Thursday 9 December 2010

இசைப்பிரியா படுகொலை தொடர்பாக புதிய தகவல்கள்! செட்டிகுளம் முகாமில் வைத்தே கைதானார்?


வன்னியில் பணிபுரிந்த பெண் ஊடகவியலாளரான இசைப்பிரியாவின் கொடூரமான படுகொலை தொடர்பாக வெளிவந்திருக்கம் புதிய தகவல்கள் இது ஒரு அப்பட்டமான போர்க் குற்றம் என்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது என இது தொடர்பான தகவல்களைச் சேகரிக்கும் ஐரோப்பிய ஊடக வட்டாரங்கள் தெரிவித்தன.


27 வயதான ‘சோபா’ எனப்படும் இசைப்பிரியா விடுதலைப் புலிகள் அமைப்பிடம் ஆயுதப் பயிற்சிகள் எதனையும் பெற்றுக்கொள்ளாத ஒருவர் என்பதுடன், இருதய நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளியாக அவர் இருந்தமையால் ஊடகத் துறையிலேயே அவர் தொடர்ந்து பணிபுரிந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

வன்னிப் பகுதிக்கு விஜயம் செய்த அமெரிக்க மற்றும் அவுஸ்திரேலிய மருத்துவக்குழுவினரிடம் இவர் தன்னுடைய இருதய நோய் தொடர்பிலான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டதை தன்னால் காணக்கூடியதாக இருந்தது என வன்னியில் பணியாற்றிய பணியாளர் ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.

இசைப்பிரியாவின் ஒரேயொரு குழந்தையான அகல் பதுங்குகுழி ஒன்றில் மறைந்திருந்த நிலையில் கிபிர் தாக்குதலில் படுகாயமடைந்து 2009 மார்ச் மாதம் 15 ஆம் திகதி மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்தது.

2009 மே மாதம் 8 ஆம் திகதி வரையில் முள்ளிவாய்க்கால் தற்காலிக மருத்துவமனையில் ஒரு தொண்டராக இசைப்பிரியா பணியாற்றியுள்ளார். போரின் முடிவில் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்த இவர், செட்டிகுளம் முகாமில் வலையம் 4 இல் தங்கியிருந்த நிலையில் 2009 மே 23 அல்லது 24 ஆம் திகதி சிறிலங்கா படையினரால் கொண்டு செல்லப்பட்டார்.

இசைப்பிரியாவுடன் மற்றொரு பெண்மணியும் படையினரால் முகாமில் வைத்துக் கைதுசெய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டதாக அதேமுகாமில் அப்போதிருந்த பணியாளர் ஒருவருடைய மனைவி தெரிவிக்கின்றார்.

படையினரால் கண்கள் கட்டப்பட்ட நிலையிலான இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்படும் காணொளி முதல் முறையாக 2009 ஆகஸ்ட் 25 ஆம் திகதியே வெளியிடப்பட்டது. அதில் குறிப்பிட்ட காணொளி பதிவு செய்யப்பட்ட திகதியாக 2009 ஜுலை 18 எனத் தெரிவிக்கப்படுகின்றது. அந்தக் காணொளியின் தற்போது வெளியாகியுள்ள அதிக நேரம் நீடிக்கும் காட்சியிலேயே இசைப்பிரியா கொல்லப்படும் காட்சி உள்ளடக்கப்பட்டுள்ளது.

இசைப்பிரியா போரின் போது கொல்லப்பட்டதாக படைத் தரப்பு முன்னர் தெரிவித்தது ஆனால், இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாமிலிருந்து சிறிலங்கா படையினரால் கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே இவர் கொல்லப்பட்டடுள்ளார் என தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் இது ஒரு அப்பட்டமான மனிதாபிமானத்துக்கு முரணான போர்க் குற்றம் என்பதை உணர்த்துவதாக அமைந்திருக்கின்றது என மனித உரிமை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment