர்களை மீண்டும் கோலாலம்பூர் செல்லும்படி அறிவுறுத்தினர்.'நான் சென்னையில் சிகிச்சை பெற வந்துள்ளேன்; திரும்பிச் செல்ல முடியாது' என, பார்வதி மறுத்ததால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற் பட்டது.



பார்வதியை வரவேற்று, அழைத் துச் செல்வதற்காக ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ மற்றும் சிலர் விமான நிலையத்திற்கு வந்தனர். பின், பார்வையாளர்கள் நுழைவுச்சீட்டை பெற்றுக் கொண்டு, பன்னாட்டு முனைய வருகை பகுதிக்குள் சென்றனர். பார்வையாளர்கள் நுழைவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் விமான நிலையத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் மட்டுமே செல்ல முடியும். போர்டிங், இமிகிரேஷன் பிரிவுகளுக்கு செல்ல அனுமதியில்லை. 'பார்வதி, இந்தியாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட் டுள்ளது; அவர் மீண்டும் கோலாலம்பூருக்கு அதே விமானத்தில் திருப்பி அனுப்பப்படுகிறார்' என்ற தகவல் வைகோவிற்கு தெரிவிக்கப் பட்டது. 'பார்வதியை பார்க்க வேண்டும், அவரை சென்னையில் இறங்க அனுமதிக்க வேண்டும்' என்று, விமான நிலைய அதிகாரிகளிடம் வைகோ வாதிட்டார்.



' அனுமதி தரும் வரை நான் விமான நிலையத்தில் இருந்து வெளியேற மாட்டேன்' என்று கூறி, வைகோ தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் நள்ளிரவில் பதட்டம் ஏற்பட்டது. அதிரடிப்படை உள்ளிட்ட அனைத்து பிரிவு போலீசாரும் விமான நிலையத்தில் குவிக்கப்பட்டனர். வைகோவிடம் பேச்சு நடத்திய போலீசார், 'பார்வதி மீண்டும் கோலாலம்பூர் சென்று விட்டார்; நீங்களும் புறப்படுங்கள்' என்றனர். அதற்கு, 'அவர் இன்னும் புறப்படவில்லை; அவரை சென்னையில் இறங்க அனுமதியுங்கள்' என்று வாதாடினார். பார்வதியை ஏற்றிக் கொண்டு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னையில் இருந்து நள்ளிரவு 12.05க்கு புறப்பட்டுச் சென்றது.



அதன்பின், போராட்டத்தை முடித்துக் கொண்டு வெளியே வந்த வைகோ, நிருபர்களிடம் கூறியதாவது: பக்கவாதத்திற்கு சிகிச்சை பெற சென்னை வந்த பார்வதியை, இந்திய குடியுரிமை அதிகாரிகள் திருப்பி அனுப்பியது மனிதாபிமானமற்ற, கொடுமையான செயல். அவர் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு இந்திய, தமிழக அரசுகள் தான் பொறுப்பு. தற்போது மத்திய தொழிலக பாதுகாப்புப் படை போலீசாரின் கட்டுப்பாட்டில் தான் விமான நிலையம் உள்ளது. ஆனால், தமிழக போலீசார் விமான நிலையத்திற்குள் நுழைந்து அத்துமீறி செயல்பட்டுள்ளனர். பார்வதி உரிய ஆவணங்களுடன், அனுமதி பெற்று தான் இந்தியா வந்துள்ளார். இருப்பினும், அவர் இந்தியாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்ஷே வரும்போது, அவருக்கு பலத்த பாதுகாப்புடன், பூர்ண கும்ப மரியாதை தரப்படுகிறது. ஆனால், ஒரு வயதான தாய், சிகிச்சைக்காக சென்னைக்கு வருவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இவ்வாறு வைகோ கூறினார்.



உண்ணாவிரதம் அறிவிப்பு: 'சிகிச் சைக்காக சென்னை வந்த பார்வதியை திருப்பி அனுப்பியதைக் கண்டித்து, சென்னையில் வரும் 22ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்' என, ம.தி.மு.க., அறிவித்துள்ளது

Monday 19 April 2010

பி‌ள்ளை‌ப் பேறு‌க்கு‌ம், ‌‌பிரசவ‌த்‌தி‌ற்கு‌ப் ‌பி‌ன்பு‌ம்

‌ பி‌ள்ளை‌ப் பேறு‌க்கு‌ம், ‌‌பிரசவ‌த்‌தி‌ற்கு‌ப் ‌பி‌ன்பு‌ம்

25 பிப்ரவரி 2010( 11:44 IST )

கருநொ‌ச்‌சி சாறு, க‌ரிசாலை சாறு, எலு‌மி‌ச்ச‌ம் பழ‌ச்சாறு, ‌சி‌ற்றாமண‌க்கு எ‌ண்ணெ‌ய், பசு நெ‌ய் போ‌ன்றவ‌ற்றை வகை‌க்கு 100 ‌மி‌ல்‌லியு‌ம், நெரு‌‌ஞ்‌சி‌ல் ‌விதை, ‌மிளகு, பெரு‌ங்காய‌ம் ஆ‌கியவ‌ற்றை வகை‌க்கு 6 ‌கிராமு‌க்கு எடு‌த்து இடி‌த்து கல‌ந்து கா‌ய்‌ச்‌சி வடிக‌ட்டி‌க் கொ‌ள்ளவு‌ம்.

இதை, மாத‌வில‌க்கான 3 நா‌ட்க‌ள் 16 ‌மி‌ல்‌லி அளவு குடி‌த்து வர மல‌ட்டு‌த் த‌ன்மை ‌நீ‌ங்க க‌ர்‌ப்ப‌ம் உ‌ண்டாகு‌ம்.

அத‌ே‌ப்போல ‌பிரசவ‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகு‌ம் ‌பி‌ள்ளை‌ப் பெ‌ற்ற பெ‌ண்களு‌க்கு உட‌ல் வ‌லி அ‌திகமாக இரு‌க்கு‌ம்.

உட‌ல் வ‌லி ‌தீருவத‌ற்கு நொ‌ச்‌சி இலையை ‌‌நீ‌ரி‌ல் இ‌ட்டு கா‌ய்‌ச்‌சி, அ‌ந்த ‌நீ‌ரி‌ல் கு‌ளி‌த்து வர உட‌ல் வ‌லி குணமாகு‌ம்.

இதே‌ப் போ‌ன்ற முறையை ‌பி‌ள்ளை‌ப் பெ‌ற்ற பெ‌ண்களு‌க்கு‌ம் செ‌ய்து கு‌ளி‌ப்பா‌ட்டி ‌வி‌ட்டா‌ல் உட‌‌ல் வ‌லி ‌தீரு‌ம்.

குழ‌ந்தைக‌ள் உ‌ள்ள ‌வீடுக‌ளி‌ல் கொசுவை ஒ‌‌ழி‌க்க நொ‌ச்‌சி இலை கொ‌ண்டு ‌‌தீமூ‌ட்டி புகை‌ப் போ‌ட்டு ‌விடுவது ஒ‌வ்வாமைகளை‌த் த‌வி‌ர்‌க்க உதவு‌ம்.

Sunday 18 April 2010

குற்றாலம்




குற்றாலம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குற்றாலம்
மாநிலம்
- மாவட்டங்கள் தமிழ்நாடு
- திருநெல்வேலி
பரப்பளவு கிமீ²
கால வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
மக்கள் தொகை (2001)
- மக்களடர்த்தி 2368
-

குற்றாலம் (ஆங்கிலம்:Courtalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மாரிக்காலத்தில் இங்கு விழும் அருவிகளில் குளிப்பதற்காகச் சுற்றுலாப் பயணிகள் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வருகின்றனர். இங்குள்ள திருக்குற்றாலநாதர் கோவிலும் பெயர் பெற்றது. இவ்விடத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட திருக்குற்றாலக் குறவஞ்சி தமிழ் சிற்றிலக்கியங்களில் புகழ் பெற்றது.

குறு ஆல் என்பது ஒருவகை ஆலமரம். அத்தகைய மரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி என்பதால், குற்றாலம் எனும் பெயர் ஏற்பட்டது.

[தொகு] மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2368 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[1] இவர்களில் 41% ஆண்கள், 59% பெண்கள் ஆவார்கள். குற்றாலம் மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. குற்றாலம் மக்கள் தொகையில் 7% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

[தொகு] குற்றாலம் அருவி
குற்றாலம் அருவி தென் தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இது சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆகிய ஆறுகளின் பிறப்பிடமாகும். குற்றால அருவிக்கரையில் குற்றால நாதர் (சிவன்) சன்னதி உள்ளது.

குற்றாலம் தென்காசியில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 137 கிலோமீட்டர் தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து 112 கிலோமீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. குற்றாலத்தின் அருகே (86 கிலோமீட்டர்) அமைந்துள்ள விமான நிலையம் தூத்துக்குடி விமான நிலையமாகும். தென்காசி தொடர்வண்டி நிலையம் குற்றாலத்தின் அருகே அமைந்துள்ள தொடர்வண்டி நிலையமாகும்.

தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் நீர் ஆர்ப்பரித்து விழுத்தொடங்கும். ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் "குற்றால சீசன்" என அழைக்கப்படுகிறது.

குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் அமைந்துள்ளன.

1. பேரருவி - இது பொதுவாக குற்றால அருவி என அழைக்கப்படுகிறது. இது 288 அடி உயரத்தில் இருந்து பொங்குமாங்கடல் என்ற ஆழமான ஒரு துறையில் விழுந்து பொங்கி பரந்து விரிந்து கீழே விழுகிறது.

2. சிற்றருவி - இது நடந்து செல்லும் தூரத்தில் பேரருவிக்கு மேல் அமைந்துள்ளது.

3. செண்பகாதேவி அருவி - பேரருவியில் இருந்து மலையில் 2 கி.மீ. தூரம் நடைப்பயணத்தில் செண்பகாதேவி அருவியை அடையலாம். இந்த அருவி தேனருவியிலிருந்து இரண்டரை கி.மீ. கீழ்நோக்கி ஆறாக ஓடி வந்து 30 அடி உயரத்தில் அருவியாக கொட்டுகிறது. அருவிக்கரையில் செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது. சித்ரா பவுர்ணமி நாளில் இந்த கோவிலில் சிறப்பான விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

4. தேனருவி - செண்பகாதேவி அருவியின் மேல் பகுதியில் உள்ளது. இந்த அருவி அருகே பல தேன்கூடுகள் அமைந்துள்ளதால் இந்த இடம் அபாயகரமானது. இந்த அருவிக்கு சென்று குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

5. ஐந்தருவி - குற்றாலத்தில் இருந்து சுமார் 5 கி.மீ., தூரத்தில் உள்ளது. திரிகூடமலையின் உச்சியில் இருந்து 40 அடி உயரத்திலிருந்து உருவாகி சிற்றாற்றின் வழியாக ஓடிவந்து 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது. இதில் பெண்கள் குளிக்க ஒரு அருவி கிளைகளும், ஆண்கள் குழந்தைகளுக்கு 3 கிளைகளும் உள்ளன. இங்கு சபரிமலை சாஸ்தா கோயிலும், முருகன் கோயிலும் உள்ளது.

6. பழத்தோட்ட அருவி (வி.ஐ.பி. பால்ஸ்)- இது ஐந்தருவியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும்தான் குளிக்க அனுமதி உண்டு

Wednesday 14 April 2010

மக்கள் பிரதிநிதிகளின் சொத்து எவ்வளவு தெரியுமா?


மக்கள் பிரதிநிதிகளின் சொத்து எவ்வளவு தெரியுமா?
ஏப்ரல் 14,2010,00:00 IST

புதுடில்லி:ராஜ்ய சபாவில் காங்கிரஸ் எம்.பி.,க்கள் அதிகம் பேர் கோடீஸ் வரர்களாக உள்ளனர்.தேர்தல் நேரத்தில் மனு தாக்கல் செய்யும் போது, வேட்பாளர்கள் தங்கள் சொத்து விவரங்களை வெளியிடுவது வழக்கம். இதனால், லோக்சபா எம்.பி.,க்களின் சொத்து விவரங் களை அறிய முடிகிறது.ஆனால், ராஜ்ய சபா எம்.பி.,க் களின் சொத்து விவரங்கள் தெரிய வருவதில்லை. சமீபத்தில் தன் னார்வ நிறுவனம் ஒன்று, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் ராஜ்யசபா எம்.பி.,க்களின் சொத்து விவரங்களை கேட்டு பெற்றுள்ளது.



ராஜ்ய சபா எம்.பி.,க்களின் 183 பேரின் சொத்து விவரங்கள் இதன் மூலம் தெரிய வந்துள்ளது.ராஜ்ய சபா எம்.பி.,க்களில் மிகப்பெரிய பணக்காரர் ராகுல் பஜாஜ். இவரது சொத்து மதிப்பு 308 கோடி ரூபாய். இதில், சொத்தே இல்லை என 12 எம்.பி.,க்கள் தெரிவித்துள்ளனர். இவர்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.ராஜாவும் ஒருவர்.காங்கிரஸ் கட்சிக்கு ராஜ்ய சபாவில் 51 எம்.பி.,க்கள் உள்ளனர். இவர்களில் 33 பேர் கோடீஸ்வரர்கள். பாரதிய ஜனதா கட்சிக்கு 40 எம்.பி.,க்கள் உள்ளனர். இவர்களில் 21 பேர் கோடீஸ்வரர்கள்.சமாஜ்வாடி கட்சிக்கு 12 எம்.பி.,க்கள் உள்ளனர். இவர்களில் ஏழு பேர் கோடீஸ்வரர்கள்.



பகுஜன் சமாஜ் கட்சிக்கு எட்டு எம்.பி.,க்கள் உள்ளனர். இவர்களில் நான்கு பேர் குபேரர்கள்.அ.தி.மு.,க.,வுக்கு ஏழு பேர் உள்ளனர். இவர்களில் மூவர் கோடீஸ்வரர்கள். ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஐந்து பேர் உள்ளனர். இவர்களில் மூன்று பேர் கோடீஸ்வரர்கள்.ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., சுசிலா திரியா என்பவர் தான் அக்கட்சியின் ஏழை எம்.பி.,யாக உள்ளார். இவரது சொத்து மதிப்பு 16 லட்சம் ரூபாய். இதே கட்சியைச் சேர்ந்த குஜராத் எம்.பி., பிரவீன் ராஷ்டிரபாலுக்கு 20 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் சொத்து உள்ளது.



இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பணக்கார எம்.பி., ஆந்திராவை சேர்ந்த சையத் அஜீஸ் பாஷா. இவரது சொத்து மதிப்பு 19 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புரட்சிகர சோஷலிச கட்சி எம்.பி., அபானி ராயின் சொத்து மதிப்பு 72 ஆயிரம் ரூபாய் மட்டுமே.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப் பினர் பிருந்தா கராத்தின் சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 74 ஆயிரம் ரூபாய்.ராஜ்ய சபாவின் நான்காவது பெரிய பணக்காரர் ஜெயா பச்சன். இவரது சொத்து மதிப்பு 215.5 கோடி ரூபாய்.



சமாஜ்வாடி கட்சியிலிருந்து வெளியேறிய அமர் சிங்கின் சொத்து மதிப்பு 79.5 கோடி.சென்னையில் உள்ள சத்யம் தியேட்டர் உரிமையாளர் சுப்பிராமி ரெட்டியின் சொத்து மதிப்பு 272 கோடியே 64 லட்சம் ரூபாய். தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமியின் சொத்து மதிப்பு 278 கோடியே 64 லட்சம் ரூபாய்.

Sunday 11 April 2010

வெனிசுலா அதிபர் சாவேஸ்

வெனிசுலா அதிபர் சாவேஸ்ன் பொருளாதாரக் கொள்கை:

சோசலிசமா? முதலாளித்துவ சிர்திருத்தமா?


"அமெரிக்க மேலாதிக்கவாதிகள்தான் உலகின் மிகக் கொடிய பயங்கரவாதிகள்!'' இப்படி பகிரங்கமாக அமெரிக்க ஏகாதிபத்திய வாசலிலே இடியென முழங்குகிறார் தென்னமெரிக்கக் கண்டத்திலுள்ள வெனிசுலா நாட்டின் அதிபரான ஹியூகோ சாவேஸ்.

நம்நாட்டு ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளைப் போல, வெனிசுலா அதிபர் வீரவசனம் பேசி வெற்றுச் சவடால் அடிக்கவில்லை. அமெரிக்க மேலாதிக்கவாதிகளை எதிர்த்து நிற்பதோடு, மனிதநேய மாற்றுப் பொருளாதாரத் திட்டத்தை முன்வைத்து செயல்படுத்த விழைகிறார். எண்ணெய் வளமிக்க வெனிசுலாவின் தேசிய வருவாயில் பெரும் பகுதியை ஒடுக்கப்பட்ட மக்களின் மருத்துவம், சுகாதாரம், உணவு, கல்வி முதலான சமூகநலத் திட்டங்களுக்கு ஒதுக்கி, ஏழைகளின் அன்புக்குரிய தலைவராக உயர்ந்து நிற்கிறார்.

பன்னாட்டு ஏகபோக முதலாளிகளின் எண்ணெய் உற்பத்தி சுத்திகரிப்பு நிறுவனங்களை நாட்டுடமையாக்குவது; இந்நிறுவனங்களில் பன்னாட்டு முதலாளிகளின் பங்குகளைச் சிறுபான்மையாகக் குறைப்பது; உலகவங்கி ஐ.எம்.எப். போன்ற ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களிலிருந்து விலகிக் கொள்வது; மின்சாரம், தொலைபேசி மற்றும் நிலப்பிரபுக்களின் பெரும் பண்ணைகளை நாட்டுடமையாக்குவது; அமெரிக்க மேலாதிக்கத்துக்கு எதிராக ஈரானுடன் சேர்ந்து எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் புதிய கூட்டமைப்பையும், தென்னமெரிக்கக் கண்டத்து நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பையும் நிறுவ முயற்சிப்பது; நிலச்சீர்திருத்தத்தின் மூலம் விவசாயத்தை உயிர்ப்பித்து சுயசார்பான தேசிய பொருளாதாரத்தைக் கட்டியமைப்பது என அடுத்தடுத்து பல அதிரடி நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். வெனிசுலா ஒரு கம்யூனிச அரசு அல்ல என்ற போதிலும், வெனிசுலாவின் ஆளும் வர்க்கங்கள் அதிகாரத்திலிருந்து வீழ்த்தப்படவில்லை என்ற போதிலும், தனது நடவடிக்கைகள் மூலம் மறுகாலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடி வரும் உலக மக்களுக்கு பெரும் உத்வேகத்தை வழங்கியிருக்கிறார், அதிபர் சாவேஸ்.

சாவேசின் சீர்திருத்த நடவடிக்கைகள் முழுநிறைவான ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகள் அல்ல என்றபோதிலும், அவரது ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வையும் மக்கள் நலத் திட்டங்களையும் வைத்து அவரை ""சோசலிஸ்டு'' என்று மதிப்பீடு செய்கிறது ஆஸ்திரேலிய போலி சோசலிஸ்டுகளின் ""கிரீன் லெஃப்ட்'' பத்திரிகை. நம்நாட்டு போலி கம்யூனிஸ்டுகளோ, அவரை ""இடதுசாரி'' போக்குடையவர் என்றும், வெனிசுலாவில் புரட்சிகர மாற்றங்கள் நடந்து வருவதாகவும், தென்னமெரிக்க கண்டத்தில் ""இடதுசாரி அலை'' வீசுவதாகவும் சித்தரிக்கின்றனர்.

இப்படி ""சோசலிஸ்டு'', ""இடதுசாரி'' என்றெல்லாம் வெனிசுலா அதிபர் சாவேசை மதிப்பீடு செய்வதற்கு ஏதாவது அடிப்படை உள்ளதா? அவரது நடவடிக்கைகள் ஏகாதிபத்திய நிதிமூலதனக் கட்டமைவைத் தகர்த்து, நாட்டு விடுதலையையும் சுயசார்பையும் நிறுவும் புரட்சிகர நடவடிக்கைகள்தானா? வெனிசுலாவின் பொருளாதாரமும் அதிபர் சாவேசின் நடவடிக்கைகளும் எந்த திசையில் செல்கிறது?

எண்ணெய் மூலம் கிடைக்கும் வருவாயில் பெரும் பகுதியை மக்கள் நலத் திட்டங்களுக்காக சாவேஸ் செலவிடுகிறார். விவசாயப் பொருளாதாரத்தை மீட்டுருவாக்கப் போவதாகக் கூறுகிறார்; புதிய நிலச் சீர்திருத்தக் கொள்கையை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறார். எண்ணெய் விலையை உயர்த்துவது, எண்ணெய் உற்பத்தியை விரிவாக்குவது, புதிய சந்தைகளைத் தேடுவது ஆகியவற்றின் மூலம் இத்திட்டங்களைச் சாதிக்க விழைகிறார்.

இதன்படி, வெனிசுலாவின் அரசுத்துறை எண்ணெய் நிறுவனம் (கஈஙகுஅ), தற்போதைய உற்பத்தியான நாளொன்றுக்கு 33 லட்சம் பீப்பாயிலிருந்து 2012ஆம் ஆண்டில் 58 லட்சம் பீப்பாயாக உற்பத்தியை விரிவுபடுத்தத் தீர்மானித்துள்ளது. இந்த விரிவாக்கத் திட்டத்திற்கு ஏறத்தாழ 7500 கோடி டாலர் தேவை என்று கடந்த ஆண்டில் மதிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர, ஏற்கெனவே உள்ள எண்ணெய் உற்பத்தி நிலையங்களைப் பராமரித்து மேம்படுத்துதல், புதிய எண்ணெய் துரப்பண நிலையங்களை நிறுவுதல் ஆகியவற்றுக்கு இன்னும் பல்லாயிரம் கோடி டாலர்கள் தேவை. மேலும், வெனிசுலாவின் எண்ணெய்க் கிணறுகள் மிகவும் பழமையானவை; ஆண்டுக்கு 23% அளவுக்கு இக்கிணறுகள் உற்பத்தியில் வீழ்ச்சியடைந்து வருகின்றன. எனவே, புதிய கிணறுகள் தோண்டப்பட்டால் மட்டுமே எண்ணெய் உற்பத்தியில் முன்னேற முடியும்; உலகளாவிய போட்டியில் ஈடுபடவும் முடியும்.

இதற்கான நிதியை எங்கிருந்து பெறுவது? வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் வங்கிகளிடமிருந்து கடன் வாங்குவது, வெனிசுலாவிலுள்ள அந்நிய எண்ணெய் கம்பெனிகளிடம் எண்ணெய்க்கு ஈடாக முன்பணம் பெறுவது, அந்நிய எண்ணெய் கம்பெனிகள் மீது புதிய வரிகள் விதித்து வருவாயைப் பெருக்குவது ஆகியவற்றின் மூலம் நிதிதிரட்டத் தீர்மானித்துள்ளார், அதிபர் சாவேஸ். எண்ணெய் மூலாதாரங்களும் உற்பத்தியும் அரசின் கையில் இருப்பதால், அன்னிய எண்ணெய் கம்பெனிகளும் நிதி நிறுவனங்களும் முந்தைய காலத்தைப் போல கொள்ளையடிக்கவோ மேலாதிக்கம் செய்யவோ முடியாது என்று கருதுகிறார்.

ஆனால், வெனிசுலா மட்டுமல்ல; உலகின் முக்கால் பங்கு எண்ணெய் எரிவாயு மூலாதாரங்களையும் உற்பத்தியில் பாதிக்கு மேலாகவும் சௌதி அரேபியாவின் ஆரம்கோ, குவைத் பெட்ரோலியம், அல்ஜீரிய எண்ணெய் கழகம் முதலான அரசுத்துறை நிறுவனங்களே கட்டுப்படுத்துகின்றன. இருப்பினும், இந்த அரசுத்துறை நிறுவனங்கள் சர்வதேச நிதி மூலதனத்தைச் சார்ந்திருப்பதாலும், எக்சான் மொபில் முதலான பூதகரமான மேற்கத்திய ஏகபோக எண்ணெய் நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்திருப்பதாலும், தமது வர்த்தகத்துக்கும் சந்தைக்கும் தொழில் நுட்பத்துக்கும் ஏகாதிபத்திய நிறுவனங்களைச் சார்ந்திருப்பதாலும் உண்மையில் ஏகாதிபத்தியங்களே பல்வேறு வழிகளில் ஆதாயமடைகின்றன.

இப்படி பல்வேறு வழிகளில் ஆதாயமடைந்து ஆதிக்கம் செலுத்தும் ஏகாதிபத்திய நிறுவனங்களைக் கட்டுப்படுத்த, வெனிசுலாவின் எண்ணெய் திட்டங்கள் அனைத்திலும் அரசுத்துறையின் பங்கு 60%க்கு மேல் இருக்க வேண்டும் என்று அறிவித்த அதிபர் சாவேஸ், கடந்த மே முதல் நாளன்று இம்முடிவை ஏற்காவிடில், அன்னிய எண்ணெய் நிறுவனங்கள் அனைத்தும் வெனிசுலாவை விட்டு வெளியேற வேண்டும் என எச்சரித்தார். தொடக்கத்தில், இதை ஏற்க மறுத்த அன்னிய எண்ணெய் நிறுவனங்கள், பின்னர் இதற்கு உடன்பட்டன. இதன்படி உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏகபோக நிறுவனங்களான ஷெல், செவ்ரான், பிரிட்டிஷ் பெட்ரோலியம் முதலானவற்றுடன் வெனிசுலா அரசுத்துறை எண்ணெய் நிறுவனம் கூட்டுச் சேர்ந்து இயங்கும்; இக்கூட்டுத்துறை நிறுவனங்களில் அரசுத்துறையின் பங்கு 60% ஆக இருக்கும். இதன் மூலம் முந்தைய காலத்தை விட வெனிசுலா அரசுக்கு எண்ணெய் மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கிறது. மறுபுறம், எண்ணெய் விலையை வெனிசுலா அரசு உயர்த்தியுள்ளதால், முந்தைய காலத்தைவிட, அன்னிய ஏகபோக நிறுவனங்களும் கூடுதல் ஆதாயமடைந்துள்ளன.

மேலும், சந்தைக்காகவும், முதலீட்டு ஆதாரங்களுக்காகவும், தொழில்நுட்பத்துக்காகவும் அமெரிக்காவையே வெனிசுலா பெரிதும் சார்ந்துள்ளது. இச்சார்பு நிலையிலிருந்து வெனிசுலா மீள்வதென்பது மிகவும் கடினம். ஏனெனில், அமெரிக்காவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில், வெனிசுலாவின் பங்கு 12% தான். வெனிசுலா அரசு அமெரிக்காவுக்கு எண்ணெய் தர மறுத்துவிட்டால், அதனால் அமெரிக்காவுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுவிடாது. அதேசமயம், வெனிசுலா அரசு அமெரிக்காவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யாமல் போனால், அதன் பொருளாதாரமே ஆட்டங்கண்டு விடும். ஏனெனில், வெனிசுலாவின் மொத்த எண்ணெய் உற்பத்தியில், 60%க்கு மேல் அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. எண்ணெய் வருவாயில் பெரும்பகுதி அமெரிக்க ஏற்றுமதியிலிருந்துதான் கிடைக்கிறது.

அமெரிக்காவைச் சார்ந்திராமல் எண்ணெய்க்குப் புதிய சந்தைகளைத் தேட முயற்சித்தார், அதிபர் சாவேஸ். அமெரிக்காவுக்கு அடுத்து பெருமளவு எண்ணெயைக் கொள்முதல் செய்யும் நாடான சீனாவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தினார். ஆனால் சீனாவுக்கு எண்ணெயை ஏற்றுமதி செய்ய ஆகும் செலவு பூதாகரமானதாக இருப்பதோடு, உடனடி சாத்தியமின்றியும் உள்ளது. ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் பசிபிக் பெருங்கடலில் வெனிசுலாவுக்குத் துறைமுகம் இல்லை. வெனிசுலாவிலிருந்து பனாமா கால்வாய் வழியாக பசிபிக் பெருங்கடலை அடைய முடியும் என்றாலும், பல்லாயிரம் டன் எடை கொண்ட எண்ணெய் கலன்களை ஏற்றிச் செல்லும் மிகப்பெரிய கப்பல்கள் செல்லுமளவுக்கு பனாமா கால்வாய் ஆழமானதல்ல. எனவே கொலம்பியாவின் ஊடாக பெரும் எண்ணெய்க் குழாய்களைப் பதித்து, அந்நாட்டு உதவியுடன் பசிபிக் பெருங்கடலிலுள்ள துறைமுகம் வழியாக ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதைத்தவிர வேறு வழியில்லை. ஆனால் இதற்குப் பல்லாயிரம் கோடிகளைச் செலவழிக்க வேண்டும்.

மேலும், வெனிசுலாவில் கிடைக்கும் எண்ணெயில் கந்தகம் மிகுந்துள்ளது. அதைச் சுத்திகரித்துப் பயன்படுத்தும் ஆலைகள் சீனாவில் இல்லாததால், வெனிசுலாவிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்க சீனா தயங்குகிறது. சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்து சென்ற காஸ்பியன் கடல் பிராந்திய நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்குவதிலேயே சீனா ஆர்வம் காட்டுகிறது.

இதுவொருபுறமிருக்க, வெனிசுலாவிலிருந்து தெற்கே அர்ஜெண்டியா வரை எரிவாயு குழாய் பதித்து தென்னமெரிக்க கண்டத்து நாடுகளுக்கு மலிவு விலையில் எரிவாயுவை விநியோகிப்பதை சாவேஸ் தனது நீண்டகாலத் திட்டமாக அறிவித்துள்ளார். மேற்கத்திய ஏகாதிபத்திய நிறுவனங்கள் அல்லாமல், இந்தியா, சீனா, ரஷ்யா முதலான இதர நாடுகளை இத்திட்டத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைத்துள்ளார். இத்திட்டமானது அமெரிக்க எதிர்ப்பு கொண்ட பிராந்திய ஐக்கியத்தைக் கட்டியமைக்கும் என்று கூறுகிறார்.

ஆனால், இன்றைய உலகமயச் சூழலில் ஒரு ஏழை நாட்டு நிறுவனம் வெனிசுலாவில் முதலீடு செய்தாலும் அதன் பின்னணியில் ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களும் வங்கிகளும்தான் உள்ளன. அவை முதலாளித்துவ முறைப்படி சுரண்டுவதும், முதலாளித்துவ முறைப்படி இலாப விகிதங்களை வலியுறுத்துவதும்தான் நடக்குமே தவிர, அவை அமெரிக்க எதிர்ப்பு கொண்ட தென்னமெரிக்க பிராந்திய ஐக்கியத்தைக் கட்டியமைக்க ஒருக்காலும் உதவி செய்யாது. மேலும் பூதாகரமான இத்தகைய திட்டங்களால் ஏற்படும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளும் பாரதூரமான விளைவுகளையே தோற்றுவிக்கும். தென்னமெரிக்கக் கண்டத்தில் கரிம வாயுக்களை வெளியேற்றுவதில் முதலிடம் வகிக்கும் வெனிசுலா நாடு, இத்தகைய பெருந்திட்டங்களால் இயற்கை முறை குலைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று சுற்றுச்சூழல்வாதிகள் அறதியிடுகின்றனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, வெனிசுலாவின் எண்ணெய்த் துறையின் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்பு மிகக் குறைவானதாகவே உள்ளது. அரசுத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரினோகோ எண்ணெய் வயலில் 380 கோடி டாலர்களை சாவெஸ் அரசு முதலீடு செய்தும்கூட, அத்திட்டம் நிறைவேறும்போது ஏறத்தாழ 700 தொழில்நுட்ப தேர்ச்சி பெற்ற தொழிலாளிகளுக்கே வேலை கிடைக்கும். வெனிசுலா அரசுத்துறை எண்ணெய் நிறுவனத்தின் மூலம் தற்போது ஏறத்தாழ 45,000 தொழிலாளிகளே வேலை வாய்ப்பைப் பெறுகின்றனர். இது வெனிசுலாவின் மொத்த உழைப்பாளர் எண்ணிக்கையில் 1%க்கும் குறைவானதாகும். அதேசமயம் வெனிசுலாவின் வேலையில்லாதோர் விகிதம் ஏறத்தாழ 15% ஆக இருக்கிறது.

எண்ணெய் வளம் என்பது வெனிசுலாவின் பொக்கிஷமோ, பொன் முட்டையிடும் வாத்தோ அல்ல. எண்ணெய் வளமிக்க வெனிசுலாவிலிருந்து அல்ஜீரியா வரை உற்பத்தியும் ஏற்றுமதியும் பெருகி பல்லாயிரம் கோடி வருவாய் குவிந்த போதிலும், அந்நாடுகளில் ஏற்றத்தாழ்வுகளும் சமூக அவலங்களும் நீங்கிவிடவில்லை. சோசலிசம் என்பது எண்ணெய் உற்பத்தியைப் பெருக்குவதோ, எண்ணெய் வருவாயை நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்வதோ அல்ல.

வெனிசுலாவின் ஏற்றுமதியைச் சார்ந்த எண்ணெய் உற்பத்தியும் விரிவாக்கமும் உலக ஏகாதிபத்தியப் பொருளாதாரத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது; அதன் ஆதிக்கம், கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. புரட்சி என்பது, இத்தகைய ஏகாதிபத்திய கட்டுமானத்தைத் தகர்த்தெறிவதாகும். ஏகாதிபத்திய நிதிமூலதன ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று, சுயசார்பான தேசிய பொருளாதாரத்தைக் கட்டியமைப்பதாகும்.

சுயசார்பான தேசிய பொருளாதாரத்தின் அடித்தளம் எண்ணெய் அல்ல; விவசாயம்! பின்தங்கிய ஏழை நாடான வெனிசுலாவில் விவசாயத்துக்கு முன்னுரிமையும், விவசாயத்துக்கு உதவும் வகையிலும் சமூகத் தேவைகளை ஈடு செய்யும் வகையிலும் சிறுதொழில் உற்பத்திக்கு இரண்டாம்பட்ச முன்னுரிமையும், கனரகபெருந்தொழில் துறைக்கு மூன்றாம்பட்ச முக்கியத்துவமும் அளிக்கப்பட வேண்டும். இதன் மூலமே சுயசார்பான தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியமைத்து, ஏகாதிபத்திய ஆதிக்கத்திலிருந்து வெனிசுலா விடுதலையடைய முடியும். ஆனால் சாவெசின் பொருளாதாரத் திட்டங்கள் கனரக எண்ணெய் தொழிற்துறைக்கு முதல் முக்கியத்துவமளிப்பதாகவும், எண்ணெய் உற்பத்தியை விரிவுபடுத்த ஏகாதிபத்திய நிதிமூலதனத்தைச் சார்ந்திருப்பதாகவும் திரும்பத் திரும்ப உலக ஏகாதிபத்தியப் பொருளாதாரக் கட்டமைவில் பின்னிப் பிணைவதாகவுமே உள்ளன. எண்ணெய் ஏற்றுமதியில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு, நிலச்சீர்திருத்தம் விவசாய சீர்திருத்தங்களுக்கான முதலீட்டைப் பெறுவது என்ற சாவேசின் திட்டம் இதனாலேயே முன்னேற முடியாமல் நிற்கிறது.

நிலப்பிரபுக்களின் பயன்படுத்தப்படாத பெரும்பண்ணைகளை (லத்திபண்டியா) கிராமப்புற விவசாயிகள் எழுச்சியின் மூலம் கைப்பற்றி தமது அதிகாரத்தை நிறுவுவது என்ற புரட்சிகரப் பாதைக்குப் பதிலாக, நிலப்பிரபுக்களுக்கு நட்டஈடு கொடுத்து அரசே நிலத்தைக் கைப்பற்றி அவற்றை விவசாயிகளுக்கு விநியோகித்து, கூட்டுறவு மூலம் விவசாயத்தை உயிர்ப்பித்து தன்னிறைவையும் சுயசார்பையும் நிலைநாட்டுவது என்கிற முதலாளித்துவ சீர்திருத்த வழியையே சாவேஸ் செயல்படுத்த விழைகிறார். ஆனால் நகரங்களில் குவிந்துள்ள மக்களை நாட்டுப்புறங்களுக்கு அனுப்பி விவசாயத்தை உயிர்ப்பிக்க வேண்டுமானால், அரசு கோடிக்கணக்கில் முதலீடு செய்து ஆதரவளிக்க வேண்டும். எண்ணெய் வருவாயிலிருந்து இம்முதலீட்டைச் செய்ய வேண்டுமானால், வெனிசுலாவின் எண்ணெய் உற்பத்தியையும் ஏற்றுமதியையும் அதிகரிக்க வேண்டும்; சந்தைக்கும் விரிவாகத் திட்டங்களுக்குமான முதலீடுகளுக்கு மீண்டும் ஏகாதிபத்தியப் பொருளாதாரக் கட்டமைவையே சார்ந்திருக்க வேண்டும். இது மீள முடியாத நச்சுச்சூழல். இதனாலேயே சோசலிசக் கனவுகளோடும், வெனிசுலாவின் உழைக்கும் மக்கள் நலனில் அக்கறையோடும் அவர் மேற்கொள்ளும் சீர்திருத்தங்கள், முன்னேற முடியாமல் நிற்கின்றன.

சாவேசின் முற்போக்கான குட்டி முதலாளித்துவ வழியிலான சீர்திருத்தத் திட்டங்கள் வெனிசுலா உழைக்கும் மக்களுக்கு தற்காலிகமாக சில சலுகைகளையும் நிவாரணங்களையும் அளித்த போதிலும், அது நீடித்து நிலைக்க சாத்தியமே இல்லை. ஏகாதிபத்திய நிதிமூலதனக் கட்டமைவுடன் வெனிசுலாவின் பொருளாதாரம் பின்னிப் பிணைந்துள்ள நிலையில், ஏகாதிபத்திய உலகிற்கு மாற்றாக, அதற்கு வெளியே புதிய உலகைக் கட்டியமைக்க விழையும் சாவேசின் இலட்சியக் கனவு நிறைவேற அடிப்படை இல்லை.

அதேசமயம் மக்கள் நலன், சுயசார்பு, அமெரிக்க மேலாதிக்க எதிர்ப்பு எனும் உயர்ந்த நோக்கங்களைக் கொண்டுள்ள அதிபர் சாவேசின் முற்போக்கான சீர்திருத்த நடவடிக்கைகளை வரவேற்று ஆதரிப்பதும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகப்பூர்வமான சாவெசின் ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்கா மேற்கொண்டு வரும் சூழ்ச்சிகள் சதிகளை அம்பலப்படுத்தி முறியடிப்பதும் உலகெங்குமுள்ள புரட்சிகர ஜனநாயக சக்திகளின் கடமையாகும். அதேநேரத்தில், வெனிசுலா அதிபர் சாவேசின் முதலாளித்துவ வழிப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளையே ""மாபெரும் புரட்சி''யாகவும், சாவேசை ""இடதுசாரி'' என்றும் சித்தரித்து மாய்மாலம் செய்துவரும் போலி கம்யூனிஸ்டுகள் போலி சோசலிசவாதிகளின் பித்தலாட்டத்தை முறியடிப்பது, அதைவிட முக்கிய கடமையாகும்.

வெனிசுலா

வெனிசுலா : சாவேஸ் இன் தோல்வி உணர்த்தும் உண்மைகள்


தென்னமெரிக்கக் கண்டத்திலுள்ள வெனிசுலா நாட்டின் அதிபரான சாவேஸ் முன்வைக்கும் சோசலிசத் திட்டங்களுக்கு ஏற்ப அந்நாட்டின் அரசியல் சட்டத்தைத் திருத்தியமைப்பதா, கூடாதா என்பதற்கான கருத்துக் கணிப்புத் தேர்தல் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்றது. ஏறத்தாழ 90 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட வெனிசுலாவில், இக்கருத்துக் கணிப்புத் தேர்தலில் 45% பேர் வாக்களிக்கவில்லை. எஞ்சிய 55% வாக்காளர்களில் 28% பேர் சாவேசின் திட்டங்களுக்கு எதிராகவும், 27% பேர் ஆதரவாகவும் வாக்களித்துள்ளனர்.

மயிரிழைப் பெரும்பான்மையில் எதிர்ப்பாளர் தரப்பு வெற்றி பெற்றுள்ள நிலையில், அதிபர் சாவேசின் திட்டங்கள் இழுபறியில் சிக்கிக் கொண்டுள்ளது.



எண்ணெய் வளமிக்க வெனிசுலாவின் அதிபரான சாவேஸ், அமெரிக்க மேலாதிக்கத்தை எதிர்த்து நிற்பதோடு, மனிதநேய மாற்றுப் பொருளாதாரத் திட்டத்தை முன்வைத்துச் செயல்படுத்த விழைகிறார். எண்ணெய் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் தேசிய வருவாயில் பெரும் பகுதியை ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகநலத் திட்டங்களுக்கு ஒதுக்கி, ஏழைகளின் அன்புக்குரிய தலைவராக உயர்ந்து நிற்கிறார். எண்ணெய் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு, விவசாயப் பொருளாதாரத்தை மீட்டுருவாக்கிச் சுயசார்பை நிறுவுவது, பன்னாட்டு ஏகபோக முதலாளிகளின் எண்ணெய் உற்பத்தி சுத்திகரிப்பு நிறுவனங்களை நாட்டுடமையாக்குவது, அமெரிக்க மேலாதிக்கத்துக்கு எதிராக ஈரானுடன் சேர்ந்து எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் புதிய கூட்டமைப்பையும் தென்னமெரிக்கக் கண்டத்து நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பையும் நிறுவுவது எனும் தனது கனவுத் திட்டங்களைச் செயல்படுத்த விழையும் அதிபர் சாவேஸ், இதனை ""21ஆம் நூற்றாண்டுக்கான சோசலிசம்'' என்றும் அறிவித்தார். வெனிசுலா ஒரு கம்யூனிச அரசு அல்ல என்ற போதிலும், வெனிசுலாவின் ஆளும் வர்க்கங்கள் அதிகாரத்திலிருந்து வீழ்த்தப்படவில்லை என்ற போதிலும், தனது நடவடிக்கைகள் மூலம் மறுகாலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடிவரும் உலக மக்களுக்கு பெரும் உத்வேகத்தை வழங்கியிருக்கிறார், அதிபர் சாவேஸ்.



ஏகாதிபத்திய எதிர்ப்பும் ஜனநாயக உணர்வும் கொண்ட அதிபர் சாவேஸ், தனது சோசலிசக் கனவுத் திட்டங்களுக்கு ஏற்ப நாட்டின் அரசியல் சட்டத்தைத் திருத்த மக்களின் ஒப்புதலைப் பெறும் பொருட்டு கடந்த ஆண்டு டிசம்பரில் கருத்துக் கணிப்புத் தேர்தலை நடத்தினார். அதிபர் சாவேசின் பொருளாதாரக் கொள்கைகள் சோசலிசமல்ல; அவை முதலாளித்துவ சீர்திருத்தங்கள்தான் என்ற போதிலும், இந்தக் கருத்துக் கணிப்புத் தேர்தலில் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களும் செய்தி ஊடகங்களும் கோடிக்கணக்கில் பணத்தை வாரியிறைத்து, எதிர்ப்பிரச்சாரத்தை வீச்சாக நடத்தி, தேர்தலில் மயிரிழைப் பெரும்பான்மையில் வெற்றி பெற்று சாவேசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளன. இத்தேர்தலில் சாவேஸ் அடைந்துள்ள தோல்வியைச் சாதகமாக்கிக் கொண்டு, அமெரிக்க மேலாதிக்க எதிர்ப்பையும், ஜனநாயகத்தையும், மக்கள் நலத்திட்டங்களையும் ஒரேயடியாகக் குழி தோண்டி புதைத்துவிட அவை துடிக்கின்றன.



அதிபர் சாவேஸ், ஆகப் பெரும்பான்மையான வெனிசுலா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் தனது அதிகாரத்தைக் கொண்டு தனது விருப்பப்படி அரசியல் சட்டத்தைத் திருத்தியிருக்க முடியும். ஆனால், ஜனநாயக உணர்வு கொண்ட அதிபர் சாவேஸ், அரசியல் சட்டத் திருத்தத்திற்கு நாட்டு மக்களின் ஒப்புதலைப் பெறுவதற்காகவே இக்கருத்துக் கணிப்புத் தேர்தலை நடத்தினார். நிலப்பிரபுக்களின் பயன்படுத்தப்படாத பெரும்பண்ணைகளைக் கைப்பற்றி நிலச்சீர்திருத்தத்தின் மூலம் விவசாயப் பொருளாதாரத்தையும் சுயசார்பையும் கட்டியமைப்பது, கிராமங்களில் கூட்டுறவு முறை மூலம் கூட்டுச் சொத்துடைமை கவுன்சில்களை நிறுவுவது, ஆலைகளில் 8 மணி வேலை நேரத்தை 6 மணி நேரமாகக் குறைப்பது, பெண்களுக்குச் சட்டரீதியாக அனைத்துத் துறைகளிலும் சம உரிமையை நிலைநாட்டுவது உள்ளிட்டு அரசியல் சட்டத்தில் 69 வகையான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அதிபர் சாவேஸ் விழைந்தார். இச்சீர்திருத்தங்களைத் தொடர்ந்து செயல்படுத்தும் அதிகாரம் தேவை என்பதால், ஒருவர் இரண்டு தடவைக்கு மேல் அதிபராக முடியாது என்ற கால வரம்பை ரத்து செய்யும் வகையில் அரசியல் சட்டத்தைத் திருத்தவும் விரும்பினார்.



கருத்துக் கணிப்புத் தேர்தலில் வெற்றி பெற்று அதிபர் சாவேஸ் அரசியல் சட்டத்தைத் திருத்தினால், அது ஏகாதிபத்தியவாதிகளுக்கும் வெனிசுலாவின் ஆளும் வர்க்கங்களுக்கும் பேரிடியாக அமைந்து பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும். வெனிசுலா உழைக்கும் மக்களின் வாழ்வு மேம்படும். வெனிசுலாவை முன்மாதிரியாகக் கொண்டு தென்னமெரிக்க கண்டத்து இதர ஏழை நாடுகளும் அமெரிக்க மேலாதிக்க எதிர்ப்பில் கூட்டுச் சேர்ந்து, மக்கள் நலனும் சுயசார்பும் கொண்ட பொருளாதாரத்தைக் கட்டியமைக்க விழையும். இதனாலேயே, இக்கருத்துக் கணிப்புத் தேர்தலில் அரசியல் சட்டத்தைத் திருத்தக் கூடாது என்று அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களும் செய்தி ஊடகங்களும் மூர்க்கமான பிரச்சாரத்தில் இறங்கின.



வெனிசுலாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளிப்படையாகவே அரசியல் சட்டத் திருத்தத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தது. அமெரிக்கக் கொலைகார உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.வும் அமெரிக்காவின் ""எயிட்'', ""நெட்'' முதலான நிறுவனங்களும் கோடிக்கணக்கான டாலர்களை வாரியிறைத்து பிரச்சாரம் செய்ததோடு, வதந்திகளைப் பரப்பி மக்களைப் பீதியூட்டின. ஏகாதிபத்திய கைக்கூலி நிறுவனங்களான தன்னார்வக் குழுக்களும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களும் சாவேசின் திட்டங்களை எதிர்த்துப் பிரச்சாரம், விளம்பரங்களில் ஈடுபட்டதோடு வீதிகளில் ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்தன.



வெனிசுலாவின் தரகு முதலாளிகள் சாவேஸ் எதிர்ப்புக் குழுக்களுக்கு வெளிப்படையாக நிதியுதவி செய்ததோடு, அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்கிச் செயற்கையான தட்டுப்பாட்டையும் விலையேற்றத்தையும் உருவாக்கினர். வெனிசுலா உழைக்கும் மக்களின் குழந்தைகளைப் பெற்றோரிடமிருந்து பிரித்து, கட்டாயக் கல்வியின் பெயரால் குழந்தைகளைப் பள்ளிகளில் அடைக்கத் திட்டமிட்டுள்ளதாக வதந்திகளைப் பரப்பி, தனியார் தொலைக்காட்சிகள் அவதூறு பிரச்சாரம் செய்தன.



கத்தோலிக்க மதகுருமார்களும் திருச்சபைகளும் சாவேசுக்கு எதிராக அணிவகுத்துப் பிரச்சாரம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி, வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டன. இக்கும்பல் நடத்திய சாலை மறியல் போராட்டத்தைத் தடுத்த சாவேஸ் ஆதரவாளர், கிறித்துவ மதவெறி குண்டர்களால் கொல்லப்பட்டார். சாவேஸ் அரசின் ஆளுநர்களும் மாநகராட்சித் தலைவர்களும் ஏகாதிபத்தியாவதிகளால் விலை பேசப்பட்டனர்; அல்லது நடுநிலை வகிக்குமாறு நிர்பந்திக்கப்பட்டனர். அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் அதிபர் சாவேஸ் நிரந்தரமாகச் சர்வாதிகாரம் செய்யத் துடிப்பதாக எதிர்த்தரப்பினர் திரும்பத் திரும்பக் குற்றம் சாட்டினர்.



அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் அதிபர் பதவிக்குப் போட்டியிடுவதற்கான வரம்பை நீக்கிவிட சாவேஸ் விழைவதையே இப்படி சர்வாதிகாரியாகத் துடிப்பதாக ஏகாதிபத்தியவாதிகள் சித்தரித்து அவதூறு செய்கின்றனர். ஆனால் சாவேஸ் அரசியல் சட்டத்திருத்தத்தின் மூலம் தனிநபர் சர்வாதிகாரத்தை நிலைநாட்ட விழையவில்லை. மாறாக, ஏகாதிபத்திய எதிர்ப்பு கொண்ட மாற்றுப் பொருளாதார அரசியலமைப்பு முறை தொடர்ந்து நீடிக்கவே விழைந்தார். அத்தகைய கொள்கைகளைச் செயல்படுத்தும் நிறுவனமாக அதிபர் பதவியைக் கருதி, அதனைக் காலவரம்பின்றி நீடிக்க விரும்பினாரே தவிர, தனிநபர் என்ற முறையில் பதவி சுகத்தை வரம்பின்றி அனுபவிப்பவதற்காக அல்ல. ஏகாபத்தியக் கைக்கூலிகளை அதிபராகக் கொண்ட மறுகாலனியாதிக்கக் கொள்கை தொடர்ந்து நீடிப்பதா, அல்லது ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களை அதிபராகக் கொண்ட சுயசார்பான கொள்கை தொடர்ந்து நீடிப்பதா என்பதுதான் இக்கருத்துக் கணிப்புத் தேர்தலில் மையமான விவகாரம்.



ஏகாதிபத்திய நாடுகளிலும் அதன் அடிமை நாடுகளிலும் "ஜனநாயக' முறைப்படி அதிபர்களும் பிரதமர்களும்தான் மாறுகிறார்களே தவிர, அடிப்படையில் ஏகாதிபத்தியகாலனியாதிக்கத்தின் சர்வாதிகாரம்தான் காலவரம்பின்றி தொடர்ந்து நீடிக்கிறது. அதிபர்கள் மாறினாலும் ஏகாதிபத்தியக் கொள்ளையும் சூறையாடலும் மாறுவதில்லை. இச்சர்வாதிகாரிகள்தான், ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வுடன் சுயசார்பை நிறுவ விழையும் அதிபர் சாவேசைக் கூசாமல் சர்வாதிகாரி என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.



ஏகாதிபத்தியவாதிகள், இப்படி அவதூறு பிரச்சாரம் செய்து சாவேசை சர்வாதிகாரியாகச் சித்தரித்து வந்த நிலையில், போலி சோசலிஸ்டுகளும் போலி புரட்சியாளர்களும் இதற்குப் பக்க மேளம் வாசித்தனர். தமது கைக்கூலித்தனத்தை மூடி மறைத்துக் கொண்டு ""ஜனநாயகம்'', ""பன்மைவாதம்'' வேண்டுமென்று சித்தாந்த விளக்கமளித்தனர். உண்மையில் முதலாளித்துவ ஜனநாயகத்தின் பேரால், முதலாளித்துவ நாடுகளில் வர்க்க சர்வாதிகாரம்தான் நீடிக்கிறதே தவிர, அங்கு ஜனநாயகமோ, பன்மைவாதமோ கிடையாது. சொத்து, அதிகாரம் ஆகியவற்றில் முதலாளி வர்க்கத்தின் ஏகபோக ஆதிக்கம் நிலவும்போது அங்கு பன்மைவாதம் என்பது ஏட்டுச் சுரைக்காயாகவே உள்ளது. இருப்பினும், ஏகாதிபத்திய சித்தாந்தவாதிகளால் உருவாக்கப்பட்ட பன்மைவாதம் என்ற கோட்பாட்டைப் பிதற்றிக் கொண்டு, ஜனநாயக வேடங்கட்டிக் கொண்ட இப்போலி சோசலிஸ்டுகள் சாவேசின் திட்டங்களை சர்வாதிகாரம் என்று சாடி, எதிர்ப்பிரச்சாரம் ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர்.



ஆனால், சர்வாதிகாரியாகச் சித்தரிக்கப்பட்ட அதிபர் சாவேஸ், 2002ஆம் ஆண்டில் சாவேஸ் அரசைக் கவிழ்க்க நடந்த எதிர்ப்புரட்சியில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யவோ தண்டிக்கவோகூட இல்லை. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கவுமில்லை. இக்கருத்துக் கணிப்புத் தேர்தலில் இச்சதிகாரர்கள் பிரச்சாரம் செய்யவும் தடை விதிக்கவில்லை. அந்த அளவுக்கு அதீத ஜனநாயகம் வழங்கி தாராளவாதமாக நடந்து கொண்டார். அவ்வளவு ஏன்? மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஏகாதிபத்தியக் கைக்கூலி நிறுவனங்களான தன்னார்வக் குழுக்களும் எவ்விதத் தடையுமின்றி எதிர்ப்பிரச்சாரம் செய்ய அனுமதித்தார். இப்படி எல்லையற்ற ஜனநாயகத்துடன் நடந்து கொண்ட அதிபர் சாவேசைத்தான் இவர்கள் "சர்வாதிகாரி' என்று அவதூறு செய்தனர்.



ஏகாதிபத்தியவாதிகள், அவர்களது கைக்கூலிகள், ""பன்மைவாதம்'' பேசும் போலி சோசலிஸ்டுகளின் மூர்க்கமான எதிர்ப்பிரச்சாரம் போராட்டங்களின் விளைவாக இக்கருத்துக் கணிப்புத் தேர்தலில் அதிபர் சாவேஸ் தோல்வியடைந்துள்ளார். 2006ம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலில் 63% வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்த அதிபர் சாவேஸ். இப்போது 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை இழந்துள்ளார். ஏகாதிபத்தியவாதிகளின் எதிர்ப்பிரச்சாரம் ஒருபுறமிருக்க, மக்களிடம் பேராதரவையும் செல்வாக்கையும் பெற்றுள்ள அதிபர் சாவேஸ் இக்கருத்துக் கணிப்புத் தேர்தலில் தோல்வியடையக் காரணம் என்ன? இம்முறை, அதிபர் சாவேஸ் மீது வெனிசுலாவின் கணிசமான உழைக்கும் மக்கள் அதிருப்தியடையக் காரணம் என்ன?



வெனிசுலாவின் தரகுப் பெருமுதலாளிகளும் வர்த்தக சூதாடிகளும் அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்கி, செயற்கையான தட்டுப்பாட்டையும் விலையேற்றத்தையும் செய்தபோது, அதற்கெதிராக சாவேஸ் அரசு உறுதியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. தட்டுப்பாட்டைப் போக்க பல கோடிகளைச் செலவிட்டு வெளிநாடுகளிலிருந்து அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்தபோதிலும், ஊழல் மிகுந்த அதிகார வர்க்கத்தின் இழுத்தடிப்புகளால் அவை உழைக்கும் மக்களுக்குப் போய்ச் சேரவில்லை. அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாட்டால் உழைக்கும் மக்களிடம் நிலவிய அதிருப்தியானது, தேர்தலிலும் எதிரொலித்தது.



அரசியல் சட்டத்தைத் திருத்தக் கூடாது என்று எச்சரிக்கும் வகையில், தரகுப் பெருமுதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் வெனிசுலாவில் போட்டுள்ள முதலீடுகளை திரும்பப் பெறப் போவதாக வதந்தியைப் பரப்பி பீதியூட்டின. தனியார் வங்கிகளும் இதற்குப் பக்கபலமாக நின்று நாட்டின் பொருளாதாரத்தையே அச்சுறுத்தின. ஆட்சிக் கவிழ்ப்பு நடக்குமோ எனுமளவுக்குப் பீதி நிலவியது. இருப்பினும், இதற்கெதிராக சாவேஸ் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க முடியாமல் தடுமாறியது.



வெனிசுலாவின் பணவீக்கம் 18%க்கு மேல் யானைக்காலாக வீங்கிவிட்ட நிலையில் அதைக் கட்டுப்படுத்த சாவேஸ் அரசு உருப்படியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பணவீக்கத்தால் சாமானிய மக்களின் வருவாய் வீழ்ச்சியடைந்து, அதிருப்தியே நிலவியது. இதுதவிர, மருத்துவம்சுகாதாரம், குடிநீர் வழங்கல்கழிவுநீர் வெளியேற்றம், சாலைமின்வசதிபோக்குவரத்து முதலான அடிப்படைத் தேவைகள் பல ஆண்டுகளாகியும் இன்னமும் நிறைவேற்றப்படாததால், பல பகுதிகளில் சாமானிய மக்களிடம் அதிருப்தியையே சாவேஸ் அரசு சம்பாதித்தது. தனியார்துறையும், அரசுத்துறையும் கொண்ட கலப்புப் பொருளாதாரம், அதுவே 21ஆம் நூற்றாண்டின் சோசலிசம் என்று அதிபர் சாவேஸ் பல திட்டங்களைச் செயல்படுத்த விழைந்த போதிலும், தனியார் பெருமுதலாளித்துவ நிறுவனங்கள் ஒத்துழைக்க மறுத்து எதிர்த்திசையில் சென்றதால், இக்கலப்புப் பொருளாதார சோசலிசத் திட்டங்கள் முடங்கிப் போயின. எல்லாவற்றுக்கும் மேலாக, சாவேஸ் அரசின் அமைச்சரவையே ஒருங்கிணைந்த கண்ணோட்டமோ, செயல்பாடோ இன்றி அரசியல்சித்தாந்த ரீதியாகப் பிளவுபட்டுப் போயுள்ளது. இவையனைத்தின் விளைவுதான். இக்கருத்துக் கணிப்புத் தேர்தலில் சாவேசுக்குக் கிடைத்த தோல்வி.



மக்கள் நலன், சுயசார்பு, அமெரிக்க மேலாதிக்க எதிர்ப்பு எனும் உயர்ந்த நோக்கங்களைக் கொண்ட அதிபர் சாவேஸ், வரம்புக்குட்பட்ட சில சீர்திருத்தங்களை மேற்கொண்ட போதிலும், அவரது கொள்கைகளைச் செயல்படுத்துவதற்கான அரசியல் கட்சி அவருக்கு இல்லை. அவரால் உருவாக்கப்பட்ட ""ஐந்தாவது குடியரசு இயக்கம்'' என்ற கட்சியானது ஆரம்ப நிலையிலேயே உள்ளது. அதுவும் சந்தர்ப்பவாதசட்டவாத சக்திகளைக் கொண்டதாகவே உள்ளது.



அதிபர் சாவேஸ் தேர்தல் மூலம் பதவிக்கு வந்துள்ளாரே தவிர, அந்நாட்டின் ஆளும் வர்க்கங்களான ஏகாதிபத்தியவாதிகளும் தரகு முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் வீழ்த்தப்படவில்லை. அவர்களது சொத்துக்கள் நட்ட ஈடின்றிப் பறிமுதல் செய்யப்படவுமில்லை. இந்த ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்யும் வகையில் கட்டியமைக்கப்பட்டுள்ள அரசு எந்திரம் தூக்கியெறியப்பட்டு புரட்சிகர வர்க்கங்கள் தமது அதிகாரத்தை நிறுவவுமில்லை. மக்கள் போராட்டங்களால் தற்காலிகமாக ஆளும் வர்க்கங்கள் பின்வாங்கிக் கொண்டுள்ளனவே தவிர, அவற்றின் அதிகாரமும் பொருளாதார பலமும் ஆதிக்கமும் வீழ்த்தப்படவில்லை. கிராமப்புற விவசாயிகளும் நகர்ப்புற ஏழைகளும் அதிபர் சாவேசுக்கு ஆதரவாக உள்ள போதிலும் அவர்கள் புரட்சிகரவர்க்கப் போராட்ட அமைப்புகளில் அணிதிரட்டப்படவில்லை.



இத்தகைய சூழலில்தான் அதிபர் சாவேஸ் தனது வரம்புக்குட்பட்ட அதிகாரத்தைக் கொண்டு மக்கள் நலன் கொண்ட சில சீர்திருத்தங்களைச் செயல்படுத்தி, அதனை ""21ஆம் நூற்றாண்டுக்கான சோசலிசம்'' என்றழைத்தார். தற்போதைய கருத்துக் கணிப்புத் தேர்தலில் அவர் தோல்வியுற்றதும், அவரது சோசலிசம் பொய்த்துப் போய்விட்டதாக ஏகாதிபத்தியவாதிகளால் எள்ளிநகையாடப்படுகிறது. ஏறத்தாழ ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு நடந்ததைப் போல, இக்கருத்துக் கணிப்புத் தேர்தல் மூலம் வெற்றி பெற்றுள்ள ஏகாதிபத்தியவாதிகள், அடுத்த கட்டத் தாக்குதலைத் தொடுக்க ஆயத்தமாகி விட்டனர். சாவேசின் வரம்புக்குட்பட்ட சீர்திருத்தங்களைக் கூட செயல்படுத்துவதற்கான வாய்ப்புகளும் அருகி வருகின்றது. இயல்பாகவே சோசலிசத்தின்பால் ஈர்க்கப்பட்ட வெனிசுலாவின் உழைக்கும் மக்கள், ஆரவாரமாக அறிவிக்கப்பட்ட அதிபர் சாவேசின் சோசலிசக் கொள்கைகளும் திட்டங்களும் செயலிழந்து விட்டதைக் கண்டு அதிருப்தியுற்று, சோசலிசம் என்றாலே வெறுப்பாக பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.



சோசலிசம் என்பது பாட்டாளி வர்க்கக் கட்சியால் தலைமை தாங்கப்படும் பாட்டாளி வர்க்கப் புரட்சியில் மலர்வதேயின்றி, தேர்தல் மூலம் அதிகாரத்துக்கு வருவதல்ல. அதிகாரத்திலிருந்து வீழ்த்தப்பட்ட ஏகாதிபத்தியவாதிகள், தரகு முதலாளிகள், நிலப்பிரபுக்களின் சொத்துக்களையும், உரிமைகளையும் பறித்து, உழைக்கும் மக்கள் தமது சர்வாதிகாரத்தைச் செலுத்தி அதிகாரம் செய்வதுதான் சோசலிசமே அன்றி, சுரண்டும் வர்க்கங்களுக்கு ஜனநாயகம் பன்மைவாதம் அளிப்பதல்ல. பாட்டாளி வர்க்க சித்தாந்தமோ, பாட்டாளி வர்க்கப் புரட்சியோ, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமோ இல்லாமல் சோசலிசத்தை நிறுவ முடியாது; தனிநபரின் உயர்ந்த நோக்கங்களால் சோசலிசத்தைக் கட்டியமைக்கவும் முடியாது. இந்த உண்மைகளை உலகிற்கு உணர்த்திவிட்டு வெனிசுலாவும் அதிபர் சாவேசின் சோசலிசமும் மீள முடியாத நெருக்கடியில் மூழ்கிக் கொண்டிருக்கின்றன.

இயற்கையை உறிஞ்சும் ஏகாதிபத்தியம்

இயற்கையை உறிஞ்சும் ஏகாதிபத்தியம்,,,,, இயற்கையை உறிஞ்சும் ஏகாதிபத்தியம்,.,.,.




ஆறு, கடல், காடு, மலைகள் அனைத்தையும் தனியார்மயமாக்கக் கோரும் உலக முதலாளி வர்க்கத்தின் கரங்களில் வேதப்புத்தகமாகவும் நீதிநூலாகவும் பயன்பட்டு வருகிறது ஒரு கட்டுரை. 'பொதுச் சொத்தின் அவலம்' ((The Tragedy of the commons) என்ற அந்தக் கட்டுரையை எழுதியவர் காரட் ஹார்டின் என்ற கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்.

1968 டிசம்பரில் 'சயின்ஸ்' என்ற அமெரிக்க இதழில் வெளியான அந்தக் கட்டுரை மாபெரும் அறிவியல் ஆய்வாக முதலாளிவர்க்கத்தால் கொண்டாடப்படுகிறது.

இதுவரை 600 பதிப்புகள் வெளியாகியுமிருக்கிறது.ஹார்டின் முன்வைக்கும் 'அறிவியல் பூர்வமான' ஆய்வின் முடிவுகளை கீழ்க்கண்டவாறு தொகுத்துக் கூறலாம்.

''இந்த உலகின் வளங்கள் வரம்புக்குட்பட்டவை. எனவே அவற்றை நுகரும் மக்கட்தொகையும் வரம்புக்குட்பட்டதாகவே இருக்க முடியும். ஆனால் ஏழைகள்தான் வகைதொகையின்றி பெற்றுத் தள்ளுகிறார்கள். வேண்டுகோள்களால் இதைக் கட்டுப்படுத்த முடியாது. இதற்குரிய 'தண்டனை' வழங்கப்பட வேண்டும். பொறுப்பற்ற பெற்றோர்களின் பிள்ளைகள் பட்டினி கிடந்து சாகவேண்டியதுதான் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

பொதுச் சொத்து என ஒன்று இருப்பதனால் தான் இப்படி உருவாகும் கூட்டம் அதனை நாசமாக்குகிறது. எனவே பொதுச் சொத்துக்களை ஆறு, கடல், காடு போன்றன தனியாருக்கு விற்றுவிடலாம்; அல்லது அவற்றைப் பயன்படுத்தும் உரிமை குறிப்பிட்ட அளவு சொத்துள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்ற நிலையை உருவாக்க அவற்றை ஏலம் விடலாம். பொதுச்சொத்தின் அழிவா, தனியார்மயமா என்பதை நாம் உடனே முடிவு செய்தாக வேண்டும்'' என்று கூறுகிறார் ஹார்டின்.

கார்ல் மார்க்ஸ் தன்னுடைய மூலதனத்தில் ஏளனம் செய்து ஒதுக்கிய மால்தஸ் பாதிரியின் மக்கள் தொகைக் கோட்பாடுதான் ஹார்டின் முன் வைக்கும் 'அறிவியல்' ஆய்வின் வழிகாட்டி. எனினும் இதனை 'இன்னொரு அமெரிக்கக் குப்பை' என்று நாம் புறந்தள்ளி விடவும் முடியாது. இந்தக் 'குப்பை' தான் இன்று உலகவங்கியின் பைபிள். உலக வங்கியின் ஆணைக்கிணங்க மகாராட்டிர அரசு கொண்டு வந்துள்ள 'நீர்வள ஒழுங்குமுறைச் சட்டம்' என்பதே 'ஹார்டின் சட்டம்' தான்.''

மாநிலத்தின் நீர்வளங்கள் அனைத்தையும் நிர்வாகம் செய்யும் அதிகாரத்தை முதலாளிகள் அதிகாரிகள் வல்லுனர்கள் அடங்கிய மூவர் குழுவிடம் ஒப்படைப்பது; ஏக்கர் ஒன்றுக்கு ஆண்டுக்கு பாசன வரி ரூ. 8000. இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற்ற விவசாயிகளுக்கு ரூ. 12,000'' என்ற விதிமுறைகளின் பொருள் வேறென்ன?''

எனக்குப் பிள்ளையில்லை; நிலமும் இல்லை. அரசாங்கம் எனக்கு நிலம் தரப்பேகிறதா?'' என்று மகாராட்டிர அரசை நோக்கிக் கேள்வி எழுப்பினார் ஒரு விவசாயி. உடைமைகள் ஏதுமற்ற இந்தப் பாமர விவசாயியின் கேள்வி உலக முதலாளி வர்க்கத்தின் நோக்கத்தை அம்பலமாக்குகிறது. நீர்வளத்தைப் பாதுகாப்பதோ, இயற்கை வளங்களைக் காப்பாற்றுவதோ உலக முதலாளிகளின் நோக்கமல்ல் அவற்றைத் தங்களது தனிச் சொத்தாக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களது வேட்கை.''

உங்களுக்கு வேலை கொடுப்பதற்காகத்தான் நான் ஆலை தொடங்குகிறேன்'' என்று தொழிலாளியிடம் கூறும் இந்தப் பரோபகாரிகள், 'இயற்கையைப் பாதுகாக்கும் பொருட்டு'த்தான் அதனைத் தங்கள் சொத்தாக மாற்றிக் கொள்ள விரும்புவதாக நம்மிடம் சொல்கிறார்கள்.''

இது பேராசை அல்ல் இயற்கையைப் பாதுகாப்பதற்கு இதுதான் அறிவியல்பூர்வமான வழி'' என்றும் நமக்கு விளக்கமும் சொல்கிறார்கள்.''

தனக்குச் சொந்தமில்லாத எதையும் ஒரு மனிதன் பாதுகாக்க மாட்டான்; ஏனென்றால் தனிச் சொத்தைச் சேர்ப்பதுதான் மனிதனின் இயல்புணர்ச்சி. எனவே பொதுச் சொத்தான இயற்கையைத் தனிச் சொத்தாக்குவதொன்றுதான் இயற்கையைப் பாதுகாப்பதற்கான வழி'' என்பதே முதலாளி வர்க்க அறிவுத்துறையினரும் பன்னாட்டு நிறுவனங்களும் முன் வைக்கும் வாதங்கள்.

சொத்து சேர்ப்பது மனிதனின் இயல்புணர்ச்சி! பொதுச் சொத்தைக் கைப்பற்றிக் கொள்வதற்கு முதலாளித்துவம் முன்வைக்கும் 'அறிவியல் பூர்வமான' இந்தக் காரணத்தைத்தான் பொதுவுடைமைக் கொள்கையை எதிர்ப்பதற்கும் முதலாளித்துவம் பயன்படுத்தி வருகிறது. கம்யூனிசத்தை எதிர்ப்பதற்குப் பயன்பட்ட இந்தக் காரணம், இன்று தேசியத்தை எதிர்ப்பதற்கும், உலகின் இயற்கை வளங்களைக் கொள்ளையிடும் முதலாளித்துவ சர்வதேசியத்தை நியாயப்படுத்தவும் ஏகாதிபத்தியங்களால் பயன்படுத்தப் படுகிறது.

பொதுச் சொத்தைச் சூறையாடத் தூண்டும் இதே 'இயல்புணர்ச்சி'தான் கோடிக்கணக்கான சிறு உடைமையாளர்களின் தனிச் சொத்தைச் சூறையாடுமாறும் பன்னாட்டு முதலாளிகளைத் தூண்டுகிறது.

எனவேதான், தண்ணீர் முதல் கடல், காடு, மலை, உயிரணுக்கள், விதைகள் ஈறான அனைத்தையும் தனியார்மயமாக்கும் ஏகாதிபத்திய வெறித்தனத்தை இன்று கம்யூனிஸ்டுகள் மட்டுமின்றி கம்யூனிஸ்டு அல்லாத பலரும் எதிர்த்துப் போராடுமாறு தள்ளப்படுகிறார்கள்.

ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற அடிப்படையில் இத்தகைய போராட்டங்கள் வரவேற்கப்பட வேண்டியவையெனினும் இவர்கள் முன்வைக்கும் மாற்றுகள் பலவீனமானவை, முரண்பாடானவை. முதலாளித்துவ சொத்துடைமையை இவர்கள் ஏற்றுக் கொள்வதால் தற்போதிருக்கும் நிலையைத் தக்க வைப்பது, சிறு தொழில் மற்றும் சிறு உடைமைகளைப் பாதுகாப்பது, மரபுரிமைகளைக் காப்பது என்ற பல கோணங்களிலேயே இந்த மாற்றுகள் முன்வைக்கப்படுகின்றன.

சூழலியம், புவி ஜனநாயகம், மையப்படுத்துதல் எதிர்ப்பு, மரபுக்குத் திரும்புதல் போன்றவை எவையும் முதலாளித்துவத்தைத் தகர்ப்பது பற்றிப் பேசுவதில்லை.

'சொத்து சேர்ப்பது மனிதனின் இயல்பு' என்று கூறும் முதலாளித்துவத்தை இவர்கள் யாரும் சித்தாந்த ரீதியில் கேள்விக்குள்ளாக்குவதில்லை. மாறாக, வௌ;வேறு விகிதங்களில் அந்தக் கருத்துடன் உடன்படுகிறார்கள்.

ஆனால், ''சொத்துரிமை மனிதனின் பிரிக்கவொண்ணாத உரிமை'' என்பதை ஏற்றுக் கொண்டுவிட்டால் சொத்தை விரிவுபடுத்திக் கொள்ளும் உரிமை, அதாவது அடுத்தவன் சொத்தை அபகரிக்கும் உரிமையும் மேற்படி பிரிக்கவொண்ணாத உரிமையின் அங்கமாகி விடுகிறது.

எனவே, முதலாளித்துவச் சொத்துடைமையைக் கேள்விக்குள்ளாக்காதவரை, அதன் சமூக விரோதத் தன்மையை அம்பலப்படுத்தாத வரை, இயற்கையையே உடைமையாக்கிக் கொள்ள எத்தனிக்கும் இந்த ஏகாதிபத்தியச் சதியை நாம் முறியடிக்கவியலாது.

அனைவரும் அறிந்த ஒரு உதாரணத்திலிருந்து தொடங்குவோம். நகராட்சிக் குழாயில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கிறது. குடம் நிறைந்து தண்ணீர் சாலையில் ஓடுகிறது. ஒரு வழிப்போக்கர் குழாயை மூடிவிட்டுச் செல்கிறார் அவர் அந்தக் குழாயின் உரிமையாளர் அல்ல.

விளைந்த பயிரை மாடு மேய்ந்து கொண்டிருக்கிறது. அந்த வழியே செல்லும் விவசாயி அதனை விரட்டிவிட்டுச் செல்கிறார் அவர் அந்த நிலத்தின் உடைமையாளரல்ல.

தண்ணீரின் பயன் மதிப்பையும் தானியத்தின் பயன் மதிப்பையும் அவர்கள் உணர்ந்திருப்பதன் வெளிப்பாடுதான் அவர்களது நடவடிக்கைகள்.

ஒழுகும் குழாயைக் காணும் ஹார்டினும் பதறுகிறார்; சுமார் எத்தனை லிட்டர் தண்ணீர் வீணாகியிருக்கும் என்று மதிப்பிட்டு அதனை 12 ரூபாயால் பெருக்கிப் பார்க்கிறார். தண்ணீருக்கு முதலாளித்துவம் நிர்ணயித்திருக்கும் சந்தை மதிப்பின்படி சுமார் 1200 ரூபாய் தண்ணீர் வீணாகியிருக்கிறது. ''தனியார்மயம்தான் இதற்குத் தீர்வு'' என்று உடனே குரல் கொடுக்கிறார்.

வழிப்போக்கனின் பார்வையில் அங்கே வீணாகிக் கொண்டிருந்தது பயன் மதிப்புமிக்க தண்ணீர். எனவேதான் அவர் குழாயை மூடுகிறார். ஹார்டினின் வர்க்கத்øத் சேர்ந்தவர்கள் குழாயை மூடுவதில்லை.

ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை குடத்தில் நிரம்பியிருக்கும் தண்ணீருக்கும் வழிந்து தெருவில் ஓடும் தண்ணீருக்கும் வேறுபாடு இல்லை. ஏனென்றால் அது விலைமதிப்பு நிர்ணயிக்கப்படாத நகராட்சித் தண்ணீர், இல வசக் குடிநீர். சரக்காக மாற்றப்படும் வாய்ப்பில்லாத தண்ணீர், குடத்தில் நிரம்பினாலும் தெருவில் ஓடினாலும் அது அவர்களைப் பொருத்தவரை வீணானதுதான்.

மனிதன் உள்ளிட்ட இயற்கை அனைத்தையுமே முதலாளித்துவம் பண்டமாகவும், உற்பத்திச் சாதனமாகவுமே பார்க்கிறது. எனவே அத்தகைய பண்டம், தான் மட்டும் நுகரக் கூடியதாகவோ, தான் மட்டுமே சுரண்டக்கூடியதாகவோ, தன்னால் விற்கப்படக் கூடியதாகவோ இல்லாதவரையில் எந்த ஒரு பொருளின் பயன் மதிப்பையும் அது பொருட்படுத்துவதில்லை.

''தனிச் சொத்துடைமை நம்மை முட்டாள்களாகவும் ஒரு தரப்பானவர்களாகவும் செய்து விட்டபடியால், ஒரு பொருள் நம்மிடம் இருந்தால்தான் அது நம்முடையதாகிறது'' என்றார் கார்ல் மார்க்ஸ். பொதுச் சொத்துகளையும் இயற்கையையும் வீணாக்கும் பொறுப்பற்ற தன்மை மக்களிடம் நிலவுகிறதென்றால் அதற்கு முழு முதற்காரணம் முதலாளித்துவம் அவர்களிடம் தோற்றுவித்திருக்கும் சிந்தனையும் பண்பாடும்தான்.

முதலாளித்துவத்தால் இன்னமும் தின்று செரிக்கப்படாமல் மக்களிடம் எஞ்சியிருக்கும் மரபுகளும், விழுமியங்களும், பாட்டாளி வர்க்கத்திற்கேயுரிய பொதுமை நாட்டமும்தான் 'நமக்குச் சொந்தமில்லாததையும் நம்முடையதாகக் கருதும்' பண்பாட்டை மக்களிடம் நிலவச் செய்திருக்கின்றன.முதலாளித்துவமோ தனக்குச் சொந்தமில்லாத எந்தப் பொதுச் சொத்தையும் நாசமாக்குகிறது. பாலாறும், ஒரத்துப்பாளையம் அணையும், கங்கை, யமுனையும் சில எடுத்துக்காட்டுகள். முதலாளிகள் இயற்கையை நேசிக்குமாறு செய்யும்பொருட்டு இயற்கை வளங்களை ஹார்டினின் அறிவுரைப்படி தனியார்மயமாக்கி விடலாம்தான். ஆனால் அவற்றைச் சூறையாடுவதன் வாயிலாகத்தான் முதலாளித்துவம் தன்னுடைய நேசத்தை வெளிப்படுத்திக் கொள்கிறது.

ஆயிரம் ஆண்டுகளாய் சேமிக்கப்பட்ட பிளாச்சிமடாவின் நிலத்தடி நீர் வளத்தை இரண்டே ஆண்டுகளில் கொக்கோ கோலா ஏன் உறிஞ்சித் தீர்க்க வேண்டும்? பல லட்சம் ஆண்டுகளாய் சூரியனின் வெப்பத்தால் உருவாகிச் சேமிக்கப்பட்டிருக்கும் நிலக்கரியையும் எண்ணெய் வளத்தையும் சில பத்தாண்டுகளிலேயே சுரண்டி எடுத்து விட்டு 'சூரிய ஒளியிலிருந்தே மின்சாரம்', 'புதுப்பிக்கப்படக் கூடிய எரிபொருள்', 'காற்றிலிருந்து மின்சாரம்', 'கடல் நீரிலிருந்து குடிநீர்' என்று எதற்காகத் தவிக்க வேண்டும்?

பிளாச்சிமடாவின் நிலத்தடி நீரையும் வளைகுடாவின் எண்ணெய்க் கிணறுகளையும் வற்றச் செய்தவர்கள் ஏழைகளால் பெற்றுப் போடப்பட்ட மக்கள் கூட்டமல்ல. யாரிடம் இயற்கை வளங்களை ஒப்படைக்க வேண்டுமென ஹார்டின் சொல்கிறாரோ, அந்தப் பணக்கார வர்க்கத்தின் கார் தாகமும் பெப்சி தாகமும்தான், ஏனைய மக்களைத் தாகத்தில் தள்ளியிருக்கிறது.

இந்தப் பணக்கார வர்க்கத்தின் தாகமும் இயல்பான தேவையிலிருந்து எழுந்ததல்ல் இதுவும் விளம்பரங்களால் உற்பத்தி செய்யப்பட்ட தாகம்; மூலதனத்தின் தாகத்தை, முதலாளி வர்க்கத்தின் லாப வேட்கையைத் தணிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட தாகம்.

'இந்தத் தாகம் ரொம்பப் பெரிசு'. அதனால்தான் பல ஆயிரம் விவசாயிகள், சில நூற்றாண்டுகளாய் விவசாயம் செய்தும் அழியாத நிலத்தடி நீர்வளத்தை, ஒரே ஒரு கம்பெனி இரண்டே ஆண்டுகளில் அழித்து விட்டது.

நாளொன்றுக்கு 5 லட்சம் லிட்டர் என்ற ஒப்பந்தத்தின் வரம்புக்குள் நின்று பத்தாண்டுகளுக்கு உற்பத்தியை விரிவாக்காமல் ஒரே அளவில் வைத்திருப்பதற்கு கோக் நிறுவனம் ஒரு விவசாயி அல்ல் தாமிரவருணியிலிருந்து நாளொன்றுக்கு எவ்வளவு தண்ணீர் எடுக்க வேண்டுமென்பது ஒப்பந்தக் காகிதத்தால் தீர்மானிக்கப்படுவதில்லை. அது அட்லாண்டாவில் உள்ள கோக்கின் தலைமையகத்தால் தீர்மானிக்கப்படுகிறது. 'தண்ணீருக்குப் பதிலாக கோக்' என்பதைத் தனது முழக்கமாக வைத்துள்ள கம்பெனியின் தாகம் தாமிரவருணி ஆற்றையே பாட்டிலில் அடைத்தாலும் அடங்கப் போவதில்லை.

இயற்கையை ஓம்பும் விதத்திலோ, இயற்கை தன்னைப் புனரமைத்துக் கொள்ளும் வேகத்தைக் கணக்கில் கொண்டோ முதலாளித்துவச் சுரண்டலின் வேகம் தீர்மானிக்கப்படுவதில்லை. இலாபம் மட்டுமே அதன் உந்து சக்தி. எனவே இயற்கை வளங்களையும் மனித வளத்தையும் சுரண்டுவதில் முதலாளித்துவம் காட்டும் வரைமுறையற்ற வெறி என்பது அதன் இயல்பான பண்பு.

குடகு மலையின் காடுகளை அழித்து பல்லாயிரம் ஏக்கர் காப்பித் தோட்டம்! மழை பொய்த்தது, காவிரி வறண்டது, விவசாயம் அழிந்தது. திக்கற்றவர்களாக திருப்பூருக்கு ஓடிவரும் விவசாயிகளை 12 மணிநேரம், 15 மணிநேரம் என்று வேலை வாங்கி அவர்களையும் 40 வயதுக்குள் முடமாக்கி, மனிதக் கழிவுகளாக்கி வெளியேற்றுகிறது முதலாளித்துவம்.

இயற்கையின் ஆதாரப் பொருளான தண்ணீரை நஞ்சாக்குவதைப் போலவே, இயற்கையின் அதிஉன்னதப் படைப்பான மனிதனையும் அது நஞ்சாக்குகிறது. மண்ணுக்கும் மனிதனுக்கும், நீர் வளத்துக்கும் மனிதவளத்துக்குமிடையே முதலாளித்துவம் பாரபட்சம் காட்டுவதில்லை. பொரி பொரியாய்த் தெறித்து ஈரப்பசை ஒட்ட மறுக்கும் பாலாற்றின் படுகைக்கும், சொறியும் சிரங்கும் வந்து தோல் வறண்டு போன அந்தப் பகுதி மக்களின் தோலுக்கும் என்ன வேறுபாடு? ஒரத்துப்பாளையம் கழிவுநீருக்கும் சிறுமி செல்வராணியின் கொப்புளங்களிலிருந்து வழியும் சீழுக்கும் என்ன வேறுபாடு?

''சமூகத்தைப் போலவே இயற்கை சம்பந்தமாகவும் கூட இக்காலத்தில் (முதலாளித்துவ) உற்பத்தி முறை உடனடியான விளைவுகளைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டுள்ளது. பிறகு இந்த நோக்கத்தின் பால் திசைமுகம் திரும்பியுள்ள செயல்களின் எதிர்கால விளைவுகள்... பெரும்பாலும் நேர் முரணானவையாக மாறிவிடுகின்றன.

''''உற்பத்தி செய்த, அல்லது விலைக்கு வாங்கப்பட்ட சரக்கை வழக்கமான பேராசைப்பட்ட லாபத்துடன் விற்றவுடன் அவன் (முதலாளி) திருப்தியுறுகிறான். அதன் பிறகு அந்தச் சரக்கிற்கோ அதை வாங்குபவர்களுக்கோ என்ன நேர்கிறது என்பதைப் பற்றி அவன் கவலை கொள்பவனாக இல்லை'' என்றார் எங்கெல்ஸ்.

முதலாளித்துவத்தின் அருந்தவப் புதல்வனான ப.சிதம்பரம் எங்கெல்சின் கூற்றைப் பொய்ப்பித்துக் காட்டிவிட்டார். சிகரெட் தயாரிக்கும் தரகு முதலாளித்துவ நிறுவனமான ஐ.டி.சி. நடத்திய வரி ஏய்ப்பை 'மன்னித்து' 350 கோடி ரூபாய் தள்ளுபடி செய்தார். புற்று நோய்க்கான மருந்தின் விலையை 100இலிருந்து 1000 ரூபாயாக உயர்த்திக் கொள்ளும் ஏகபோக உரிமையை நோவார்ட்டிஸ் என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு நீதிமன்றத்தில் பெற்றுக் கொடுத்ததன் மூலம், சிகரெட் புகைப்பவர்களுக்கு என்ன நேர்கிறது என்பது குறித்தும் தான் 'கவலை' கொண்டிருப்பதை அவர் நிரூபித்துக் காட்டினார்.

ஒவ்வொரு அழிவிலும், ஒவ்வொரு துயரத்திலும் தனக்கான சந்தையைக் கண்டுபிடிக்கிறது முதலாளித்துவம். மேற்பரப்பு நீரை அழித்துவிட்டு நிலத்தடி நீர் வேட்டைக்கு பம்பு செட்டு வியாபாரம்; நிலத்தடி நீரை அழித்து முடித்தவுடனே கடின நீரை நன்னீராக்கும் கருவிகளின் விற்பனை; ஒருபுறத்தில் குடிநீரைக் கழிவுநீராக்கும் ஆலைகள் மறுபுறம் கடல்நீரைக் குடிநீராக்கும் எந்திரங்கள்!

''இயற்கையை ஆளும் விதிகளைக் கண்டு பிடிப்பதென்பது நுகர்வுப் பொருள் அல்லது உற்பத்திச் சாதனம் என்ற முறையில் மனிதனுடைய தேவைகளுக்கு அதனைக் கீழ்ப்படுத்துகின்ற சூழ்ச்சியாகவே தோன்றுகிறது'' என முதலாளித்துவத்தின் கையில் அகப்பட்ட இயற்கையின் அவலநிலையையும், அறிவியலின் தரத்தையும் விமரிசித்தார் மார்க்ஸ்.

இயற்கையின் மீதான தனது வினைகள் எத்தகைய எதிர்வினைகளைத் தோற்றுவிக்கக் கூடும் என்பது குறித்து முதலாளித்துவம் கவலைப்படுவதில்லை. ''ஆறு வற்றினால் நிலத்தடி நீர், அதுவும் வற்றினால் பனிப்பாறைகளை உருக்கு, கடல்நீரைக் குடிநீராக்கு...'' என்று வெட்டுக்கிளியைப் போல இயற்கையைச் சூறையாடியபடியே செல்கிறது. ஒவ்வொரு அழிவும், ஒவ்வொரு மாற்றமும் என்ன விளைவை ஏற்படுத்தும் என்ற தூரப்பார்வை அதற்குக் கிடையாது.

''மனிதகுலம் உயிர்வாழ்வதன் நோக்கம் உற்பத்தி உற்பத்தியின் நோக்கம் லாபம்'' என்ற கிட்டப்பார்வைதான் முதலாளித்துவத்தை வழிநடத்துகிறது. இயற்கையை அழிக்கும்போதும், மாற்றியமைக்கும் போதும் அது மனிதனின் மீது என்ன விளைவுகளைத் தோற்றுவிக்கிறது என்பதைப் பற்றியும் முதலாளித்துவம் கவலைப்படுவதில்லை.

இயற்கையின் அதியுன்னதப் படைப்பான மனிதன் உயிரியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் நாசமாக்கப்படுகிறான். கார்கள் வெளியிடும் புகையைச் சுவாசிப்பதன் விளைவாக மட்டும் மனிதனின் உடலில் ஈயத்தின் அளவு 100 மடங்கு அதிகரித்திருப்பதாகக் கூறுகிறது ஒரு ஆய்வு. ''ஒரு நுகர் பொருள் தோற்றுவிக்கும் நோயைக் குணப்படுத்த இன்னொரு நுகர்பொருள்'' என்று மனிதனின் உடலையே தனது லாப வேட்டைக்கான சுரங்கமாக மாற்றுகிறது முதலாளித்துவம். முதலாளித்துவப் போட்டியும் நெருக்கடியும் வேலை இழப்பும் பதட்டமும் நிச்சயமற்ற வாழ்க்கையும் மனிதர்களின் நரம்பு மண்டலத்தைச் சின்னாபின்னமாக்கி மன நோயாளிகளைப் பெருக்குகிறது.

பல லட்சம் ஆண்டுகளாய் நிலத்தடியில் சேமிக்கப்பட்ட எரிபொருட்களைச் சூறையாடும் அந்த லாபவெறி, மனிதன் எனும் இயற்கையின் அற்புதப் படைப்பையும் ஊனப்படுத்திச் சிதைக்கிறது. ''இயற்கையைப் பாதுகாக்கும் பொருட்டு மனிதர்களைக் கொல்ல வேண்டும்'' என்று பேராசிரியர் ஹார்டினைச் சொல்ல வைப்பது இயற்கையின் பால் அவர் கொண்ட காதல் அல்ல் அது லாபத்தின் மீதான காதல். இயற்கையின் சிறந்த படைப்பாகக் கூட மனித உயிரை மதிப்பிடவிடாமல் அவருடைய கண்ணை மறைக்கின்ற லாபவெறி!

முதலாளி வர்க்கத்தைப் பொறுத்தவரை இயற்கையைப் போலவே மனிதனும் ஒரு உற்பத்திச் சாதனம்; இயற்கை வளத்தைப் போலவே மனித உழைப்பும் ஒரு விற்பனைச் சரக்கு. தேய்ந்து போன உற்பத்திச் சாதனங்களைத் தூக்கியெறிவதைப் போல, விற்க முடியாமல் தேங்கிப் போன தானியங்களைக் கடலில் கொட்டுவதுபோல, தேவைப்படாத மனிதர்களையும் ஹார்டின் அழிக்கவிரும்புகிறார். எனவே அவர்களை உபரி உற்பத்திப் பொருட்களாகக் கருதுகிறார்.

யார் எந்தப் பொருளை எவ்வளவு உற்பத்தி செய்ய வேண்டும் என்று விரல்விட்டு எண்ணக் கூடிய பன்னாட்டு முதலாளிகளை அழைத்து ஆணை பிறப்பிக்க முடியாத ஹார்டின், யார் எவ்வளவு பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உலக மக்களுக்கு ஆணையிடுகிறார். ''பொருளுற்பத்தியைக் கட்டுப்படுத்த முடியாது, அதற்கேற்ப மனித உற்பத்தியைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்! முதலாளிகளின் லாபம் சேர்க்கும் 'மனித உணர்ச்சி'யை கட்டுப்படுத்த முடியாது; அதற்குப் பொருத்தமாக உங்கள் புலனுணர்ச்சியைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்!'' என்று மக்களை, குறிப்பாக, ஏழை மக்களை எச்சரிக்கிறார் ஹார்டின்.

அராஜகம் என்பது முதலாளித்துவத்தின் பிறப்பியல்பு. சமூகமே உற்பத்தியில் ஈடுபடுவது, ஒரு சிலர் மட்டும் அதை நுகர்வது; ஒரு நிறுவனத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட உற்பத்தி, மொத்த உற்பத்தியில் அராஜகம் - என்பது முதலாளித்துவத்தின் முரண்பாடுகள். தானே தோற்றுவிக்கும் இந்த முரண்பாட்டிலிருந்து தான் விடுபடுவதற்காக போர்கள், பட்டினிக் கொலைகள் மூலம் முதலாளித்துவம் மனிதனைச் சூறையாடுகிறது, இயற்கையையும் சூறையாடுகிறது.

இயற்கை பதிலடி கொடுக்கிறது. பெருமழையாக, வறட்சியாக, பனிப்பொழிவாக, சூறைக்காற்றாக..., உடனுக்குடனோ, சற்றுத்தாமதித்தோ பதிலடி கொடுக்கிறது. ''இயற்கையின் மீது நமது மானுட வெற்றிகளை வைத்துக் கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்து கொள்ள வேண்டியதில்லை. இப்படிப்பட்ட வெற்றி ஒவ்வொன்றுக்கும் இயற்கை நம்மைப் பழிவாங்குகிறது'' என்று குறிப்பிட்டார் எங்கெல்ஸ்.

தன்னளவில் ஒத்திசைவு கொண்டதாக இயங்கும் இயற்கையை ஒத்திசைவு அற்ற மனித சமூகம் எதிர்கொண்டு நிற்க இயலாது. 'தனது உற்பத்தி சக்திகளை ஒரே திட்டத்தின் அடிப்படையில் ஒன்றோடொன்று இணக்கமாகச் சேர்ந்து கொள்வதைச் சாத்தியமாக்குகின்ற சமூகம் மட்டும்தான்' இயற்கையுடனான உறவைச் சரியான முறையில் பேண முடியும்.

இயற்கையைத் தனது உடலாகவும், உழைப்பைத் தனது சாரமாகவும் கருதுகின்ற பொதுவுடைமைச் சமூகத்தில் மட்டுமே இயற்கையுடனான முரண்பாட்டை மனிதகுலம் சரியாகக் கையாள முடியும். தனிச் சொத்துடைமையை மனிதனின் இயல்புணர்ச்சியாக அங்கீகரிக்கும் சமூகம், இயற்கையை அழிப்பதற்கு முன், தன்னுடைய சொந்த அழிவை, தானே விரைவுபடுத்திக் கொள்ளும்.

உலகமயமாக்கம் என்ற பெயரில் திணிக்கப்படும் மறுகாலனியாக்கத்தின் உள்ளடக்கம் முதலாளித்துவம். வேறொரு வகை முதலாளித்துவச் சித்தாந்தத்தால் இதனை முறியடிக்க முடியாது. மனித குலமும் உயிரினச் சூழலும் பிழைத்திருக்க வேண்டுமாயின் முதலாளித்துவம் அழிந்தாக வேண்டும்.

''பொதுச்சொத்தின் அழிவா, தனியார்மயமா என்பதை நாம் உடனே முடிவு செய்தாக வேண்டும்'' என்கிறார் பேராசிரியர் ஹார்டின். ''இரண்டும் ஒன்றுதான்'' என்ற பதிலே இத்தகைய அற்பர்களுக்குப் போதுமானது.

எனினும் ஹார்டினையொத்த முதலாளித்துவ அற்பமதியினரின் வாதங்களை முன் ஊகித்துத் தனது மூலதனத்தில் விடையளித்திருக்கிறார் மாமேதை கார்ல் மார்க்ஸ்:''ஒரு மனிதன் பிறிதொரு மனிதனைத் தனது தனிச்சொத்தாக வைத்திருந்ததென்பது எங்ஙனம் (இன்று) அபத்தமானதாக ஆகிவிட்டதோ, அதேபோல, ஒரு உயர்ந்த சமூக பொருளாதார அமைப்பின் பார்வையில், தனிப்பட்ட சிலர் (இன்று) இந்தப் புவியில் கொண்டிருக்கும் தனிச் சொத்துடைமை என்பதும் (நாளை) அபத்தமானதாகவே கருதப்படும். ஒரு முழுச் சமூகமோ, ஒரு தேசமோ, அல்லது சமகாலத்தில் நிலவும் எல்லாச் சமூகங்களும் இணைந்தால்கூட யாரும் இந்தப் பூமியின் உடைமையாளர்களாகிவிட முடியாது. அவர்கள் இந்தப் பூமியில் (வாழப்)பெற்றிருக்கிறார்கள், பயனடைகிறார்கள் அவ்வளவுதான். 'ஒரு நல்ல குடும்பத் தலைவன் செய்வதைப் போல', தனக்குப் பின்னர் வரும் தலைமுறைகளுக்கு இந்தப் பூமியை மேலும் சிறப்பான நிலையில் அவர்கள் விட்டுச் செல்ல வேண்டும்.''

அமெரிக்க ஏகாதிபத்தியம் காகிதப்புலிதான்”

அமெரிக்க ஏகாதிபத்தியம் காகிதப்புலிதான்



கொல்லைப்புற வழியாக சோமாலியாவை ஆக்கிரமிக்க அமெரிக்கா நடத்திய போர் படுதோல்வியில் முடிந்துவிட்டது. சோமாலியா என்றவுடனேயே நமது நினைவுக்கு வருவது, அந்நாட்டைப் பிடித்தாட்டும் பஞ்சமும், பட்டினியால் எலும்பும் தோலுமாகிப் போன அந்நாட்டு மக்களும்தான். இப்படிபட்ட பஞ்சப் பரதேசியான நாடும் அதன் மக்களும், தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்கா நடத்திவரும் ஆக்கிரமிப்புப் போருக்கு ஒரு மரண அடி கொடுத்திருப்பது உங்களுக்குத் தெரியுமா?


ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கா நடத்தி வரும் ""தீவிரவாதத்துக்கு எதிரான போர்'' வெளியே தெரிந்த அளவிற்கு, சோமாலியா நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த போர் பொதுமக்களின் கவனத்துக்கு வரவில்லை. இதற்குக் காரணம், அமெரிக்கா, ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் தனது படைகளை இறக்கி, அந்நாடுகளை ஆக்கிரமித்திருப்பதைப் போல் சோமாலியாவில் ஆக்கிரமிப்புப் போரை நேரடியாக நடத்தவில்லை. மாறாக, ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள தனது பிராந்திய அடியாளான எத்தியோப்பியப் படைகளின் மூலம் ஆக்கிரமிப்புப் போரை நடத்தியது. இதன் காரணமாக பெரும்பாலான முதலாளித்துவப் பத்திரிகைகளால் சோமாலியாவில் நடந்து வந்த இந்தப் போர், சோமாலியாவுக்கும் எத்தியோப்பியாவுக்கும் நடக்கும் அண்டை நாட்டுச் சண்டையாகப் புறக்கணிக்கப்பட்டது.


அமெரிக்கா, ஏழை நாடான சோமாலியா மீது தொடுத்த இந்த ஆக்கிரமிப்புப் போரை, தீவிரவாதத்துக்கு எதிரான போரின் மூன்றாவது போர் முனையாகக் குறிப்பிட்டு வந்தது. சோமாலியா மக்கள் கடுமையான பஞ்சத்துக்கு இடையிலும் போராடி, எத்தியோப்பியப் படைகளைத் தோற்கடித்து, இந்த மூன்றாவது போர் முனையில் அமெரிக்காவின் மூக்கை அறுத்திருக்கிறார்கள்.



சோமாலியா, ஆப்பிரிக்கக் கண்டத்தின் கிழக்கு முனையில் இந்தியப் பெருங்கடலையொட்டி அமைந்துள்ளது. மேலும், ‹யஸ் கால்வாயின் தென்பகுதி, ஏடன் வளைகுடாவையொட்டி சோமாலியா அமைந்திருப்பதாலும்; உலகில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயில் ஏறத்தாழ 30 சதவீதம் இக்கடல் பகுதி வழியாகத்தான் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்படுவதாலும் "பனிப்போர்' காலந்தொட்டே சோமாலியாவைத் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர மேல்நிலை வல்லரசுகள் முயன்று வந்தன.


அமெரிக்காவுக்கும் சோவியத் சமூக ஏகாதிபத்திய ரசியாவிற்கும் இடையே பனிப்போர் நடந்து வந்த காலத்தில், அவை, சோமாலியாவையும் அதன் அண்டை நாடான எத்தியோப்பியாவையும் மோதவிட்டுப் பதிலிப் போரை நடத்தின. "ஓகாடேன் போர்'' என்றழைக்கப்பட்ட இப்பதிலிப் போரில், சோமாலியாவை அமெரிக்காவும், எத்தியோப்பியாவை ரசியாவும் ஆதரித்தன. இப்போரில் சோமாலியா மிகவும் அவமானகரமான தோல்வியைச் சந்தித்தது.


இப்போரினையடுத்து, சோமாலியாவில் வசித்துவந்த இனக்குழுக்கள், அமெரிக்கா தயவுடன் அந்நாட்டை ஆண்டு வந்த அதிபர் சியாத் பார்ரேக்கு எதிராகக் கலகம் செய்தன. இந்த உள்நாட்டுக் கலகத்தால் அதிபர் சியாத் பார்ரே 1990களின் ஆரம்பத்தில் பதவியை விட்டு ஓடினான். அதிகாரத்தை யார் கைப்பற்றிக் கொள்வது என்ற போட்டி ஏற்பட்டதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட அமெரிக்கா, ஐ.நா.வின் மூலம் உதவிநிவாரணம் என்ற பெயரில், ஏறத்தாழ 30,000 துருப்புகளை சோமாலியாவில் கொண்டு வந்து இறக்கியது. எனினும், சோமாலியா மக்களின் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டங்களின் காரணமாக, அமெரிக்கா 1995இல் தனது படைகளை சோமாலியாவில் இருந்து விலக்கிக்கொண்டது.


அதன்பிறகு சோமாலியா, ஏறத்தாழ பத்து ஆண்டுகள், தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் எனும் வகையில், யுத்தப் பிரபுக்களின் கைகளில் சிக்கிக் கொண்டது. யுத்தப் பிரபுக்களுக்கு இடையே அதிகாரத்துக்கு நடைபெற்றுவந்த நாய்ச்சண்டை, மற்றும் பஞ்சம், பட்டினிக்குள் சிக்கிக் கொண்டு, சோமாலியா சிதைந்து சின்னாபின்னமானது.


இந்நிலையில், சோமாலியாவைச் சேர்ந்த மிதவாத முஸ்லீம் அமைப்புகளும், தேசியவாத அமைப்புகளும் இணைந்து, ""இஸ்லாமிய ஐக்கியக் கவுன்சில்'' என்ற அமைப்பை ஏற்படுத்தி, பதவிவெறி கொண்ட யுத்தப் பிரபுக்களுக்கு எதிராகப் போராடத் தொடங்கின. இவ்வமைப்பு, 2006ஆம் ஆண்டு, யுத்தபிரபுக்களை முற்றிலுமாகத் தோற்கடித்து, சோமாலியா நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றியது.
இவ்வமைப்பின் கீழ் சிதறுண்டு கிடந்த நாடு ஒன்றுபடுத்தப்பட்டு, மைய அரசு ஏற்படுத்தப்பட்டது. விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்ற பொருளாதாரக் கண்ணிகளும், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற மக்கள் நலன் சேர்ந்த உறுப்புகளும் தொடர்ந்து இயங்கும் வண்ணம் சோமாலியா புனரமைக்கப்பட்டது; ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே குறைந்த கட்டணத்தில் கைபேசி சேவை அளிக்கும் வண்ணம் சோமாலியாவில் ""பொருளாதார வளர்ச்சியும்'' ஏற்படத் தொடங்கியது. இதனைக் கண்டு அமெரிக்கக் கழுகுக்கும் மூக்கு வியர்க்கத் தொடங்கியது.


சோமாலியா மீது படையெடுக்க வேண்டும் என்றால், உலக நாடுகளின் முன் ஒரு காரணத்தை முன்வைக்க வேண்டும். அதற்காக ஒரு புளுகு மூட்டையைத் தயாரித்தது, அமெரிக்கா. சோமாலியாவை ஆளும் இஸ்லாமிய ஐக்கியக் கவுன்சில், அல்காயிதாவுடன் தொடர்புடைய அமைப்பு என்றும்; 1998 ஆம் ஆண்டு நைரோபியிலும், தர்இஸ்லாமிலும் அமெரிக்கத் தூதரகங்களுக்குக் குண்டு வைத்த அல்காயிதா பயங்கரவாதிகளுக்கு, இஸ்லாமிய ஐக்கிய கவுன்சில் சோமாலியாவில் அடைக்கலம் கொடுத்திருப்பதாக ஒரு கோயபல்” பிரச்சாரத்தை நடத்தத் தொடங்கியது, அமெரிக்க அரசு.


"பனிப்போர்' காலத்தில், சோவியத் ரசியாவின் அடியாளாக இருந்த எத்தியோப்பியா, 2000இல், ஆப்பிரிக்கக் கண்டத்தில் அமெரிக்காவின் நம்பகமான கூட்டாளியாக மாறியது. சோமாலியாவுக்கும், எத்தியோப்பியாவுக்கும் இடையே பல பத்தாண்டுகளாக இருந்துவரும் பகையைத் தனது ஆக்கிரமிப்பு நோக்கங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டது, அமெரிக்கா. இஸ்லாமிய ஐக்கியக் கவுன்சிலால் தோற்கடிக்கப்பட்ட சோமாலியாவின் யுத்தப் பிரபுக்களின் தலைமையில் ஒரு பொம்மை அரசை நிறுவும் திட்டமும் அமெரிக்காவில் தயாரானது.


இஸ்லாமிய ஐக்கியக் கவுன்சில் யுத்தப் பிரபுக்களோடு அதிகாரப் பகிர்வு செய்து கொள்ள முன் வந்து போரைத் தவிர்க்க முயன்றது. ஆனால், அமெரிக்காவோ, எத்தியோப்பியா எல்லையோரம் தலைமறைவாகத் திரிந்த சோமாலியாவின் யுத்தப் பிரபுக்களுக்கு சி.ஐ.ஏ.மூலம் இரகசியமான வழிகளில் ஆயுத உதவி அளித்து, போர் ஏற்பாடுகளை முடுக்கி விட்டது. அமெரிக்காவின் மத்தியப் படையணியின் தளபதி ஜான் அபிஸெசூத் எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவுக்கு நவம்பர் 2006இல் ""விஜயம்'' செய்தார். அதற்கு அடுத்த மாதம் எத்தியோப்பியப் படைகள், சோமாலியாவுக்குள் நுழைந்து, அமெரிக்காவின் ஆசையை நிறைவேற்றி வைத்தன.


"அல்காயிதா பயங்கரவாதிகளை அழித்தொழிப்பது'' என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த ஆக்கிரமிப்புப் போரினால், கடந்த இரண்டே ஆண்டுகளுக்குள் 16,000க்கும் மேற்பட்ட சோமாலியா மக்கள் மாண்டு போனார்கள். ஒருகட்டத்தில், இராணுவத் தாக்குதல்களால் அன்றாடம் சாகும் பொதுமக்களின் எண்ணிக்கை, ஈராக்கைவிட சோமாலியாவில் அதிகமானது.


எத்தியோப்பியப் படைகளுக்குத் துணையாக, சோமாலியாவையொட்டிய சர்வதேசக் கடல் பரப்பில் இருந்து அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், ஆடு மேய்க்கும் அப்பாவிகள் 130 பேர் கொல்லப்பட்டனர். அடேன் ஹஷி ஆசூரோ என்ற "பயங்கரவாதியை''க் கொல்ல அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலிலும் பல சாமானிய மக்கள் கொல்லப்பட்டனர்.


எத்தியோப்பிய இராணுவச் சிப்பாய்கள், சோமாலியாப் பெண்களைக் கும்பல் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்துவதும்; அப்பாவி மக்களைத் தொண்டையை அறுத்துக் கொலை செய்வதும் அன்றாட நிகழ்வுகளாகிப் போனது. இப்பயங்கரவாதப் படுகொலைகள் ஒருபுறமிருக்க, தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்களால், சோமாலியாத் தலைநகர் மோகாதிஷ் ஆள் அரவமற்ற சுடுகாடாகிப் போனது. தட்டுத்தடுமாறி எழுந்து கொண்டிருந்த சோமாலியாப் பொருளாதாரம், மீண்டும் செயற்கையான பஞ்சத்தை சோமாலியாவின் மீது திணித்தது. இராணுவத் தாக்குதல்கள் மற்றும் பஞ்சம், பட்டினியில் இருந்து தப்பிக்க ஏறத்தாழ 25 இலட்சம் சோமாலியார்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக அலையத் தொடங்கினர்.


பஞ்சத்தைக் காட்டி, நிவாரண உதவி என்ற பெயரில் ஐ.நா. மூக்கை நுழைத்தது. ஐ.நா.வின் இந்த "உதவியை'' பட்டினிக்குள் தள்ளப்பட்ட சோமாலியா மக்களுக்குக் கிடைக்காமல், அமெரிக்காவால் கொம்பு சீவிவிடப்பட்ட யுத்தப் பிரபுக்கள் தட்டிப் பறித்துக் கொண்டனர். மேலும், சோமாலியாவில் அமைதியை நிலைநாட்டுவது என்ற பெயரில் ஐ.நா. ஆதரவு பெற்ற அமைதிப் படையும் இறக்கிவிடப்பட்டது.



அமைதிப் படையோ, அமெரிக்கா திணித்த பொம்மை அரசைக் காக்கும் பணியைத் திறம்படச் செய்தது. சோமாலியா கடற்பரப்பில் நடக்கும் கடற்கொள்ளையைத் தடுப்பது என்ற பெயரில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தங்கள் கடற்படையை சோமாலியா கடற்பரப்பில் நிறுத்திக் கொள்ளும் அனுமதியும் ஐ.நா. வால் வழங்கப்பட்டது, இப்படியாக, ஐ.நா.வின் ஆசியோடு, சோமாலியாவை அடிமைப்படுத்தும் அமெரிக்காவின் திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்தது.


எனினும், அமெரிக்காவின் ஆதிக்கக் கனவு முழுமையாகக் கைகூடவில்லை. பட்டினி போட்டும், ஏவுகணைத் தாக்குதல்களால் பயமுறுத்தியும் சோமாலியாவை அடிமைப்படுத்திவிடலாம் என்ற அமெரிக்காவின் திட்டத்தை, சோமாலியா மக்களின் ஆயுதப் போராட்டம் முறியடித்துவிட்டது. ஜார்ஜ் புஷ், அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து இறங்கிய அதே சமயத்தில், எத்தியோப்பியப் படைகள் சோமாலியாவில் இருந்து புறமுதுகிட்டு ஓடிப் போயின.


ஆப்பிரிக்கக் கண்டம் முழுவதையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற அமெரிக்காவின் மாபெரும் திட்டத்தின் ஒரு பகுதிதான் சோமாலியா ஆக்கிரமிப்பு. எத்தியோப்பியப் படைகள் சோமாலியாவை விட்டு விலகிவிட்டாலும், அமெரிக்கா சி.ஐ.ஏ. மூலம் சோமாலியா யுத்தப் பிரபுக்களுக்கு இரகசியமாக ஆயுத உதவி செவதை நிறுத்தவில்லை என முதலாளித்துவப் பத்திரிகைகளே அம்பலப்படுத்துகின்றன.


சோமாலியா, சூடான், எரிட்ரீயா ஆகிய நாடுகளைக் கண்காணிக்க ஆப்பிரிக்காவின் கிழக்கு முனையில் ஏற்கனவே 1,800 அமெரிக்கச் சிப்பாய்களோடு இராணுவத்தளம் அமைத்து இயக்கி வரும் அமெரிக்கா, தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டம் முழுவதிலும் தனது ஆதிக்கத்தை விரிவாக்க, ""ஆப்ரிகாம்'' என்ற பெயரில் புதிய படை அணியொன்றையே உருவாக்கியிருக்கிறது. ஆப்பிரிக்காவின் எண்ணெய் வளத்தையும்; வைரம், யுரேனியம் போன்ற மூல வளங்களையும் கைப்பற்றிக் கொள்வதுதான், அமெரிக்க மேலாதிக்கத்தின் நோக்கம்.


சோமாலியாவில் இருந்து எத்தியோப்பியப் படைகள் விலகிய பிறகு, அந்நாட்டில் மீண்டும் இஸ்லாமிய ஐக்கியக் கவுன்சிலின் ஆட்சி அமைந்துள்ளது. எனினும், அமெரிக்காவின் இராணுவ முற்றுகையை எதிர்த்து ஆயுதந்தாங்கிப் போராடிய இஸ்லாமிய ஐக்கியக் கவுன்சிலின் ஆயுதப்படையான அல்ஷாபாபில் முஸ்லீம் தீவிரவாதிகளின் செல்வாக்கு ஓங்கிவிட்டதாகவும், அவ்வமைப்பு சோமாலியாவில் தனக்குச் செல்வாக்கு உள்ள பகுதிகளில் ஷாரியத் சட்டத்தை அமல்படுத்திவருவதாகவும் முதலாளித்துவப் பத்திரிக்கைகள் புலம்புகின்றன. இப்போக்குக் கவலைக்குரிய விசயம்தான் என்றாலும், வினை விதைத்துவிட்டு தினை அறுக்க அமெரிக்க ஆதரவாளர்கள் ஆசைப்படலாமா?

Saturday 10 April 2010

வீடு கட்டும் முறை

வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படை என்ன?




வாஸ்து அறிவியல் பூர்வமானது. சூரிய‌க் கதிர், காற்று ஆகியவை வீட்டிற்குள் நுழையக் கூடிய தன்மை, ஆற்றல் ஆகியவற்றை நெறிப்படுத்துதலே வாஸ்து சாஸ்திரத்தின் குறிக்கோள்.

இயற்கையின் அபரிமிதமான ஆற்றலை, சக்தியை மனித வளர்ச்சிக்கு‌ம், ஆரோக்கியத்திற்கு‌ம் முறை‌ப்படு‌த்‌தி‌ப் பயன்படுத்துவதே வாஸ்து.

நவக்கிரகம் என்று அழை‌ப்பது போல நாம் வாழும் வீட்டையும் கிரகம் என்று கூறுவார்கள். அதனா‌ல்தா‌ன் புதுமனை‌யி‌ல் குடியேறுவதையு‌ம் கிரகப்பிரவேசம் என்கிறோம்.

எங்கு சென்று வ‌ந்தாலும் ஓய்வெடுப்பதும், வாழ்வதும் வீட்டில்தான். எனவே வீட்டில் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் கதிர் வீச்சுக்க‌‌ள் நம்மை தாக்காமல் அவற்றை நம் வளர்ச்சிக்கு பயன்படுத்தும் கலையே வாஸ்து சாஸ்திரக் கலையாகும். இது ஆயக் கலைகள் 64ல் ஒன்றான ஜோதிடக் கலையில் ஒரு பிரிவாகும்.

நெருப்பு பஞ்ச பூதங்களில் ஒன்றாகும். அதனை வீட்டின் தென் கிழக்கு மூலையில் வைத்து பயன்படுத்தினோம் என்றால் ஆக்கப்பூர்வமான பலன்கள் உண்டாகும். தென்கிழக்கு மூலையில் சமையல் அறை அமை‌த்து, கிழக்கு அல்லது மேற்கு நோக்கி சமைத்தால் அந்த உணவு அதிக சுவை தரும். வீணாகாது. எளிதில் கெடாது. சமைத்துக் கொண்டிருக்கும்போதே ஸ்டவ் வெடிப்பது, வெந்நீர் காலில் கொட்டிக் கொள்வது போன்ற அசம்பாவிதங்களு‌ம் ஏ‌ற்படாது.

ஜோதிட சாஸ்திரத்தில் தென் கிழக்கு மூலைக்கான கிரகம் சுக்கிரனாகும். சுக்கிரன் ஒருவருடைய ஜாதகத்தில் சுப‌த் தன்மை பெறாமல், பாவ கிரக சேர்க்கை‌யி‌ல் அ‌ல்லது வீச்சில் அமைந்திருக்குமானால் அவர்களுக்கு சமையலறை அமையும் திசை மாறுபடும்.

அது அவருடைய ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்பை வைத்து முடிவு செய்ய வேண்டும். எனவே வாஸ்துவை அவரவர்களின் ஜாதகத்துடன் இணைத்து நடைமுறைப்படுத்தும்போதுதா‌ன் முழு‌ப் பலனை அடைய முடியும்.

சமையலறை‌க்கு கூ‌றியைத‌ப் போல ஒ‌வ்வொரு ‌விடய‌த்‌திலு‌ம் ஒருவருடைய மனை‌‌க்கார‌ரி‌ன் ஜாதக‌த்‌தி‌ன் அடி‌ப்படை‌‌யிலேயே வா‌ஸ்து சா‌ஸ்‌திர‌த்தை கையாள வே‌ண்டு‌ம். அது மு‌க்‌கியமானது.,.,.,.,.,.,.,.,.,.,.,.,..,.,.,.,..,.,..,.,.,


வீட்டின் எந்தத் திசையில் காலியிடம் இருக்கலாம்?


வீட்டில் குறிப்பிட்ட திசையில் காலியிடம் இருக்கக் கூடாது என்று சிலர் கூறுகிறார்கள்? ஆனால் வேறு சிலர் குறிப்பிட்ட திசையில் இடம் காலியாக இருந்தால்தான் வீடு சுபிட்சமாக இருக்கும் என்று அறிவுறுத்துகின்றனர்? வீட்டில் காலியிடம் இருக்கலாமா? இருக்கக் கூடாதா?

பதில்: பொதுவாக வடகிழக்கு எனப்படும் ஈசானிய மூலையில் காலியிடம் இருக்கலாம். அதில் தவறில்லை. அதற்கடுத்தபடியாக, வடமேற்கு திசையை ஓரளவு காலியாக வைக்கலாம். ஆனால் முழுமையாக காலியாக விடக்கூடாது.

தென் திசை எப்போதுமே அதிக சுமைகளுடன் முழுமையாக இருப்பது நல்லது. ஆனால் வடக்கு திசையையும் ஓரளவு காலியாக இருக்கலாம். வடமேற்கு அறையில் வடகிழக்கு பகுதியை காலியாக வைத்துக் கொள்வதும் நல்ல பலனை அளிக்கும்




வாஸ்து சாஸ்திரத்திப்படி ஜன்னல்களுக்கான முக்கியத்துவம் குறித்துக் கூறுங்கள்?


வீட்டின் வடக்குப் பகுதியில் ஜன்னல்கள் வைப்பது அவசியம். வடக்கு, வடகிழக்கு, வடமேற்கு ஆகிய திசைகள் ஜன்னல் வைக்க ஏற்றவை. குறிப்பாக, ஈசானிய மூலையில் ஜன்னல் வைத்தாக வேண்டும் என வாஸ்து கூறுகிறது. அப்போதுதான் அந்த வீடு விருத்தி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் அறிவியல் ரீதியாகப் பார்த்தால் வடகிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளில்தான் பிராண வாயு அதிகமாகக் கிடைக்கிறது. எனவே வடகிழக்கு பகுதியில் ஜன்னல் வைத்தால் அதன் காரணமாக வீட்டில் பிராண வாயுவின் விகிதம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களும் ஆரோக்கியமாக இருப்பர்.

இதன் காரணமாகவே பூஜை அறை, பெரியவர்கள் தங்கும் அறை உள்ளிட்டவற்றை ஈசானிய மூலையில் பழங்காலத்தில் அமைத்தனர்.

சில வீடுகளில் ஆண் சந்ததியே இல்லாமல் இருப்பதும் உண்டு. அதற்கு அந்த வீட்டின் ஈசானிய மூலையை அடைத்து வைத்திருப்பதே முதன்மைக் காரணமாக இருக்கிறது. இதன் காரணமாக வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுவதும் உண்டு.

தென்மேற்கு திசையில் திறப்பு இல்லாமல் இருப்பது நல்லது. காரணம் தென்மேற்கு திசையை குபேர மூலை (நைருதி) என்று வாஸ்து கூறுகிறது. அங்கு திறப்புகள் (ஜன்னல்கள்) இல்லாமல் இருந்தால் சிறப்பாக இருக்கும்.

கேள்வி: ஒரு வீட்டில் வைக்கப்படும் ஜன்னல்களின் எண்ணிக்கை எத்தனையாக இருக்க வேண்டும்?

பொதுவாக ஜன்னல்களுக்கு என்று எண்ணிக்கை எதையும் வாஸ்து சாஸ்திரம் தனியாக வகுக்கவில்லை. பழங்காலத்தில் எந்த விடயத்திலும் ஒற்றைப்படையை பயன்படுத்தியதால் வீடுகளில் வைக்கப்படும் ஜன்னல்களின் எண்ணிக்கைக்கும் அதனையே மக்கள் பின்பற்றினர். எனவே எண்ணிக்கையைப் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,,.,.,.,,...,.,.






வீட்டு வாயில் கதவுக்கு அருகிலேயே பூஜை அறையை வைக்கலாமா?


பொதுவாகவே வீட்டின் வாயில் கதவைத் திறக்கும் போது மெல்லிய அதிர்வு உருவாகும். இது மனிதர்களால் உணர முடியாத அளவு இருக்கும். ஆனால் சுவாமி படங்களை வைக்கும் இடம் நிலையானதாக இருக்க வேண்டும் என்பதே ஐதீகம். அந்த இடம் அதிர்வுகள் ஏற்படாதவாறு இருத்தல் அவசியம்.

எனவேதான் தலைவாசலுக்கு அருகே பூஜையறை அமைப்பதை தவிர்க்க வேண்டும் என முன்னோர்கள் வலியுறுத்தினர். இதேபோல் தலைவாசல் வழியாகவே அனைத்து தரப்பினரும் வந்து செல்வார்கள். வீட்டிற்கு வரும் உறவினர்கள் நல்மனது படைத்தவர்கள் என்றாலும் அவர்கள் சென்று வரும் இடம் (இறுதிச் சடங்கு) சிறப்பானதாக இருக்காது.

இதேபோல் அக்கம்பக்கத்தில் இருந்து வீட்டு விலக்கு பெற்ற பெண்களும் தலைவாசல் வழியாகவே வீட்டில் நுழைய நேரிடும். எனவேதான், பூஜையறையை தலைவாசலுக்கு அருகே வைக்கக் கூடாது என்று முன்னோர்கள் வலியுறுத்தினர்.

பழங்காலத்தில் ஈசானியம் அல்லது வடமேற்கு பகுதியில் பூஜையறை அமைத்தனர். அந்த திசையில் பூஜையறை அமைப்பது வாஸ்துப்படி நல்லது

Thursday 8 April 2010

இந்திய இராணுவ ரகசியங்களை சீனா திருடியுள்ளது

இந்தியாவின் ஏவுகணை தொழில்நுட்பம் உள்ளிட்ட ராணுவ ரகசியங்களை சீனா திருடியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்திய ஏவுகணையின் பழைய தொழில்நுட்பம் மட்டுமல்லாது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நடமாடும் வாகனத்தில் இருந்து செலுத்தப்படும் ஏவுகணை தொழில்நுட்பம் வரை அவர்கள் திருடிவிட்டார்கள் என்று அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்து உளவு நிபுணர்கள் கூறி,​​ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.​

கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அமெரிக்க மற்றும் கனடா உளவு நிபுணர்கள்,​​ கணிப்பொறி மூலம் ஒரு நாட்டின் ரகசியங்களை பிற நாடுகள் திருடுவது குறித்து உளவு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.​ அவர்கள் கடந்த 6 மாதம் நடத்திய உளவு நடவடிக்கையில் இந்தியாவின் இராணுவ ரகசியங்களை சீனா திருடியது அம்பலமானது.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பது:​ இந்தியாவின் இராணுவ ரகசியங்களை மட்டுமல்லாது அந்நாட்டின் வெளிநாட்டு உறவு ரகசியங்களையும் சீனா திருடியுள்ளது.​ இந்த ரகசியத் தகவல்கள் அனைத்தையும் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சக அலுவலகம்,​​ தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் உலகம் முழுவதும் இந்திய தூதரகங்களில் உள்ள கணிப்பொறியில் இருந்து திருடப்பட்டுள்ளன.

அந்தவகையில் பெல்ஜியம்,​​ செர்பியா,​​ ஜெர்மனி,​​ இத்தாலி,​​ குவைத்,​​ அமெரிக்கா,​​ ஜிம்பாப்வே,​​ சைப்ரஸ்,​​ பிரிட்டன் ஆகிய நாடுகளின் இந்திய தூதரகங்களில் உள்ள கணிப்பொறிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தகவல்கள் திருடப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானின் இந்திய தூதரக அலுவலகத்தில் விசாவுக்கு விண்ணப்பிக்கப்பட்டிருந்த தகவல்களும் திருடப்பட்டுள்ளன. நாகாலாந்து,​​ திரிபுரா,​​ மணிப்பூர்,​​ அசாம் ஆகிய மாநிலங்களில் பாதுகாப்பு சூழல் குறித்து ஆய்வு செய்து பாதுகாக்கப்பட்டுவந்த தகவல்கள் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தின் கணிப்பொறியில் இருந்து திருடப்பட்டுள்ளது.

ஒரு நாட்டின் இராணுவ ரகசியங்களை பிற நாடுகள் திருடுவதென்பது எளிதான விஷயமல்ல.​ அதனால் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இந்திய இராணுவ ரகசியங்களை சீனா எப்படி திருடியது என்பது தெரியவில்லை.​ இதற்கு இந்தியர்களே உடந்தையாக இருந்தார்களா என்பதும் தெரியவில்லை.​​ தவிர,​​ இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவின் அலுவலக கணிப்பொறியில் இருந்தும் ரகசியத் தகவல்களை சீனா திருடியுள்ளது.​

இந்த தகவல் எப்படி திருடப்பட்டது என்பதும் மர்மமாக உள்ளது.​ இதை கண்டறிய நாங்கள் பல்வேறு வழிகளில் தீவிரமாக முயற்சித்தோம்.​ ஆனால் எங்களால் இறுதிவரை கண்டறிய முடியவில்லை என்று அந்த அறிக்கையில் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர

Wednesday 7 April 2010

சாப்பிட 12 விதிமுறைகள்


1.நின்று கொண்டு சாப்பிடும் பழக்கதை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க.


2.எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று சாப்பிடுங்கள்.


3.தொன தொனனு பேசிக் கொண்டு சாப்பிடவேண்டாம்.


4.சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதிங்க.


5.அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்.


6.பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்.


7.பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்.


8.ஆரோக்கிய உணவுகளை சிலர் பிடிக்காமல் வைத்துவிடுவாங்க.. அப்படிசெய்யாமல் சாப்பிட பழகவும்.


9.இரவு உணவில் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்


10.சாப்பாட்டுக்கு பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்.


11.சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும்.


12.சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்காதிங்க..
தாமு
நிர்வாகக் குழுவினர்





.








.சாப்பாடுக்கு பின்பு பழம் வேண்டாமே:





இன்று விருந்து பலமா? ஒரு பழம் சாப்பிடுங்க என்று சொல்லுவாங்க.
நம்மூர் பழக்கமே இது தானே.. ஆனால் இது பெரிய தவறு.
அப்ப பழங்களை எப்ப சாப்பிடனும் என்று கேட்கிரிங்களா?


சாப்பாட்டுக்கு முன்பு தான் பழங்களை சாப்பிடனும்.. அதுக்கான காரனம் இது தான். இதனை நான் ஒரு நூலில் பாடித்து தெரிந்துக்கொண்டேன்.


1.வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளி கொண்டுவரும். இதன் பயனாக உடல் எடை குறையும். உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்..



2.சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரமாகும் உணவுகள் செரிக்க நேரமாகும். உணவுகள் செரிக்காத நிலையில் அமிலமாகவும், செரித்த பழம் மற்றும் ஜீரணமாக உதவும் அமிலங்கள் சேர்ந்து வயிற்றை கலக்க ஆரம்பிக்கும். வயிற்றுக்குள்ளே உணவு கெட்டுப் போகும். இதனால் தான் உணவுக்கு முன்பு சாப்பிடனும்..



3.பழஜீஸ் சாப்பிடுவதை விட பழமாக சாப்பிடவும். அப்படி சாப்பிடுவதால் நார்சத்து நிறைய கிடைக்கும் சத்தும் முழுமையாக கிடைக்கும்.

பார்க்க படிக்க சின்ன விஷயமாக இருந்தாலும் இது உடலுக்குள் சென்று செய்கின்ற வேலை மிக பெரியது. ஆகையால் இனி யோசித்து சாப்பிடுங்கள்.
தாமு
நிர்வாகக் குழுவினர்








.

Tuesday 6 April 2010

இரவீந்திரநாத் தாகூர்




இரவீந்தரநாத் தாகூர் (வங்காள மொழி: রবীন্দ্রনাথ ঠাকুর, மே 7, 1861- ஆகஸ்ட் 7, 1941) புகழ் பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார். கீதாஞ்சலி என்ற கவிதை நூலுக்காக இவர் 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார். இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவர். இவர் மக்களால் அன்பாக குருதேவ் என்று அழைக்கப்பட்டார். இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக உள்ளது.

கல்கத்தாவைச் சேர்ந்த பிராலிப் பிராமணரான இவர் தனது எட்டாவது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கினார். பதினாறாவது வயதில் இவரது முதலாவது குறிப்பிடத்தக்க கவிதையை பானுசிங்கோ (சூரிய சிங்கம்) என்னும் புனை பெயரில் வெளியிட்டார். 1877 ஆம் ஆண்டில் இவரது முதல் சிறுகதையும், நாடகமும் வெளிவந்தன. தாகூர் பிரித்தானிய அரசை எதிர்த்து நாட்டின் விடுதலையை ஆதரித்தார். இவரது முயற்சிகள் இவர் எழுதிய ஏராளமான எழுத்துக்கள் மூலமும், விசுவபாரதி பல்கலைக்கழகம் என்னும் அவர் நிறுவிய கல்வி நிறுவனத்தின் மூலமும் இன்றும் வாழ்ந்துகொண்சிருக்கின்றன.


கடுமையான செந்நெறி வடிவங்களை விலக்கியதன் மூலம் தாகூர் வங்காலக் கலையை நவீனமயப்படுத்தினார். இவரது புதினங்கள், கதைகள், பாடல்கள், நாட்டிய நாடகங்கள், கட்டுரைகள் என்பன அரசியல் தலைப்புக்களையும், தனிப்பட்ட விடயங்களையும் தழுவியிருந்தன. கீதாஞ்சலி, கோரா, காரே பைரே ஆகியவை மிகவும் அறியப்பட்ட அவரது ஆக்கங்கள் ஆகும். இவரது பாடல்கள், சிறுகதைகள், புதினங்கள் ஆகியவை அவற்றின் உணர்ச்சிகளுக்காகவும், மக்கள் மொழிநடைக்காகவும், இயல்புத்தன்மைக்காகவும் பெரிதும் புகழப்பட்டன.

இவர் பிறந்த வம்சத்தில் பூமகளும் நாமகளும் கூடியே வாழ்ந்தனர். செல்வமும் கல்வியும் இலங்கும் ஒப்பற்ற வமிசம். இவருடைய சகோதரர்களில் ஒருவரான துவேந்திரநாத் உபநிடதங்களைக் கற்ற பண்டிதர், இன்னொருவர் ஓவியக் கலையில் புகழ் பெற்றவர், ஒரு சகோதரர் அரசாங்கத்தில் கலெக்டெராகப் பணியாற்றினார். இவருடைய சகோதரியின் புத்திரர்கள் அபினீந்திர நாதரும், சுகனேந்திர நாதரும் சித்திரக் கலையிலும் சிற்பக் கலையிலும் நாடெங்கும் புகழ் பெற்றவர்கள். இத்தகைய குடும்பத்தில் பிறந்த இரவீந்திரர் இசை, கலை, காவியம் ஆகிய துறைகளில் மிகவும் தேர்ச்சியுடையவர்.




பொருளடக்கம் [மறை]
1 தொடக்க காலம் (1861-1901)
2 சாந்திநிகேதன்
3 நோபெல் பரிசு
4 பயணங்கள்
5 இறப்பு
6 வெளி இணைப்புகள்

[தொகு] தொடக்க காலம் (1861-1901)

Tagore in 1879, when he was studying in England.
Tagore and his wife Mrinalini Devi in 1883.இரவீந்திரநாத் தாகூர் தேவேந்திரநாத்தின் புதல்வர். இவர் 7 மே 1861(1861-05-09) ஆம் ஆண்டு கல்கத்தாவில் இருந்த ஜோராசாங்கோ மாளிகையில் பிறந்தார். இவர் தாயார் பெயர் சாரதா தேவி. இவரது பெற்றோருக்குப் பிறந்து உயிர் தப்பிய 13 பிள்ளைகளில் இவர் கடைசிப் பிள்ளை. இவரது இளம் வயதிலேயே தாயார் இறந்து விட்டதாலும் தந்தையார் அடிக்கடி பயணங்களை மேற்கொண்டிருந்ததாலும் இவர் பெரும்பாலும் வேலைக்காரரின் கைகளிலேயே வளர்ந்தார். இரவீந்திரருக்குப் பள்ளியில் உபாத்தியாயரின் உரையில் மனம் நாடவில்லை. இவர், பள்ளிக்குச் செல்வதைத் துன்பமே எனக் கருதினார். இவர் மனம் வங்காள பாஷையிலும், சமசுக்கிருத பாஷையிலும் லயித்து நின்றது. இவரது பதினோராவது வயதில் பூணூல் சடங்குக்குப் பின்னர், 14 பெப்ரவரி 1873 ஆம் ஆண்டு இவரது தகப்பனாருடன் கல்கத்தாவை விட்டுப் புறப்பட்டுப் பல மாதங்கள் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இவரது தந்தையாரின் சாந்திநிகேதன் தோட்டத்துக்கும் சென்றனர். பின்னர் இமயமலைப் பகுதியான டால்கூசிக்குச் செல்வதற்கு முன்னர் அம்ரித்சாரிலும் இவர்கள் தங்கினர். அங்கே அவர் பலருடைய வரலாறுகளை வாசித்ததுடன், வீட்டிலேயே வரலாறு, வானியல், அறிவியல், சமசுக்கிருதம் ஆகிய பாடங்களைப் படித்தார். காளிதாசரின் கவிதைகளையும் கற்றார்.


தான் ஒரு பாரிஸ்டர் (Barrister) ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் Brighton, Londonல் ஒரு பள்ளியில் 1878ல் சேர்ந்தார். பிறகு லண்டன் சர்வகலாசாலையில் படித்தார். ஆனால் சேக்சுப்பியரினதும் அவர் போன்ற பிறரினதும் ஆக்கங்களை ஆராய்வதிலேயே ஆர்வம் காட்டியதால் பட்டம் பெறாமலேயே 1880ல் வங்காளத்திற்குத் திரும்பிவிட்டார். 1883ஆம் வருடம் டிசம்பர் 9ஆம் தேதி மிருனாலி தேவி என்னும் 10 வயதுப் பெண்ணை மணந்தார். அவர்களுக்கு ஐந்து குழைந்தைகள் பிறந்தன. ஆனால் இரண்டு குழைந்தைகள் வாலிபப் பருவம் அடையுமுன்பே இறந்து விட்டனர். 1890 ஆம் ஆண்டில் தாகூர் இன்றைய வங்காளதேசத்தின் பகுதியாக உள்ள சிலைடாகா என்னும் இடத்தில் இருந்த குடும்பத்தின் பெரிய பண்ணையை நிர்வாகம் செய்யத் தொடங்கினார். 1898 ஆம் ஆண்டில் இவரது மனைவியும் பிள்ளைகளும் அங்கு சென்று இவருடன் இணைந்து கொண்டனர். 1890 ஆம் ஆண்டில் இவரது பெயர் பெற்ற ஆக்கங்களில் ஒன்றான மானஸ்த் என்னும் கவிதையை வெளியிட்டார். 1895ஆம் ஆண்டுக்குப் பிறகு இவர் வாழ்க்கையில் பேரும், புகழும், பட்டமும், இன்னலும், இகழ்ச்சியும் ஒரு சேரக் கலந்தன எனலாம். அக்காலத்திலிருந்த பாரத மக்களின் நிலமையைக் கண்டு பாரத தேவியின் அருந்தவப் புதல்வராகிய இரவீந்திர நாதர் மனம் உளைந்து, தேசத் தொண்டில் இறங்கினார்.

[தொகு] சாந்திநிகேதன்

Shot by John Rothenstein, Hampstead, 1912
Tsinghua University, 19241901ல் தாகூர் ஷிலைடஹாவிலிருந்து (Shilaidaha) சாந்தினிகேதனுக்குக் குடியேறினார்.அங்கு அவர் ஒரு ஆச்சிரமத்தை நிறுவினார். அது ஒரு பிரர்த்தனைக் கூடம், பள்ளிக்கூடம், புத்தக சாலையுடன் மரங்களும், செடிகளும் கொண்ட பூஞ்சோலையாக மிளிர்ந்தது. இங்கே தாகூரின் மனைவியும் இரண்டு குழந்தைகளும் இறந்து போயினர். இவரது தந்தையாரும் 1905 ஆம் ஆண்டு சனவரி 19 ஆம் தேதி காலமானார். இதனைத் தொடர்ந்து தந்தையார் மூலமான சொத்துரிமை மூலம் இவருக்கு ஒவ்வொரு மாதமும் வருமானம் கிடைத்தது. திரிபுராவின் மகாராசாவிடம் இருந்தும் இவருக்கு ஒரு தொகை வருமானமாக வந்தது. அத்துடன், குடும்பத்தின் நகைகள், பூரியில் இருந்த கடற்கரையோர மாளிகை என்பவற்றை விற்றதன் மூலமும் இவர் வருமானம் பெற்றார். இது தவிர இவரது ஆக்கங்களுக்கான உரிமமாகவும் 2,000 ரூபா கிடைத்தது.

இக் காலத்தில் இவரது ஆக்கங்கள் வாங்காளத்திலும், பிர நாடுகளிலும் புகழ் பெறத் தொடங்கின. இவர் தனது நைவேத்ய (1901), கேயா (1906) போன்ற ஆக்கங்களையும் வெளியிட்டார்.

[தொகு] நோபெல் பரிசு

Tagore (at right, on the dais) hosts மோகன்தாசு கரம்சந்த் காந்தி and wife Kasturba at Santiniketan in 1940.1913ல் அவர் நோபெல் பரிசு இலக்கியத்திற்காக (for Literature) தன்னுடைய படைப்புகளுக்காகப் பெற்றார். 1915ல் பிரிட்டிஷ் அரசாங்கம் தாகூருக்கு Knighthood பட்டம் அளித்தது.

1921ஆம் ஆண்டு சாந்தினிகேதனுக்கு அருகில் உள்ள சுருல் என்ற கிராமத்தில் ஸ்ரீநிகேதன் (Abode of Peace) என்ற நிறுவனத்தை ஆம்பித்தார்.

1905ஆம் ஆண்டில் "வங்காளத்தைப் பிரிப்போம்" என்று அரசாங்கம் தீர்மானிக்க வங்காளம் முழுவதும் கொதித்தெழுந்தது. இரவீந்திர நாதரும் "அடிமை ஒழிக" என கர்ஜித்து எழுந்தார்; எண்ணிறந்த கூட்டங்களில் இடியென வெகுண்டு பேசினார். இவர் செய்த பிரசாரங்களில் உள்ள வீராவேசமும், தேசாபிமானமும், தன் நாட்டு மக்களிடத்தில் உள்ள தயையும் வேறெந்த மொழியிலும் நான் கண்டதில்லை" என்று இ.ஜே. தாம்சன் என்னும் ஆங்கிலேயர் கூறுகின்றார்..

இக்காலத்தில்தான் இரவீந்திர நாதர், தம் நாட்டு மக்களிடமிருந்த வறுமையையும், அடிமையையும் கண்டதுடன் அவர்கள் அடைந்திருந்த தாழ் நிலையையும் கண்டார். கல்வி அறிவே இல்லாதோர் எண்ணிறந்தவர். மூட நம்பிக்கையும், குறுகிய நோக்கமும், சுயநலமும், சிறு மனமும் எங்கும் திகழ்வதைக் கண்டார். "இந்திய மக்களுக்கு இக்கதியும் வந்ததோ!" என்று துன்பத்தில் ஆழ்ந்தார். தங்களிடமிருந்த இப்பெருங்குறைகளை நீக்கினாலன்றி இவர்களால் அடையத் தக்கது ஒன்றுமே இல்லை என்று முடிவு செய்தார். இனி இங்கு இருப்பதில் பயனில்லை என்று தேசிய இயக்கங்கள் யாவற்றிலுமிருந்து திடீரென்று விலகினார்.

1919ஆம் ஆண்டில் பஞ்சாபிலுள்ள அமிர்தசரசில் நடந்த கோர சம்பவத்தைக் கேள்விப்பட்டதும் இரவீந்திர நாதர், தமக்கு ஆங்கிலேயரால் அளிக்கப்பட்ட "ஸர்" பட்டத்தைத் துறந்ததுடன், உள்ளன்பில்லாத வெளி நடப்பில் தமக்குப் பற்றில்லை என்பதையும் புலப்படுத்தி செவி தைக்கும்படி சுடுசொல் பகர்ந்திருக்கின்றார்.

1930ஆம் ஆண்டு ஜூன் மாதம் H.G. Wells அவர்களும் தாகூரும் ஜெனீவாவில் சந்தித்தனர். அன்று அவர்கள் பல விஷயங்கள் பற்றி உரையாடினார்கள். ஜூலை 14 1930 அன்று Dr. Mendel என்னும் நண்பர் மூலம் பிரசித்திபெற்ற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீனை அவர் இல்லத்தில் சந்தித்து உரையாடினார். இதன் பிறகு ஐன்ஸ்டீன் தாகூருடைய இல்லத்திற்கு வந்து அவருடன் உரையாடினார்.

இரவீந்திரர் தனது 8 வயதில் கவிதைகள் எழுத ஆரம்பித்தார் அவைகளை பானுஷங்கோ (sun lion) என்ற புனைப்பெயரில் 1877ல் வெளியிட்டார். 16வது வயதில் சிறு கதைகளும், நாடகங்களும் எழுத ஆரம்பித்தார். தன்னுடைய 20வது வயதில் தன்னுடைய முதல் நாடகத்தை, "வால்மீகி பிரபிதா" (The Genius of Valmiki) எழுதினார். அவருடைய 60 வயதில் டிராயிங் மற்றும் பெயிண்டிங் செய்ய ஆரம்பித்தார். தெற்கு பிரான்ஸில் சந்தித்த ஒரு கலைஞரின் ஊக்குவிப்பினால் தன்னுடைய படைப்புகளை வைத்துப் பொருட்காட்சி நடத்தினார்.

1878 முதல் 1932 முடிய இரவீந்திரர் ஐந்து கண்டங்கலில் முப்பத்து ஒரு தேசங்களுக்கு சென்றிருக்கிரார். எழுத்தாளாராக, அநேக புத்தகங்கள் எழுதியுள்ளார். முதலில் தன் தாய் மொழியான வங்காளத்தில் தான் எழுதினார். அவருடைய கீதாஞ்சலிக்குக் கிடைத்த வரவேற்பை பார்த்ததும், தான் எற்கனவே வங்காளியில் எழுதியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 2000த்திற்கும் மேலாகப் பாடல்கள் எழுதி மெட்டும் போட்டுள்ளார். அதில் இரண்டு பாடல்கள் இந்தியா, மற்றும் பங்களா தேசத்தின் தேசிய கீதமாக ஆயின.

[தொகு] பயணங்கள்
1878க்கும் 1932க்கும் இடையில் தாகூர் ஐந்து கண்டங்களில் உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சென்றுள்ளார். இவற்றுட் பல பயணங்கள் இவரது ஆக்கங்களை இந்தியரல்லாதவர்களுக்கு அறிமுகப் படுத்துவதிலும், இவரது அரசியல் எண்னங்களைப் பரப்புவதற்கும் முக்கிய பங்காற்றின. 1912 ஆம் ஆண்டில் தன்னுடைய ஆக்கங்கள் சிலவற்றின் மொழிபெயர்ப்புகளோடு தாகூர் இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கே இவரது ஆக்கங்கள் சார்லசு எப். ஆன்ட்ரூசு, ஆங்கில-ஐரியக் கவிஞரான வில்லியம் பட்லர் யீட்சு, எசுரா பவுண்ட், ராபர்ட் பிரிட்ஜசு, ஏர்னஸ்ட் ரைசு, தாமசு இசுட்டர்சு மூர் மற்றும் பலரைக் கவர்ந்தன. யீட்சு கீதாஞ்சலியின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கான முகவுரையை எழுதினார். ஆன்ட்ரூசு சாந்திநிகேதனில் இணைந்துகொண்டார். 1910 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி தாகூர் ஐக்கிய அமெரிக்காவிலும் ஐக்கிய இராச்சியத்திலும் பயணம் ஒன்றைத் தொடங்கினார்.


ஐக்கிய இராச்சியத்தில் அவர் இசுட்டபோர்ட்சயரில் உள்ள பட்டர்ட்டன் என்னும் இடத்தில் ஆன்ட்ரூசின் மதபோதகர்களான நண்பர்களுடன் தங்கினார். 1916 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதியில் இருந்து 1917 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை விரிவுரைகள் வழங்குவதற்காக ஜப்பானிலும் அமெரிக்காவிலும் பயணம் செய்தார்.


இந்தியாவுக்குத் திரும்பிய சில காலத்தின்பின், 63 வயதான தாகூர் பெரு நாட்டு அரசாங்கம் விடுத்த அழைப்பை ஏற்று அந்நாட்டுக்குச் சென்றார். அவர் அங்கிருந்து மெக்சிக்கோவுக்கும் சென்றார் இரு நாட்டு அரசுகளும் இவரது வருகையின் நினைவாக சாந்திநிகேதனில் இருந்த பள்ளிக்கு 100,000 அமெரிக்க டாலர்களை வழங்கின.


ஆர்சென்டீனாவில் உள்ள புவனசு அயர்சுக்கு வந்த தாகூர் ஒரு கிழமையின் பின் நோய்வாய்ப்பட்டார். அதனால் அங்கு சில காலம் தங்கிய பின் அவர் சனவரி 1925 ஆம் ஆண்டில் இந்தியாவுக்குத் திரும்பினார். 1926 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதி தாகூர் இத்தாலியில் உள்ள நேப்பிள்சை அடைந்தார். அடுத்த நாள் அவர் ரோம் நகரில் பெனிட்டோ முசோலினியைச் சந்தித்தார். 1926 ஆம் ஆண்டு யூலை 20 ஆம் தேதி தாகூர் முசோலினியைக் கண்டித்ததுடன் அவர்களுடைய உறவு முறிந்துபோனது.

1927 ஆம் ஆண்டு யூலை 14 ஆம் தேதி தாகூரும் அவரது தோழர்கள் இருவரும் தென்கிழக்கு ஆசியாவில் பயணத்தைத் தொடங்கினர். அவர்கள், பாலி, ஜாவா, கோலாலம்பூர், மலாக்கா, பீனாங்கு, சியாம், சிங்கப்பூர் ஆகிய இடங்களுக்குச் சென்றனர். தாகூரின் இந்தப் பயணங்கள் குறித்த தகவல்கள் யாத்ரி என்னும் நூலாகத் தொகுக்கப்பட்டது.

[தொகு] இறப்பு
நீண்ட காலம் நோய்வாய்பட்டு 7 ஆம் தேதி ஆக்ஸ்ட் 1941 ஆம் வருடம் உயிர் நீத்தார்.