Saturday 1 May 2010

சமச்சீர் கல்வி - ஒரு உரத்த சிந்தனை!

சமச்சீர் கல்வி என்பதை பாடத்திட்டங்களுக்கு இடையே உள்ள மேடுபள்ளங்களை நிரவுவது என்ற முறையில் கொச்சைப் படுத்திவிடக்கூடாது. சமூக இடைவெளி களால் பொதுக்கல்வியில் இடைவெளிகள் உருவாவதைத் தவிர்ப்பதுதான் நமது நோக்கமாகும். சாதி, வர்க்கம், வட்டாரம் போன்ற வற்றாலான சமூக வேறுபாடுகள், சமூக இடைவெளிகளுக்கு சாதகமான கல்விமுறை, பாடத்திட்டம் கைவிடப்படவேண்டும். மழலையர் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளிவரை, 12 ஆண்டுகள் அளிக்கப்படுகின்ற கல்வி, இந்த இடைவெளிகளைக் குறைப்பதற்கும் அகற்றுவதற்குமான வாய்ப்பாக மாற வேண்டும். கல்வி துவங்கும்போது

மழலையர் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளிவரை, 12 ஆண்டுகள் அளிக்கப்படுகின்ற கல்வி, இந்த இடைவெளிகளைக் குறைப்பதற்கும் அகற்றுவதற்குமான வாய்ப்பாக மாற வேண்டும்.


மாணவர்கள் சமமாக, சமத்துவமாக இல்லை. குடும்பப் பின்னணி, வறுமை, சாதி, வாழ்விடம் கல்விக்கான வசதி வாய்ப்புகள், ஆசிரியர்கள் எண்ணிக்கை, திறமை, அக்கறை, சமூகப் பொறுப்பு, பணிப்பொறுப்பு போன்றவற்றால் சமத்துவமற்ற மாணவர்களாகத்தான் கல்வியின் துவக்கம் இருக்கிறது. நமது கவலையெல்லாம் 12 ஆண்டுகள் பள்ளிப்படிப்பை நிறைவு செய்கின்ற வேளையில், இம்மாணவர்களுக்கிடையே கல்வித்தரம், திறன், வாய்ப்பு, வாய்ப்புகளைப் பயன்படுத்தும் விழிப்புணர்வு ஆற்றல் ஆகியவற்றில் நியாயமான சமத்துவத்தை நடைமுறையில் உறுதி செய்வதாக இருக்க வேண்டும். இந்த அணுகுமுறையைத்தான் சமச்சீர்க்கல்வி என்பதில் எதிர்பார்க்கிறோம்.

கட்டுரையாளர்
அ.கருணானந்தன், வரலாற்றுத்துறைத் தலைவர் (ஓய்வு), விவேகனந்தர் கல்லூரி, சென்னை



ஒரேவிதமான பாடத்திட்டம் என்பது மட்டுமே இதற்குப் பயன்படுகிறதா என்பதுதான் நமது அக்கறையாக இருக்க வேண்டும். பன்முகத்தன்மை கொண்ட நமது நாட்டில் வெவ்வேறு விதமான கல்வி அமைப்புகளை முற்றிலுமாக மாற்றிவிட முடியும் என நம்ப முடியாது. இன்றுள்ள பல்வேறு பள்ளிக்கல்வி அமைப்புகள், நிறுவனங்கள் சமூக ஏற்றத் தாழ்வுகளின் அடிப்படையில், சமூக, பொருளாதார, பண்பாட்டு ஏற்றத்தாழ்வுகளை, இடைவெளிகளை அதிகப்படுத்துவதாக அனுபவபூர்வமாக அறிந்துள்ளோம். அதனால்தான் சமூகப் பொறுப்புடையவர்கள், கல்வியாளர்கள், சமூக நீதி, சமூக ஒற்றுமை, ஒருமைப்பாடு, சமூக மாற்றம், சமூக முன்னேற்றம் ஆகியவற்றில் அக்கறையும் ஆர்வமும் உடையவர்கள் சமச்சீர் கல்வி முறையை வலியுறுத்தி வருகின்றனர்.

பொதுப்பாடத்திட்டம் ஒன்றின் மூலமாகவே சமச்சீர் கல்வியை கொண்டு வந்துவிட முடியும் என்ற நிலையிலான அணுகு முறை நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகும். equitable standard education ஏன் இன்று இல்லை? பாடத்திட்டத்தினால் மட்டும் தானா? சமத்துவமற்ற நிலையிலுள்ள மழ லையர், பொதுக்கல்வியில் நுழைந்து 10வது வரை படித்து வெளிவரும்போது கல்வியிலும், கல்வியினால் பெறும் அறிவு - விழிப்புணர்வு -ஆற்றல்- திறன்- பண்பு ஆகியவற்றிலும் சமநிலையை அடைந்தவர்களாக இருக்க வேண்டும். சமூக, சமய, வர்க்க இடைவெளி கள் பொதுக்கல்வியின் மூலமாக 10 அல்லது 12 ஆண்டுகளில் அகற்றப்பட்டிருக்க வேண்டும். நமது அரசின் நோக்கங்கள், திட்டங்கள் - முன்னுரிமைகள் - நிதி ஒதுக்கீடுகள் - அதிகாரிகள் -ஆசிரியர்கள் போன்றோரது அக்கறை, ஈடுபாடு ஆகியவையும் இதில் உள்ளடங்கி இருக்கின்றன.

சுவாமி விவேகானந்தர் கூறியது போன்று, பின்தங்கிய சூழலிலிருந்து வருகின்ற மழலையருக்கும், சிறுவருக்கும் அதிக ஆசிரியர், அதிக கவனம், ஆமாம் சமகவனமல்ல, செலுத்தப்படக்கூடிய அளவிற்கு பொதுக்கல்வி அமைய வேண்டும். இன்றும் தொடருகின்ற ஓராசிரியர், ஈராசிரியர், மூவாசிரியர் பள்ளிகள், சமச்சீர்க் கல்வி ஏற்றுக்கொண்டுவிட்ட நமது மாநிலத்தின் அவமானச் சின்னங்களாகும்.

சமச்சீர்கல்வி என்று வருகின்றபோது, காலிப்பணியிடங்களை நிரப்புவது மட்டுமே போதுமானதாகாது.


குறைந்தபட்சம் மாநிலம் முழுவதும் துவக்கப்பள்ளிகளில் வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் என்பதை இந்தக் கல்வியாண்டிற்குள் உறுதி செய்யாவிட்டால், மிகுந்த எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள இந்த அரசின் சமச்சீர் கல்வித்திட்டம், ஒரு கண்துடைப்பாகவும், மோசடியாகவும் மாறிவிடக்கூடும். சமச்சீர்கல்வி என்று வருகின்றபோது, காலிப்பணியிடங்களை நிரப்புவது மட்டுமே போதுமானதாகாது. நலிந்த பிரிவு மாணவர்கள்-மழலைச் சிறுவர்கள் பயிலும் கிராமப்புற, பின்தங்கிய பகுதிப்பள்ளிகளில் மாணவர் - ஆசிரியர் விகிதத்தை மேம்படுத்தி கூடுதல் ஆசிரியர்களை இந்தக் கல்வி ஆண்டின் இறுதிக்குள் முறையாக நியமித்திட வேண்டும். அதற்கான போதுமான நிதி ஒதுக்கீடும் அறிவிக்கப்படவேண்டும்.

சமச்சீர் கல்வியின் துவக்கம், பாடத்திட்டத்திலிருந்து துவங்குவது, அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் தருகிறது. சமச்சீர் கல்விக்கான ஒரு கல்வித்திட்டத்தை உருவாக்காமல், பொதுப்பாடத்திட்டம் என்பது வருத்தத்தைத் தருகிறது. கல்வித்திட்டம் (curriculam) என்பதை வகுத்த பின்னர் தான் அதன் ஒரு பகுதியான பாடத்திட்டம் (syllabus) பற்றி விவாதம் துவங்கியிருக்க வேண்டும்.

சமச்சீர் கல்வி என்பதை பாடத்திட்டம் என்பதாக சுருக்கிவிட்ட, கொச்சைப்படுத்திவிட்ட போக்கு, இந்திய சட்ட அமைப்பில் வழிகாட்டு நெறிகளில் வற்புறுத்தப்பட்ட ஒரு நியாயமான, முற்போக்கான சமத்துவ சமுதாய உருவாக்கத்திற்கு (egalitarian social order) எதிரான சதியாகவே ஐயம் கொள்ள வேண்டியுள்ளது.

வசதியான சமூகப்பிரிவுகளை, குடும்பங்களைச் சார்ந்த மழலையருக்கு கல்வி, இரண்டரை வயதில் மழலையர் பள்ளிகளில் துவங்குகிறது. சாமானியர் - ஏழைவீட்டுப் பிள்ளைகளின் கல்விப்படிப்பு 5 வயதில் ஆரம்பிக்கிறது.


வசதியான சமூகப்பிரிவுகளை, குடும்பங்களைச் சார்ந்த மழலையருக்கு கல்வி, இரண்டரை வயதில் மழலையர் பள்ளிகளில் துவங்குகிறது. சாமானியர் - ஏழைவீட்டுப் பிள்ளைகளின் கல்விப்படிப்பு 5 வயதில் ஆரம்பிக்கிறது. இந்த இரண்டரை ஆண்டு கால இடைவெளியை எங்கு, எப்படி நிறுவப் போகிறோம்? இந்த இடைவெளியை வைத்துக்கொண்டு சமச்சீர் கல்வி என்பதை எவ்வாறு அடையமுடியும்?

கல்வித்திட்டம் என்பது மழலையர் - சிறுவர்களின் வயது, வேறுபட்ட குடும்ப, சமூகப் பின்னணி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, எந்தெந்தக் கூறுகளை பொதுக் கல்வித்திட்டத்தில் இணைக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். உடற்பயிற்சி, மனப்பயிற்சி, விளையாட்டுகள், உடலுழைப்பு, ஒழுக்கக்கல்வி, திறன் வளர்த்தல் போன்ற பல்வேறு கூறுகளை எந்தெந்த அளவில் புகுத்துவது என்பதை அந்தக்கல்வித்திட்டம் தீர்மானிக்க வேண்டும். ஓவியம், இசை, நடனம், கைவினைத்திறன் போன்றவை கல்வித்திட்டத்தின் உள்ளடக்கமாக இருக்க வேண்டும். வெவ்வேறு விதமான கூறுகளுக்கு வெவ்வேறு தகுதிகளைக் கொண்ட பயிற்சி ஆசிரியர்களையும், வட்டாரங்களுக்கு ஏற்றாற்போல் ஆசிரியர்: மாணவர் விகிதத்தையும் கல்வித் திட்டம் குறிப்பிடவேண்டும். குறைந்தபட்ச கல்விச்சாதனத் தேவைகளையும் கல்வித்திட்டம் வரையறுக்க வேண்டும். பொதுப்பள்ளிக் கல்வி எளிமையாக, இனிமையாக, உற்சாகமூட்டக்கூடியதாக, மழலையர் சிறுவர்களின் அறிவையும், திறனையும் மேம்படுத்தக் கூடியதாகவும் இருப்பதற்கு இந்த சமச்சீர்க் கல்விக்கான கல்வி திட்டத்தினை (curriculam for equatable standard education) கல்வியாளர்களுடனும் சமூக ஆர்வலர்களுடனும் கலந்து பேசி உருவாக்க வேண்டும்.

கல்வி என்பது வலிமைக்கான கருவி என்று கூறுவது இன்றைய மரபு. ஆனால், காரல் மார்க்ஸின் கருத்துப்படி, கல்வி என்பது வலிமையுள்ளவர்களின் அதிகாரப்பீடங்களின் கருவியாகவே இருந்து வந்துள்ளது. மதவாதிகள் அதிகாரத்திலுள்ளபோது மதவாத அரசு (Theocracy) நடைபெறும் போது மதக்கல்வியினைத் திணித்து, அதன் மூலமாக தங்களை நியாயப்படுத்தவும், தெய்வீகப்படுத்தவும், வலிமைப்படுத்தவும் முனைவர்; இனவெறி அரசுகளோ (ஹிட்லரின் நாசி அரசு) இனவெறிக்கல்வியைக் கருவியாக பயன்படுத்துவர், அரசவம்சங்களோ தங்களது வம்சங்களை இந்திரகுலம், சந்திரகுலம், சூரிய குலம், அக்கினி குலம், தேவகுலம் என்றெல்லாம் புனிதப்படுத்தக் கல்வி அமைப்புகளைப் பயன்படுத்தினர்.

ஆங்கில காலனியாதிக்கத்தின்போது, கல்வித்திட்டமும், பாடத்திட்டமும், ஆங்கிலேய நாகரிகத்தின் பெருமையையும், ஆங்கில ஆட்சியின் நியாயத்தையும் தேவையையும் வலியுறுத்தவே கருவிகளாகப் பயன் பட்டன.

அரசாணையும், அரசனது எதேச்சதிகாரத்தையும் புனிதப்படுத்தும் விதுர நீதி, தண்ட நீதி, அர்த்த சாஸ்திரம் போன்றவையெல்லாம் இவ்வாறுதான் பாடத்திட்டங்களில் கருவிகளாக்கப்பட்டன. இதே அடிப்படையில்தான் உழைப்பே இல்லாமல், தர்மங்களின் பெயரால், உழைக்கும் மக்களைச் சூத்திரரென்றும், பஞ்சமரென்றும் முத்திரையிட்டு சுரண்டி வந்த தர்மராஜ்யங்களின் கருவியாகத்தான் மனுஸ்மிருதி போன்ற ஸ்மிருதிகளும், பிற தர்மசாத்திரங்களும் கல்வித்திட்டத்தில் இடம்பெற்றன.

முற்போக்கான, பகுத்தறிவிற்கு இசைவான பொதுக்கல்வி, அதுதான் சமச்சீர் கல்வியாக இம்மக்களை வலிமைப்படுத்தும் கருவியாக மாற்றப்பட வேண்டும்.


இன்று ஜனநாயக யுகம்; மக்களாட்சியில் மக்களது அதிகாரம் என்றால், மக்களுக்கு நியாயமும் நீதியும் தருகின்ற, மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளைக் களைகின்ற, சாதி-வர்க்கபேதங்களால் பாதிக்கப்படாத, முற்போக்கான, பகுத்தறிவிற்கு இசைவான பொதுக்கல்வி, அதுதான் சமச்சீர் கல்வியாக இம்மக்களை வலிமைப்படுத்தும் கருவியாக மாற்றப்பட வேண்டும்.

எனவே இந்தச்சூழலில் ஆங்கிலம் வலிமைக்கான கருவி (English for empowerment) என்ற வாசகம் சில குழப்பங்களை, சில அச்சங்களைத் தோற்றுவிப்பதாக இருக்கின்றது. ஆங்கிலத்தின் தேவையை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் ஆங்கிலத்தின் மீதான மோகத்தை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆங்கிலம் வேண்டாம் என்ற கோரிக்கையும், ஆங்கிலமே பாடமொழியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இரண்டுவிதமான முரண்பட்ட தீவிரத்தன்மை கொண்ட கோரிக்கைகளாகும்.

சமச்சீர் கல்வி என்ற அடிப்படையில் மொழிப்பிரச்சனையை அணுகும்போது ஓர் உண்மையை நாம் தட்டிக்கழிக்க முடியாது. ஜப்பான், சீனா போன்றில்லாமல் இந்தியா ஒரு கூட்டாட்சி. அதுவும், பல்வேறு மொழி, பண்பாட்டு இனங்களைக் கொண்ட கூட்டாட்சி. அமெரிக்கக் கூட்டாட்சியிலும், ஆஸ்திரேலியக் கூட்டாட்சியிலும், ஆங்கிலம் மட்டும்தான் ஒரே மொழி. ஜெர்மானியக் குடியரசில் ஜெர்மானிய மொழி மட்டுமே. சோவியத் யூனியன் வாழ்ந்திருந்தபோது வட்டாரமொழிகளுடன் ரஷ்ய மொழியும், சுவிட்சர்லாந்தில் (மிகச்சிறிய ஒரு கூட்டாட்சி) மூன்று ஐரோப்பிய மொழிகள்.

வட்டார மொழியுடன் வேறு ஒரு தொடர்பு மொழியின் தேவையை நாம் மறுதலித்துவிட்டால், சிபிஎஸ்இ பிரிவில் உயர்சாதியினர், மாநிலக் கல்வி அமைப்பினர், கீழ் சாதியினர் என்று ஒரு புதிய வர்ணாசிரமம் தோன்ற நாம் காரணமாகிவிடுவோம்.


இத்தகைய தனித்தன்மை கொண்ட கூட்டாட்சியில் மையக்கல்வி அமைப்பு களை முற்றிலுமாக மாற்றிவிட முடியுமென்றோ, குறைத்துவிட முடியுமென்றோ தோன்றவில்லை. எனவே வட்டார மொழியுடன் வேறு ஒரு தொடர்பு மொழியின் தேவையை நாம் மறுதலித்துவிட்டால், சிபிஎஸ்இ பிரிவில் உயர்சாதியினர், மாநிலக் கல்வி அமைப்பினர், கீழ் சாதியினர் என்று ஒரு புதிய வர்ணாசிரமம் தோன்ற நாம் காரணமாகிவிடுவோம்.

வட்டார மொழிக்கல்வியை வலியுறுத்துகிறோம். அதே நேரத்தில் ஆங்கில மொழியை சரிவரக் கையாளுகின்ற திறனை 10 வது வகுப்பு முடிவதற்குள் மாணவருக்கு உறுதி செய்யும் பொறுப்பும் நமக்கு உண்டு. இப்போதும் ஆங்கிலம் ஒரு மொழிப்பாடமாக கட்டாயப் பாடமாக இளநிலை பட்டப்படிப்பு வரை தொடர்கிறது. ஆனாலும் ஆங்கிலமொழித் திறன் பொதுப்பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு இல்லாமல் போவதேன்? திட்டமிடுதலில் குறைபாடுள்ளதா? நடைமுறைப்படுத்துவதில் ஈடுபாடின்மை, அக்கறையின்மை, நாணயமின்மை உள்ளதா? ஒன்றாம் வகுப்பிலிருந்தோ, மழலையர் பள்ளியிலிருந்தோ ஆங்கில மொழிப்பாடமோ, ஆங்கிலவழிப் பாடமோ என்பது பொறுப்பற்ற பிதற்றலாகவே படுகிறது. ஓரிரு வாரங்களில் ஆங்கிலத்தில் எழுதவும், பேசவும் செய்திட சில தனியார் அமைப்புகளால் முடியுமென்றால், ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளில் ஆங்கில மொழிப்பாடத்தின் மூலமாக ஆங்கில மொழித்திறனை உறுதி செய்ய முடியாதா? இதே நிலைதான் தாய்மொழி அல்லது வட்டார மொழித்திறன் தொடர்பானவற்றிலும் இருக்கிறது. மொழியும் மொழிவழிப்பாடமும் புதிய சமூக இடைவெளிகளைத் தோற்றுவிக்காமல் சமச்சீர் கல்வியை உருவாக்குவதற்கு பொறுப்பானவர்கள் சிந்திக்க வேண்டும். செயல்படவேண்டும்.

சமச்சீர் கல்வி ஒரு தேசியத் தேவை. இந்தக் கோரிக்கையின் அடிப்படையான உளப்பாங்கு பரிதாப உணர்வோ, பரிவுணர்ச்சியோ அல்ல. ஏதோ இல்லாதவர்களுக்கு ஒரு கவளம் உணவை தாராள(?) மனப் பான்மையுடன் தருவதைப் போன்ற மேட்டுக்குடி அணுகுமுறை, ஜனநாயக சமத்துவ நோக்கங்களுக்கு முரணானது. இது பாச உணர்ச்சியுடன், என்னைப்போல என் சகோதர மக்களுக்கும் வாய்ப்பும், வளர்ச்சியும் செழிப்பும் வேண்டும்; எனவும், எனது சக சமூக உறுப்பினர்களும் நிறைவாக இருக்க வேண்டுமெனவும் ஒரு உளப்பாங்கு (mindset) இதில் தேவை. மனிதநேயம் மட்டுமல்ல, மனிதநியாயமும் இதில் நம்மை வழிநடத்த வேண்டும். அந்த உளப்பாங்கும், அணுகுமுறையும்தான் உண்மையான நாட்டுப்பற்றை வெளியிடுவதாகவும், நடைமுறைப்படுத்துவதாகவும் அமையும்.

No comments:

Post a Comment