Thursday 2 December 2010

MONDAY, NOVEMBER 29, 2010 விக்கிலீக்ஸ் வெளியிடும் தகவல்களில் இலங்கை தொடர்பான் 3000 இரகசிய ஆவணங்கள்

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் மீது அமெரிக்கா நடத்திய போர் தாக்குதலில் வெளிவராத விசயங்களை ஒவ்வொன்றாக விக்கிலீக்ஸ் என்ற இணையதளம் வெளியிட்டு வருகிறது. தற்போது அமெரிக்கா தனது நட்பு நாடுகளான இங்கிலாந்து, கனடா, சவுதி அரேபியா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளை பற்றி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் பிற விசயங்கள் குறித்து விக்கிலீக்ஸ் 30 லட்சம் ஆவணங்களை தன் வசம் வைத்திருப்பதாக கூறியது. அதனை வெளியிட இருப்பதாகவும் அது கூறி வந்தது. இந்த நிலையில் இன்று 2 லட்சத்து 50 ஆயிரம் ஆவணங்கள் அடங்கிய தகவல்களை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது. இதுபற்றிய முக்கிய தகவல்கள் வருமாறு:-

அமெரிக்க அதிகாரிகள், ஐ.நா. அமைப்பின் பொது செயலாளர் பாங்கி-மூன் மற்றும் பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள நிரந்தர உறுப்பினர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பற்றி ரகசியமாக சில விசயங்கள் சேகரிப்பு.

அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவரின் தவறான அணுகுமுறை, ஆப்கான் நாட்டில் இங்கிலாந்து இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் டேவிட் கேமரூன் பற்றி அவரது விமர்சனம் தகவலில் இடம்பெற்றுள்ளது. மேலும் அமெரிக்க அதிகாரிகள், ஈரானிய அதிபர் அகமதினிஜாத்தை அடால்ப் ஹிட்லர் என சித்தரித்துள்ளனர். பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி, ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின், ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் கர்சாய் மற்றும் ஜெர்மன் நாட்டு வேந்தர் ஏஞ்சலா மெர்கல் ஆகியோரையும் அமெரிக்க அதிகாரிகள் கேலி செய்துள்ள தகவல் வெளிவந்துள்ளது.

இதே போல் மிக முக்கியமான தகவலாக சவுதி அரேபிய அரசர் அப்துல்லா தொடர்ந்து அமெரிக்காவை ஈரான் நாட்டின் மீது தாக்குதல் நடத்துமாறு கூறி வந்ததாகவும் அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்துல்லா, அமெரிக்காவிடம் அந்த பாம்பின் தலையை அறுத்தெறியுங்கள் என 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் எகிப்து ஆகிய நாட்டின் தலைவர்கள், ஈரான் நாட்டினை தாக்கி பேசியுள்ளனர். மேலும் அந்த நாட்டின் மீது தாங்கள் போர் தொடுக்க தயாராக இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கிறது.

ஆப்கானிஸ்தான் துணை அதிபர் மசூத் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டிற்கு கடந்த வருடம் சென்றார். அப்பொழுது அவர் தன்னுடன் 52 மில்லியன் டாலர் மதிப்பிலான பணத்தை எடுத்து சென்றதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். உடனே காபூலில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் தலையிட்டு அது பற்றி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமலிருக்க உதவி செய்தது. (எனினும் மசூத் ஆப்கான் நாட்டை விட்டு வெளியே செல்லும் போது தான் எந்த பணத்தையும் எடுத்து செல்லவில்லை என மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.)

கடந்த 2007-ஆம் ஆண்டில் இருந்து, பாகிஸ்தான் தனது நாட்டில் யூரேனியம் செறிவூட்டப்பட்ட அணு உலைகளை அமைப்பதை தடுக்க அமெரிக்க அரசு பல முயற்சிகள் எடுத்து வந்துள்ளது. எனினும் அது வெற்றி தரவில்லை. குறிப்பாக கடந்த 2009ல் மே மாதம் அமெரிக்க தூதர் அன்னி பேட்டர்சன் தங்களது தொழில்நுட்ப வல்லுநர்களை அந்நாட்டிற்கு அனுப்ப முடிவு செய்தது. ஆனால் இதற்கு பாகிஸ்தான் அரசு ஒத்துழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது நாட்டிற்கு அனுப்பிய செய்திகள் மற்றும் அது பற்றிய விவரங்கள் என 5 ஆயிரம் தகவல்களை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது. மேலும் காத்மண்டு பற்றிய 2 ஆயிரம் தகவல்களும், கொழும்பு பற்றிய 3 ஆயிரம் தகவல்கள், இஸ்லாமாபாத் பற்றிய 2 ஆயிரம் தகவல்கள் என பட்டியல் செல்கிறது.

அமெரிக்க அரசாங்கம் இரகசியமாக சில உளவு பிரிவு அதிகாரிகள் உதவியுடன் சீனா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் நிரந்தர பாதுகாப்பு கவுன்சில் பிரதிநிதிகளை குறிவைத்து பல வேலைகளை செய்ததாக ஆவணங்கள் தெரிவிக்கிறது. இந்த நாடுகளில் குறிப்பாக கியூபா, எகிப்து, இந்தியா, இந்தோனேஷியா, மலேசியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, சூடான், உகாண்டா, செனெகல் மற்றும் சிரியா ஆகியவை அடங்கும். மேலும் அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் ஹிலாரி ஐ.நா. பொது செயலாளர் தொடர்பாக சில தகவல்களை சேகரித்ததாகவும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2002ல் இருந்து சீன நாட்டின் அரசு துறை அதிகாரிகள் மற்றும் அரசால் நியமிக்கப்பட்ட தனியார் பாதுகாப்பு வல்லுநர்கள், இணையதள கிரிமினல்கள் ஆகியோர் இணைந்து அமெரிக்க அரசின் கணினிகள், கூகுள் இணையதளம் மற்றும் தலாய் லாமாவின் கணினிகள் ஆகியவற்றை முடக்கும் பணியினை செய்தனர்.

துருக்கி நாட்டில் இஸ்தான்புல் நகரத்தில் நடைபெற்ற தீவிரவாதத்திற்கு எதிரான மாநாட்டில் இந்தியாவிற்கு அழைப்பு விடுக்கவில்லை. இது பற்றி துருக்கி நாட்டின் அப்போது இரு தரப்பு நாடுகளின் அரசியல் விவகார துறை துணை செயலாளராக இருந்த சாய்சல் கூறும் போது, பாகிஸ்தான் நாடுடன் இந்தியாவுக்கு உள்ள பிரச்சனையை முன்னிட்டு அப்போது இந்தியா கூட்டத்தில் பங்கேற்க அழைக்கப்படவில்லை என கூறினார். தீவிரவாதம் தொடர்பான விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட இந்த மாநாட்டில் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஈரான் அரசு, மேற்கு ஐரோப்பாவை தாக்குவதற்காக, வட கொரியாவிடமிருந்து ஆயுதங்களை வாங்கி குவித்துள்ளது.

பட்டப் பெயர்கள்...

அமெரிக்கா சர்வதேச தலைவர்களை கேலி செய்யும் வகையில் அவர்களுக்கு பட்டபெயர் சூட்டி உள்ளது

பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசிக்கு (ஆடைகள் இல்லாத பேரரசர்)
இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனிக்கு (செயல்திறனற்ற தலைவர்)
ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வேதேவுக்கு (புடினின் கையாள்)
புடினுக்கு (ஆல்பா டாக் )
ஈரான் அதிபர் மஹமூத் அகமதி நிஜாதுத்( ஹிட்லர்).
வடகொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் (மனவலிமையற்ற வயதானவர்)

இங்கிலாந்து பற்றி ,,,,

முன்னாள் இங்கிலாந்து தொழிலாளர் துறை மந்திரியை பெண்கள் பின்னால் சுற்றும் வேட்டை நாய் என்றும் இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூவின் நாடு கடந்த தவறான நடவடிக்கைகள் ஐ.நா. அதிகாரிகளின் கிரெடிட் கார்டு விவரங்கள், கைரேகை பதிவுகள் மற்றும் டி.என்.ஏ. பற்றிய விளக்கங்கள் ஆகியவை ஹிலாரியின் உத்தரவின் பேரில் சேகரிக்கப்பட்டுள்ளது.



Written By ilankainet at Monday, November 29, 2010

No comments:

Post a Comment