Thursday 2 December 2010

குறைமாதக் குழந்தையை பாதுகாப்பது எப்படி?

குறைமாதக் குழ‌ந்தையை இன்குபேட்டரில் வைத்து இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

ஏனெனில், குழந்தையின் உடல் பரப்பு அதிகமாகவும், தோலுக்கு அடியில் கொழுப்புச் சத்து குறைவாகவும், தசைப் பெருக்கம் இல்லாமலும் வெப்பத்தை ஒரே நிலையில் வைத்திருக்கும் மூளையின் மு‌க்கிய பாகம் சரியாக முதிர்ச்சி அடையாமலும் இருப்பதால் உடம்பில் சூடு ஏறாது.

வியர்க்கும் சக்தி குறைவாக உள்ளதால் உடல் வெப்பத்தை சீராக வைத்துக்கொள்ள உடல் போராடும். இவற்றைத் தவிர்க்கவே இன்குபேட்டர் பயன்படுத்தப்படுகிறது.

இன்குபேட்டர் இல்லாத இடத்தில் என்ன செய்வது?

குழந்தையை ஒரு துணியில் சுற்றி தொட்டிலின் ஓரத்தில் இளஞ்சூட்டில் சுடுநீர்ப்பையை வைக்க வேண்டும். சுடுநீர்ப்பை குழந்தையின் தோலில் பட்டு சுட்டுவிடாதபடி துணியால் மூடி மிகக் கவனமாக வைக்கவேண்டும்.

குழந்தைக்கு கதகதப்பாக இருக்க கம்பளி ஆடையோ, வெப்ப நாட்களாக இருந்தால் பருத்தி ஆடையோ உடுத்த வேண்டும்.

குழந்தையைப் பாதுகாக்க 27 முதல் 32 செல்சியஸ் சூடு இதமாக இருக்கும்.

முதலிரண்டு நாட்களுக்கு குளுக்கோஸை சிரை வழியாக சொட்டுச் சொட்டாக ஏற்ற வேண்டும். தாய்ப்பாலை உறிஞ்சும் அளவுக்கு குழந்தைக்கு சக்தியிருந்தால் இங்க் பில்லர் அல்லது பாலாடை அல்லது சிறிய கரண்டியில் பால் எடுத்து குழந்தைக்கு புகட்ட வேண்டும்.

குழந்தைக்கு மூச்சுவிடும் திறன் மிகக் குறைவாக இருக்கும். எண்டோட்ரெக்கியல் போன்ற உட்செலுத்தும் மூச்சுக்குழல் சாதனங்களைப் பொருத்தி சுவாசத்தை சீராக்க வேண்டும்.

தாயார் மிகவும் சுத்தமாகவும், குழந்தை இருக்கும் இடத்தில் சளி, இருமல் போன்ற தொல்லைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மருத்துவமனைக்கு வரும் உறவினர்களை குழந்தையைப் பார்க்க அனுமதிக்கக்கூடாது.

மருத்துவமனையிலிருந்து குழந்தையை வீட்டுக்கு எடுத்துச்சென்றால் கதகதப்பான பஞ்சணையில் வைத்திருக்க வேண்டும். தரையில் படுக்கவைப்பது, குளிரான சூழலில் குழந்தையை வைத்திருக்கக் கூடாது.

தாய் தனது பாலை பீய்ச்சி மெல்ல புகட்ட வேண்டும். குழந்தையைக் குளிக்க வைக்காமல் துடைத்தெடுக்க வேண்டும்.

மருத்துவர் சொல்லும் வழிமுறைகள் அனைத்தையும் கேட்டு தவறாமல் நடந்துகொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment